கற்றல் -ஒரு ஆற்றல் (14 )
க. பாலசுப்பிரமணியன்
பள்ளியின் முதல் படிகள்
மழலைகள் தங்கள் பள்ளி வாழ்க்கையை எப்போது ஆரம்பிக்கவேண்டும்? எத்தனை ஆண்டுகள் தங்கள் வீட்டில் அம்மா, அப்பாவுடனோ அல்லது தாத்தா பாட்டிகளுடனோ இருந்து வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும்?
உலகமே தாயையே முதல் ஆசானாகக் கருதுகிறது. அது முற்றிலும் உண்மை. வீடுதான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை வீட்டிலேயே இருந்து தங்கள் கற்றலை மறைமுகமாகவும் பழக்கங்கள் மூலமாகவும் ( Indirect & Informal Learning ) கற்றுக் கொண்டு வந்தனர். பள்ளிகளுக்குச் செல்லும் முன் வாழ்க்கை முறைகளைப் பற்றிய சிறிதளவு அறிவு அவர்களுக்கு இருந்தது. அவர்களின் அறிவு மட்டுமின்றி அவர்களுடைய உணர்வு நிலையம் (Emotional Status) ஓரளவு பக்குவப் பட்டிருந்தது.
காலங்களின் தேவைகளுக்கும் சமூகச் சிந்தனைகளின் மாற்றங்களாலும் இன்று குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் இரண்டாவது ஆண்டு முடிவடைந்த உடனே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். . இந்தத் தருணத்தில் குழந்தைகள் உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் முழுமையான நேரடிக் கற்றலுக்குத் தயாரான நிலையில் இல்லை. கற்றல் என்ற செயல் இயற்கையாக இல்லாமல் குழந்தையின் மூளையில் திணிக்கப் படுகின்றது .
எவ்வாறு திருமணமான ஒரு பெண்ணுக்கு தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு தவிப்பான மனநிலை இருக்கின்றதோ அதே போன்று தான் புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் மனநிலையும் !
புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும்? பொதுவாகக் கீழ்கண்ட உணர்வுகளை சொல்லலாம்.
1.அச்சம் 2. தயக்கம் 3. பாதுகாப்பின்மை 4. ஆச்சரியம் 5. புதுமை
6, சந்தேகம் ‘ 7. நம்பிக்கையின்மை 8. திருப்தியின்மை 9. உடல்சோர்வு 10. ஆர்வம்
எல்லாக் குழந்தைகளுக்கும் மேற்கண்ட எல்லா உணர்வுகளும் இருப்பதில்லை. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இவற்றில் சில உணர்வுகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புண்டு. அது குழந்தைகளின் வீட்டுச் சூழ்நிலை, சமூகச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது.
குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் போது மேற்கண்ட உணர்வுகள் ஏற்படக் காரணம் என்ன? அவற்றின் தாக்கம் எப்படிக் குழந்தையை பாதிக்கின்றது?
முதலாவதாக இடமாற்றம். (Change of Place) அறிந்த, பழகிய இடத்தை விட்டுத் தெரியாத, புதிய, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லும் பொழுது அது அச்சத்தையும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்துகின்றது. (Moving from known to the unknown)
இரண்டாவது காரணம் – ஒரு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையிலிருந்து கட்டுப்பாடு உள்ள சூழ்நிலைக்கு ( from freedom to order ) குழந்தைகள் செல்கின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது அந்தக் குழந்தை எந்த விதமான உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் படுத்துப் புரளலாம். என்ன விதமான ஒலியோ அல்லது சப்தமோ செய்யலாம். அதன் நகர்வுகளுக்கு பூரண சுதந்திரம் உண்டு.. ஆனால் பள்ளிக்குச் சென்றவுடன் இந்த சுதந்திரம் அனைத்தும் பறிபோகின்றது.
ஆகவே குழந்தைகளுக்கு ஒருவிதமான தயக்கம் மற்றும் திருப்தியின்மையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமையை சமாளிப்பது எப்படி? இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி வெளி வரலாம் என்ற எண்ணங்கள் அந்தக் குழந்தையின் மனத்தில் உருவாகின்றன.
மூன்றாவது காரணம் ( A sense of suspicion )- பார்க்கின்ற மனிதர்களும் சூழ்நிலையும் புதிதானது. இங்கு நான் பார்க்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? அன்புடன் இருப்பார்களா ? இவர்களால் எனக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என் வயதில் இங்கே இருக்கின்ற எல்லோரும் என்னைப் போன்றவர்கள்தானா? அவர்களால் என்னுடைய தனித்துவத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? இவர்களோடு நான் சரிசமமமாக விளையாடலாமா? என்னைப் பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள்? – என்ற பல ஐயப்பாடுகள் அந்தக் குழந்தைகளின் மனதில் ஏற்படுகின்றன..
மேலும் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
தொடரும். …….