-மேகலா இராமமூர்த்தி

சின்னாளும் பல்பிணியும் கொண்ட நிலையற்ற இம்மானுட வாழ்வில், அன்பெனும் பிணைப்பு மனித உள்ளங்களை இணைத்து நிற்குமானால், வறுமையிலும் செம்மையாய்ச் சிறப்பாய் வாழலாம்.

baby and grandam

 

 

 

 

 

 

 

 

 

 

அடடா! அன்பெனும் பிடியுள் அகப்பட்ட எழிற்சிலையாய்ப் புகைப்படத்தில் காட்சிதரும் இந்தக் குழந்தையின் கள்ளமற்ற முகமும், காந்தக் கண்களும் நம் சிந்தை நிறைக்கின்றன.

இவ்வழகிய புகைப்படத்தை எடுத்துள்ள திரு. ராஜவுக்கும்(?), போட்டிக்கு இதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி!

இனி இவ்வாரக் கவிதைகளுக்குச் செல்வோம்!

***

பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு வாடும் புதியமலரொன்றும், பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவை நாடும் முதியமனமொன்றும் அன்பு இல்லத்தில் அமைதியாய் இணைந்திருப்பதைப் பேசுகின்றது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

அன்பு இல்லத்தில்,
மூதாட்டியின் முணுமுணுப்பு
ஐந்து பெற்றும்
அனாதையாய் நான்,
யாரோ பெற்று
அனாதையாய் நீ..

இருவரும் ஒன்றானோம் இங்கு
பிள்ளைகள் கைவிட்டனர்
என்னை,
பெற்றவர் கைவிட்டனர்
உன்னை…!

***

முதுமையும் இளமையும் சந்தித்து வாழ்வின் பல்வேறு நிலைகள் குறித்துச் சிந்தப்பதைக் கவிமாலையாய்த் தொடுத்திருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். கவிஞர் சொல்வதுபோல், வாய்த்திருக்கும் வாழ்க்கையினைப் பேய்க்குணமின்றித் தாய்மனத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை தித்திக்கும் தேன்பாகுதான்! 

பால்யமும் முதுமையும்
ஒருவர் மடியிலே ஒருவர்.

பாலவிழிகளில்
பால்மணம் மாறா ஏக்கம்….

கால்களற்ற சிறுமியின்
கரங்களில் என்னவோ
கால்களில் பூட்டி ஓடும்
சறுக்கும் சக்கரக் கால்கள்….

[…]

கால இடைவெளி
கண்ணைக்கட்டுமோ….
ஓலமிடத்தான்
உள்மனம் சுட்டுமோ
[…]

அருகருகே அன்றொருநாள்
இளமையும் முதுமையும்
இனிதாகச் சந்தித்தன….

முகச்சுருக்கங்கள் முகவரியாம்
முதுமையினைப் பார்த்தபடி
இளவட்ட இளமைதான்
ஏளனமாய்க் கேட்டது…..

காலதேவனின் கடைவாயிலில்
கண்மயங்க நின்றதென்ன….
ஓலமிடும் உள்நாக்கின்
உணர்விழந்து நின்றதென்ன……

காலதேவனின் நுழைவாயிலில்
கால்பதிக்கும் கட்டிளமையே
பாலபருவம் படிக்கவேண்டிய
பாடங்கள்தான் நிகழ்காலம்
அனுபவங்களால் முதிர்ச்சியுற்றேன்,
அவலங்களால் அதிர்ச்சியுற்றேன்,
நினைவலையில் நிறையவரும்
நிகழுணர்வால் முதுமையுற்றேன்,

அழகிழந்ததாய் நினைக்கின்றாய்
அகவுணர்வால் அழகுற்றேன,
நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டேன்
நிம்மதியாய் இருக்கின்றேன்.
காலனவன் அழைத்தாலும்
கவலையில்லை ஏற்றிடுவேன்
வாழுங்காலம் உனதன்றோ
வாழ்ந்துவிடு இளமையிலே….

வாய்க்கின்ற வாழ்க்கையிங்கு
வாழ்நளில் ஒருமுறைதான்
பேய்த்தனமான குணம்நீக்கிப்
பெருவாழ்வு வாழ்ந்துபார்,
நோயுடலம் கொள்ளாமல்
நோன்புவாழ்வு வாழ்ந்துபார்,
தேய்பிறையாய் வாழாமல்
திருப்தியுடன் வாழ்ந்துபார்.

முதுமையிலும் சுருக்கமின்றி
முழுமையாக வாழ்ந்திடலாம்,
புதுமையெனும் இளமையோடு
பொலிவுறவே வாழ்ந்திடலாம்.

இதுகேட்ட இளமைதான்
இறுமாப்பை நீக்கிவிட்டு
எதுசரியோ அதுவொன்றே
இளமையினது வழியென்றே
பொதுவான நல்பதிலை
புன்னகையாய்த் தானளித்து
முதுமையினை வணங்கியதே
முகமலர்ந்து கரங்குவித்தே.

அடுத்து நாம் சந்திக்கவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

சாதனைபுரியும் தகுதியும் திறனும் மாதரிடம் மலையளவு குவிந்திருந்தபோதினும், வீட்டுக்குள்ளேயே பெண்ணைப் பூட்டிவைத்தனர் அன்றைய விந்தை மனிதர்! புறநானூற்றுப் பெண்புலவர் பொன்முடியாருங்கூட, ஈன்று புறந்தருதலோடு பெண்ணின் கடனை முடித்துவிட்டுச் சான்றோனாக்கும் பொறுப்பைத் தந்தைக்குத் தந்துவிட்டது நம்மைச் சற்று வருந்தவே வைக்கின்றது!

இன்றோ காலம் மாறிவிட்டது. அடுக்களையைத் துடைத்துக்கொண்டிருந்த பெண்ணரசி இன்று அண்டவெளியில் ஆராய்ச்சி செய்கின்றாள். அகத்தினுள் முடங்கிக்கிடந்தவள் இன்று சகத்தை ஆள்கின்றாள். ஆணினும் மேலாகப் பெண்ணினம் சாதிக்கும் காலமிது என்பதனைத் தக்கசான்றுகளோடு தன் அருமைப் பெயர்த்திக்கு விளக்கி, அவள் உயர்வுக்கு வழிகாட்டுகின்றார் அறிவிற்சிறந்த பாட்டி ஒருவர்!

 

புலியை முறத்தால் விரட்டிய
புறநானுற்றுப் பெண் கூட
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என
ஆணாதிக்க சிந்தனைக்குள்
அமிழ்ந்து போனாள்

போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனைத்
தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி

அடக்குதலும் அடுக்களையில்
முடக்குதலுமே தம் பணியென
எம் தலைமுறையினர்

சிறையிட்டுச் சிரித்தனர்

என் அன்புப் பேத்தியே
மாற்றங்கள் மலருகின்ற
மகத்தான தருணமிது
சமுதாயச் சன்னல்கள்
மெல்லத் திறந்து
முடங்கிக் கிடந்த நம்மீது
விடுதலை வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்ற நேரமிது

இனி ஆணுக்கு நிகராக… அல்ல
அதை விடவும் மேலாகச்
சாதித்துக் காட்டிச்
சரித்திரம் படைப்பது
நம் கடமை!

ஆணினத்தின் பலவீனமாம்
கொலை களவு காமம் மது
இவற்றில் பங்கு கேட்பதல்ல
நாம் கோரும் பெண்ணுரிமை!

ஆடைக் குறைப்பும்
அலங்கார மாற்றங்களும்
அடிமை விலங்கொடித்த
அறிகுறிகள் ஆகாது!
ஜான்ஸி ராணி முதற்கொண்டு
சானியா மிர்சா வரை
சாதனைகளால் மட்டுமே
நினைவு கொள்ளப்படுகிறார்கள்

என் செல்லமே…!
அறிவியல் அரசியல்

இலக்கியம் ஆன்மீகம்
இன்னும் பல துறைகளில்
பெண்கள் கோலோச்சும் போதுதான்
நாம் கொண்ட துயரங்கள்
நம்மை விட்டு விலகும்!

வறுமையில் வாடும் பாட்டியின்
வார்த்தைகளா இவையென
நீ வியப்பது புரிகிறது
அறிவுக்கு வறுமையில்லை
என் அன்புச் செல்லமே!

நாளைய நாடு
பெண்களால் மட்டுமே மலரும்
நம்பிக்கை கொள்
உன்னாலும் இந்த உலகம்
உயரப் போகிறது ஒரு நாள்!

 

”வறுமை என்பது வாழ்வுக்குத்தான்; அறிவுக்கு இல்லை” எனும் பாட்டியின் வைர வரிகளைத் தாங்கிநிற்கும் இந்தக் கவிதையைப் படைத்திருக்கும் திரு. கொ. வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

***

‘வாழ்க்கை என்பது ஊழின் வழியில் பயணிக்கும் தன்மையது’ என்பது மாந்தரின் பரவலான எண்ணம். இதனையே, ’நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம்’ என்று பறைசாற்றுகின்றது பூங்குன்றனாரின் புறப்பாட்டு!

 

இதோ…இங்கே முதுமையின் மடிமையில் தலைசாய்ந்திருக்கின்றது இளமை. ஆனால் முதுமை, இளமைக்கு எத்தனைநாள் காவலாய் இருக்கவியலும்? குழந்தையின் வருங்காலம் நல்லமனிதர்களின் துணையால் நலமாய் இருக்கவேண்டுமே எனக் கவல்கின்றது ஒரு கவிதை!

 

என்ன என்ன எண்ணங்கள் இச்
சின்னப் பெண்ணின் நெஞ்சினில்
சின்னச் சின்ன விழிகளினுள்
தேங்கி நிற்கும் ஏக்கங்கள்

நாளையிந்த வாழ்வினில் தான்
பயணம் போகும் பாதையில்
தைக்கப் போகும் நெருஞ்சி முட்கள்
தரப்போகும் வலிகளை எண்ணுகிறாளோ?

பாட்டியவள் மடியிலே இன்று
பாவமவள் வாழும் வாழ்க்கை தரும்
பாதுகாப்பு தொடர்ந்திடுமோ புவியில்
பாட்டி கதை முடிந்து போனால்!?

வாழ்வு தனது பரீட்சைகளை அவளுக்கு
வழங்கி மனதை வலுப்படுத்திநாளை
மங்கையரெல்லாம் பெருமைப்படும் வகை
மாண்புமிகு புகழ் அடைந்து உயர்ந்திடுவாளோ?

காலமொரு விசித்திர காற்றாடி
சுற்றிச் சுற்றி வரும்போது அவரவர்
சூழல் எங்கு நிலை கொள்ளுமோ வாழ்வுச்
சூத்திரமே அதுதானே அகிலத்தினிலே

பிஞ்சு மனக் கனவுகள் அவளை வாழ்வில்
விஞ்சுமொரு நிலைக்கு உயர்த்தும் வகை
நானிலத்தின் மனிதவகை உழைத்திட்டால்
நாளையந்தச் சிறுமியின் விழிகளில் நாம்
காண்பதெல்லாம் ஆனந்த நர்த்தனமே!

 

பிஞ்சுக்குழந்தையின் நெஞ்சக்கனவுகள் பலித்திட வழிசொல்லும் திரு. சக்தி சக்திதாசனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 54-இன் முடிவுகள்

  1. வெற்றி பெற்ற கொ,வை, அரங்க நாதனுக்கு வாழ்த்துக்கள்==சரஸ்வதிராசேந்திரன்

  2. எனது கவிதையினை சிறந்த கவிதையாக தேர்வு செய்தமைக்கு நன்றி! வாழ்த்து தெரிவித்த திருமதி சரஸ்வதி ராஜேந்திரன் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *