மார்கழி மணாளன் – 26 – திருக்கோஷ்டியூர் -ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
நல்லோரும் வல்லோரும் நான் முகனும்
நமச்சிவாயத்தொடு கூடிய திருத்தலமே !
ஊர்வாழ உலகம்வாழ கைகோர்த்து வாழ
உள்ளங்கள் ஒன்றாக்கி காட்டிய தத்துவமே !
பூவலகில் கண்ணனின் கால் வண்ணம்
பாற்கடலில் கிடக்கும் உடல் வண்ணம்
வைகுந்தத்தில் அவன் முழுவண்ணம்
மூவுலகும் ஒன்றாக்கும் எழில் வண்ணம் !
நானென்று வந்தான் நல்லதோர் மாணவன்
நாரணன் மந்திரம் நம்பியிடம் கற்றிட
வாவென்று சொல்ல மறுத்து வருத்தியே
வந்தானைத் திருப்பினார் ஆசானும் நம்பியே !
நானழிந்து வந்தவன் நற்கதி பெற்றிட
நாரணன் அட்சர மந்திரம் அறிந்தான் !
நானிலம் அனைத்துமே நற்கதி பெற்றிட
நற்கோவில் மேல்நின்றே ஒதிட்டான் !
நரகத்தின் பயமில்லை நல்லதோர் நெஞ்சுக்கு
நானிலம் வாழ்ந்திட்டால் நலமே உலகுக்கு
சாதியும் மதமும் சந்நிதியில் ஒன்றுதான்
சமத்துவப் பார்வை கண்ணனின் கீதைதான் !
பெருமாளின் அருள்பெற்ற அந்தணன் ராமனுஜன்
பெருந்தகை நம்பியின் ஆசியால் எம்பெருமான் !
ஊரினைக்கூட்டி திருவடி மந்திரம் தந்தவன்
திருவருள் பெருக்கிட்ட திருமாலின் திருத்தலம் !