செண்பக ஜெகதீசன்

 

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா

ரழுத கண்ணீரு மனைத்து.

     -திருக்குறள் -828(கூடா நட்பு)

 

புதுக் கவிதையில்…

 

நட்பு நாடிவரும்

பகைவர்

கும்பிடும் கைகளுக்குள்ளும்

கொடிய ஆயுதம் மறைந்திருக்கும்,

அவர்கள்

அழும் கண்ணீரும் அப்படி

ஆபத்து நிறைந்ததே…!

 

குறும்பாவில்…

 

நட்புநாடும் பகைவரிடம் ஆயுதமிருக்கும்

நமைவணங்கும் கைகளுக்குள்,

வஞ்சகம் நிறைந்ததேயவர் கண்ணீரும்…!

 

மரபுக் கவிதையில்…

 

நம்மிடம் வந்திடும் நட்பினிலே

     நட்பிது நாடக் கூடாததே,

கும்பிடும் கைகளின் உள்ளேதான்

     கொடிதாய்க் கொலைவாள் மறைந்திருக்கும்,

நம்பிட வேண்டாம் பகைவரிவர்

     நதியாய் வடித்திடும் கண்ணீரையும்,

அம்பென அழித்திடும் ஆயுதம்தான்

    அறிவாய்க் கூடா நட்பெனவே…!

 

லிமரைக்கூ…

 

கும்பிடுவோர் கையில்வாள் மறைந்திருக்கும்,

கொடியோர் காட்டும் கண்ணீரிலும்

பகையுடன் வஞ்சமே நிறைந்திருக்கும்…!

 

கிராமிய பாணியில்…

 

நம்பிடாத நம்பிடாத

நட்புலதான் நம்பிடாத

நடிப்பப்பாத்து நம்பிடாத,

சேத்திடாத சேத்திடாத

சேக்காளியாச் சேத்திடாத..

 

கும்புடுற கைக்குள்ளதான்

கொலவாள வச்சிருப்பான்,

கவனிச்சித்தான் பாக்காமக்

கூட்டாளியா ஆக்கிடாத..

 

அப்புடித்தான்

அவஞ்சிந்தும் கண்ணீருமே,

அதப்பாத்து ஏமாறாத

அவனநட்பாச் சேத்துடாத..

 

நம்பிடாத நம்பிடாத

நட்புலதான் நம்பிடாத

நடிப்பப்பாத்து நம்பிடாத…!

 

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *