நிர்மலா ராகவன்

நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா?

உனையறிந்தால்11
கேள்வி: இடைநிலைப்பள்ளி மாணவனான நான் எது செய்தாலும், அதில் ஏதாவது தப்பு கண்டுபிடித்து, கண்டனம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என் தாய். அவர்கள் சொல்லும் வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமாம். எனக்குப் பித்துப் பிடித்துவிடும்போல இருக்கிறது. எங்கள் இருவரில் யாரிடம் கோளாறு?

பதில்: நிச்சயம் உன்மேல் ஒரு தவறுமில்லை.

ஹெலிகாப்டர் எப்படி ஒரே இடத்தில் சுற்றுமோ அதுபோல தம் குழந்தையை ஓயாது கண்காணிக்கும் உங்கள் தாய் போன்ற பெற்றோரை ஹெலிகாப்டர் பெற்றோர் என்று வர்ணிக்கிறார்கள்.

`பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்றஞ்சி, மிகுதியாக கவனம் செலுத்தி, மகன் எது செய்யும்போதும் கூடவே இருப்பார்கள் சில பெற்றோர். `அப்போதுதானே அவனைப் பிறர் மெச்சுவார்கள்!’ என்று அவர்கள் எண்ணியதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும்.

நாளடைவில், எதற்கும் அம்மாவின் கையை எதிர்பார்க்கும் நிலை வரும் பையனுக்கு. சுதந்தரமாக எதையும் செய்துகொள்ள சோம்பல், ஒரு கையாலாகாத்தனம். பிற்காலத்தில் தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் இழப்பு, தோல்வி, ஏமாற்றம் முதலியவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தைப் பலர் இப்படித்தான் — பெற்றோரின் மிகையான அக்கறை, பாதுகாத்தல், கண்காணிப்பு முதலியவற்றால் –இழந்துவிடுகிறார்கள். .

பெற்றோர், அல்லது ஒரு சிறுவனைப் பார்த்துக்கொள்ளும் தாத்தா-பாட்டி, வெவ்வேறு காரணங்களால் இப்படி ஆகிவிடுகிறார்கள்.

1.நிறையப் படித்திருக்காதவர்களாக இருந்தால், தாம் அடையமுடியாத வெற்றிகளைத் தம் பிள்ளைகளாவது அடையவேண்டும் என்ற வெறியே இவர்கள் போக்கை நிர்ணயிக்கிறது.

2.பிறர் குழந்தைகள் எதையும் செவ்வனே செய்து முடிப்பதைக் கண்டு, தாம் பெற்றவை அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இன்னொரு காரணம். எங்காவது தொய்வு ஏற்பட்டு, தோல்வி அடைய நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அவர்களது கலக்கம் பிள்ளைகளையும் தொத்திக்கொள்கிறது என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.
3.தனது பிள்ளை செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தப்பு கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவருக்குத் தாழ்மை உணர்ச்சி மிகுந்திருக்கும். `என்னைப்போல்தானே என் மகனும் இருப்பான்!’ என்று அர்த்தமற்ற கவலை சூழ, அவன் அப்படி ஆகாதிருக்க பெருமுயற்சி எடுத்துக்கொள்வதாக எண்ணி, குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். உண்மையில், அவனை அவன் போக்கில் விட்டால் இன்னும் வேகமாக முன்னேறுவானே!

4.பிள்ளைக்கு எத்தனை வயதானாலும், அவனைச் சின்னக் குழந்தையாகவே பாவித்து, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வது அன்பு மிகுதியால் அல்ல. எங்கே மகன் பெரியவன் ஆனதும் தன்னை நிராதரவாகவிட்டுப் போய்விடுவானோ என்ற இனம்புரியாத பயம். அல்லது, `குழந்தைதானே!’ என்ற சப்பைக்கட்டு, எந்த வயதிலும்.

கதை: அந்த எட்டு வயதுப் பையனுக்கு ஒவ்வொரு வேளையும், அம்மா அல்லது பாட்டி சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டுவார்கள். யாராவது கேட்டால், `அவன் ரொம்ப நிதானமாகச் சாப்பிடுவான். கீழே ஒரேயடியாக இறைப்பான்!’ என்று காரணம் சொல்வார்கள்.

பல சிறுவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும், அந்த இடத்தை அவர்களையே சுத்தம் செய்யச்சொன்னால், சில ஆண்டுகளில் கீழே சிந்தாது சாப்பிடப் பழகுவார்கள்.

எந்த வயதிலும், சிறுவன் தானே ஒரு காரியத்தை ஏதோ தனக்குத் தெரிந்த விதத்தில் செய்துவிட்டு, அது சரியாக இல்லாதுபோனால், அதை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கலாம். தோல்வி அடைந்தாலும், அதிலிருந்து கற்கலாம் என்ற அறிவைப் புகட்ட வேண்டுவது பெற்றோரின் கடமை. அதைவிட்டு, செய்வதற்கு முன்னரே எதற்குக் கண்டனம்?

இபம்மாதிரியான சிறுவர்கள் திருமணமான பின்னரும் மனைவி தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது, இவர்களும் ஹெலிகாப்டராகி விடுகிறார்கள்.

`உடம்புக்கு ஏதாவது வந்தால், என் கணவர் குழந்தையாகி விடுவார்!’ என்று பெண்கள் பெருமையாகப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பெருமையாகத் தோன்றுவது நாளடைவில், எரிச்சலைத்தான் உண்டுபண்ணும்.

சிறு வயதில் (ஹெலிகாப்டர்) பெற்றோர் சொல்வதை அப்படியே கடைப்பிடித்து நடந்துவிட்டு, பின் அதே அதிகாரத்தை கொண்டவனுக்கு அளிக்கிறார்கள் பெண்கள்.

இம்மாதிரியான பெண்கள் தம்மை அப்படி வளர்த்த பெற்றோரை வெறுப்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். `உன்மீது உன் தாய் அவ்வளவு பாசமாக இருந்தார்களே! நீ இப்படி அவர்களை ஓயாமல் பழிப்பது நன்றாக இல்லை!’ என்று நான் நாற்பதுக்கு மேற்பட்ட ஒருத்தியைக் கண்டித்தபோது, அவளுக்கு அழுகை வந்துவிட்டது. `என் நிலையிலுள்ள எல்லாருமே இப்படித்தான், தெரியமா?’ என்று பதிலளித்தாள், வீம்புடன்.

ஓயாது தொணதொணத்தாலும், பெற்றோருக்கு தம் பெண்ணின் நலனில் இருந்த அக்கறை அவளை அதிகம் புரிந்துகொள்ளாத கணவனுக்கும் இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.

`முட்டாள்!’ என்று பிறர் எதிரிலேயே மனைவியை எதற்கெடுத்தாலும் பழிப்பார் அந்தப் `பெரிய’ மனிதர். மனைவி எது செய்தாலும், அவர் சொன்னபடிதான் இருக்கவேண்டும். அவளும் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டாள். எப்போதும் கணவரது சுகத்தையே அவள் நாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், தன் ஆற்றலை அவள் முழுமையாக வெளிக்கொணர முடியாது தடுத்துவிட்டார். தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற அச்சமாகக்கூட இருக்கலாம்.

திருமணமான புதிதில் இம்மாதிரி ஒரேயடியாக விட்டுக்கொடுத்த பெண்கள், சில வருடங்களுக்குப்பின் வெறுமையாக உணர்கிறார்கள். மனம் சஞ்சலமடைய, உடல் உபாதைகளும் எழுகின்றன.

தம்பதியர் இருவரில் யாராவது ஒருவரோ, அல்லது இருவருமேயோ விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால், சண்டை வராமலிருக்கலாம். ஆனால், மகிழ்ச்சி இருக்குமா?

ஓர் ஆங்கிலேயத் தம்பதி வீட்டுக்குப் போயிருந்தேன். `எனக்கு ஒரு டம்ப்ளர் கொண்டு வா,’ என்று கணவர் ஏவ, பத்து வருட காலம் அவருடன் இணைந்திருந்த மனைவி, `தானே போய் எடுத்துக்கொள்!’ என்று அயராமல் பதிலளித்தாள். எனக்கோ ஒரே திகைப்பு. இளவரசி டயானா தன் திருமணத்தின்போது, OBEY (கீழ்ப்படிகிறேன்) என்ற வார்த்தையை நீக்கச் சொன்னதுதான் நினைவு வந்தது.

இப்போதெல்லாம் இளம்பெண்கள், இல்வாழ்வில் தோழமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நட்பில் ஒருவரையொருவர் தட்டிக் கேட்கலாம், திருத்தலாம். புரிந்துணர்வு இருக்கும். இருவருக்குமிடையே ஒரு நல்ல இடைவெளி அமையும். தாம் விரும்பியதை விரும்பியபடி செய்துவிட்டு, அதை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வர்.
இதை விட்டு, ஓயாமல் மற்றவர் செய்வதைக் கண்காணிப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டு, அதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறுவதுபோல் இருக்குமே! இம்மாதிரியான அம்மா-பிள்ளை, அல்லது கணவன்-மனைவி உறவால் யாருக்கு இன்பம்?

தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *