-மெய்யன் நடராஜ் 

பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கிப்
-பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி
நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்
-நினைக்கின்ற சுகமுமொரு அமைதி.

தேங்காய்க்குள் ளிருக்கின்ற தீர்த்தத்தைப் போலினிக்கும்
-தெய்வீகத் தன்மையுள அமைதி
வாங்காத கடனுக்கு வட்டியுடன் முதலாக
-வந்துவிடும் ஆனந்தம் அமைதி.

தூங்காமல்  வதைக்கின்ற  துயரத்தில் வாடுகையில்
-தூரத்தே போய்நிற்கும் அமைதி
தாங்காத துயரங்கள் தனைஏந்தி வைத்தமனம்
-தூர்வார ஊற்றெடுக்கும் அமைதி.

ஏங்காத இதயத்தில் இதமாகப் பதமாக
-என்றென்றும் குடியிருக்கும் அமைதி
தீங்கற்ற எண்ணத்துள் திளைக்கின்ற ஆசைக்குத்
-தேனாலே நீராட்டும் அமைதி.

இல்லாத பேருக்கு இருப்பதிலே ஏதேனும்
-ஈவதிலே கிடைக்கின்ற அமைதி
பொல்லாத மனிதர்களின் புகழ்வாக்கின் போதையிலே
-புளகாங்கிதம் கொள்ளாத அமைதி.

கல்லாத பேர்களிடம் கவலையற்றுக் கிடந்தேனும்
-கண்ணுறக்கம் கொடுத்துவிடும் அமைதி
சொல்லாத வார்த்தைகளின் சுகமான அர்த்தத்தில்
-சுகராகம் இசைத்துவிடும் அமைதி.

உனக்குள்ளே உனைத்தாங்கும் உயிர்த்தூணாய் இருக்கின்ற
-உள்ளத்தின் உறுதியெனும் அமைதி
தனக்கென்ற கொள்கைக்குத் தடைபோட்டு பிறர்க்கென்று
-தான்வாழச் சொல்கின்ற அமைதி.

இனத்துக்கும் சனத்துக்கும் எப்போதும் போராடி
-இழக்கின்ற சந்தோசம் அமைதி
எனக்கென்றும் உனக்கென்றும் எல்லாமே பொதுவானால்
-இழப்பற்று இருந்துவிடும் அமைதி

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *