பவள சங்கரி

DSC_0390[2]

இதமான வெம்மை, இனிமையான தென்றல், ஆக பதமான பருவ நிலையென கேரள மாநில எல்லையை நெருங்கும்போதே இனம் புரியாத ஒரு பரவச நிலை உணரச் செய்வது உண்மை. சமயம் வாய்க்கும்போதெல்லாம் கேரளப் பயணம் செல்ல விரும்பும் எனக்கு எப்பொழுதும் நேரும் அனுபவம்தான் இது. திரும்பிய புறமெல்லாம் கண்ணிற்கு குளிர்ச்சியான இயற்கை வளங்கள். பெரும்பாலான பகுதிகள் எந்த செயற்கைப் பூச்சும் இல்லாமல் அப்படியே கிடப்பதுதான் இந்த அழகிற்கான மூல காரணம் என்று தோன்றுகிறது. ஒரு சில நேரங்களில் அப்படியே இந்த இயற்கை இனிமையினூடே கரைந்து மறைந்து போனால்தான் என்ன என்றுகூடத் தோன்றும்… அது சரி… நமக்கு ஆசைதான், அந்த இன்னமுதில் இணைந்துருகிப்போக.. இயற்கை அன்னை அதற்கு ஒப்புதல் அளித்து நம்மை ஏற்பதற்கு இரக்கம் காட்டவேண்டுமே.. !

DSC_0395[1]

கேரள மாநிலத்தில் பெரும்பாலும் பல இடங்களுக்கு கால்நடையாக மட்டுமே செல்ல வேண்டியிருக்கும். குறிப்பாக வயநாட்டில் வலம் வர நினைப்பவர்கள் மலைப்பாதைகளில் பல மைல் தொலைவுகள் நடக்கத் தயங்காதவராக இருக்கவேண்டியது அவசியம்! பசுமையான காடுகளும், வளமான நீர் நிலைகளும், வண்ண மலர்களும் கூடிக் குலவியிருக்கும் குளிர் பிரதேசமான இதற்கு, வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே ‘வயநாடு’ என்ற பெயர் அமைந்துள்ளது. மலையேற்றப் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம். விண்ணை முட்டும் நெடிதுயர்ந்த மரங்களும், கண்ணைக் கவரும் வண்ண வண்ணக் காட்சிகளும் அணிவகுத்து அழகு காட்டும் அற்புதமான இயற்கை வடிவினூடே வலம் வருவது வரமல்லவா? ஒரு சில நாட்கள் தங்கியிருந்து ஒவ்வொரு பகுதியாக அனுபவிக்க வேண்டிய இடம். கிட்டத்தட்ட மூன்று நாட்களில் ஒரு நாள் பயணத்தில் கழிந்ததில் 2 நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததில் எங்கள் பயணம் முழுமையடைந்த திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் இன்னொரு முறை பயணப்பட வேண்டும் என்ற ஆவலே மேலோங்கியுள்ளது. ஆன்மாவைத் தீண்டும் அமைதியான அழகோவியம்!

DSCN1938

இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, ஆதி காலத்தில் வேடர் ராசாக்களால் ஆளப்பட்ட வயநாடு, பிற்காலங்களில் கோட்டயம் அரச வம்சத்தினரின் வழிவந்த பழசி ராசாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. வயநாடு மாவட்டத்தின் நவீன வரலாறு என்பது மைசூர் படையெடுப்பு மற்றும் இரண்டு நூற்றாண்டுகளாக கட்டிவைத்திருந்த பிரித்தானிய ஆட்சியும் உள்ளடங்கியதாகும். ஆங்கிலேயர்களுக்கும், பழசி ராசாவிற்கும் இடையே கடும் போர் நிலவியிருந்தது. 1956 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் உருவானபோது, வயநாடு கண்ணனூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1957 ஆம் ஆண்டில் தென்வயநாடு கோழிக்கோடு மாவட்டத்துடனும், மற்றும் வடக்கு வயநாடு கண்ணனூர் மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் 1980 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கேரளாவின் 12 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

DSCN1924

முன்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. 2,131 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வயநாடு , 816,558 (2011) மக்கள் தொகை கொண்டது. மானந்தவாடி, சுல்தான்பத்தேரி மற்றும் வைத்திரி தாலுக்கா போன்றவை இதில் அடங்கும். இங்கு அதிகமான ஆதிவாசி மக்கள், அதாவது மாநிலத்தின் மொத்தத் தொகையில் 36 % பேர் வயநாட்டில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 885.92 சதுர கி.மீ. பரப்பளவு காடுகளால் அமைந்துள்ளது. முழுமையாக பழங்குடியின கலாச்சாரத்தில் உள்ள இடம் இது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடம். பணப்பயிர்களான, மிளகு, ஏலம், காப்பி, தேயிலை, மசாலாப் பொருட்கள், ரப்பர், தேங்காய், இஞ்சி போன்றவைகள் விளையக்கூடிய வளமான பூமி இது. 22,772 ஹெக்டேர் நிலங்களில் நெற்பயிரும் விளைவிக்கப்படுகிறது.

DSCN1795

DSCN1937

இத்தனை வளங்கள் இங்கு கொட்டிக் கிடந்தும், கேரள மாநில மக்கள் தங்கள் முக்கியத் தேவைகளுக்கும்கூட அண்டை மாநிலங்களை நம்பியிருக்கும் நிலைதான் எனக்கு எப்பொழுதும் ஆச்சரியமேற்படுத்தும் ஒன்று. ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’ என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது. மக்கள் மன நிலையில் பெரும் மாற்றங்கள் தேவை. நம் கொள்கைகள் நம்மை முன்னேற்றுவதாக இருக்க வேண்டுமேயொழிய நம் எண்ணங்களே நம் முன்னேற்றத்திற்கு ஒருக்காலும் முட்டுக்கட்டை போட்டுவிடக்கூடாது.

DSCN1912

DSCN1952

சமீபத்தில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் பணி மாற்றம் காரணமாக கேரள மாநிலத்தில் ஒரு இடத்திற்குக் குடும்பத்துடன் குடிபெயர வேண்டியிருந்தது. சாமான்கள் நிறைந்த சரக்கு உந்து அவைகளை இறக்கும் தொழிலாளர்களுக்காக ஒரு நாள் முழுவதும் காத்துக்கிடந்த பின்பு மாலை 4.45 மணிக்கு வந்தவர்கள் கட்டணங்களையெல்லாம் கறாராகப் பேசிவிட்டு மாலை 5 மணியுடன் பணி நேரம் முடிவடைந்துவிட்டதால் அடுத்த நாள் காலைதான் இறக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மற்றும் பல விலையுயர்ந்தப் பொருட்களை வண்டியில் வெளியில் கிடக்க விடமுடியாதே என்று பலமுறை மன்றாடிக்கேட்டும் பயனில்லாமல் போக, அவர்கள் தங்கள் குடும்பத்தினரே சேர்ந்து இறக்கி வைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்கும் பலர் சேர்ந்து வந்து தகராறு செய்துள்ளனர். இறுதியில் பெரும் வாதத்திற்குப் பிறகு தாங்களே விடிய விடிய அத்துனை சாமான்களையும் இறக்கி வைத்துள்ளனர் அக்குடும்பத்தினர். இன்னொரு நண்பர் இயற்கை வளமும், அழகு நலமும் கண்டு அதன் ஆசையால் ஒரு தொழிலகம் அமைத்துவிட்டு, இன்று தொழிலாளர் பிரச்சனையால் சரிவர நடத்த முடியாமல் தவிப்பதை பகிர்ந்துகொண்டார். இங்கு குறிப்பிடும் அளவிற்கு தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாததன் காரணமும் புரிந்ததுபோல் இருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஆன்மாவைத் தீண்டும் அமைதியான அழகோவியம்!

  1. கட்டுரையும் படங்களும் அருமை பவளா. பாராட்டுக்கள்!

    அன்புடன்,
    மேகலா

  2. மிக அழகாக எழுத்தோவியம் தீட்டி, அதன் பின்னர் தரவுக்குறிப்புகள் பல தந்து, கடைசியாக குமுகநிலையையும் படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள்! அருமையான கட்டுரையும் படங்களும்.  //விண்ணை முட்டும் நெடிதுயர்ந்த மரங்களும், கண்ணைக் கவரும் வண்ண வண்ணக் காட்சிகளும் அணிவகுத்து அழகு காட்டும் அற்புதமான இயற்கை…// என விண்ணை-கண்ணை-வண்ணை எனக் கோத்து தமிழழகையும் காட்டியுள்ளீர்கள். 

  3. மலையான நாட்டின் அழகான ஓவியம் கண்டேன் ஆனந்தம் அடைந்தேன். மேலும், ராஜாதி ராஜா திரைப்பட பாடல் வரிகளான மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி என் காதில் ரீஙகாரமிட்டது. இன்பம் அடைந்தேன். அழகான தமிழில் மலையாள ஓவியத்தை வர்ணித்தமைக்கு நன்றி வணக்கம்

Leave a Reply to பவள சங்கரி

Your email address will not be published. Required fields are marked *