கற்றல் ஒரு ஆற்றல் 21
க. பாலசுப்பிரமணியன்
கற்றல் ஒரு உணர்வுப்பூர்வமான செயல்
ஒரு சிறிய நகரத்தில் அரசாங்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு இடைக்காலத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. வகுப்பிலேயே மிகச் சிறப்பாகப் படிக்ககூடிய ஒரு மாணவன் அன்று நடந்த கணிதத் தேர்வில் ஒரே ஒரு வினாவைத் தவிர மற்ற அனைத்து வினாக்களுக்கும் சிறப்பாக பதில் கொடுத்திருந்தான். விட்டுப்போன வினாவோ மிக எளிதான வினா. வகுப்பு ஆசிரியருக்கு மிக அதிசயமாக இருந்தது. அந்த வினாவிற்கும் அவன் பதில் எழுதியிருந்தால் அவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைத்திருக்கும்.
அந்த மாணவனை அழைத்து ஆசிரியர் அதற்கான காரணத்தை அறிய முற்பட்டார். அந்த மாணவனின் பதில் கேட்டு அவர் ஆச்சரியத்தில் முழுகிவிட்டார். என்ன காரணம் தெரியுமா?
“அய்யா, இந்த வினாவிற்கு பதிலளிக்க நான் அருகில் இருக்கும் பெரிய எண்ணிடமிருந்து கடன் வாங்க வேண்டும். அப்போது தான் சரியான விடை கிடைக்கும். ஆனால் என் தந்தையோ என்னிடம் எப்போதும் எங்கேயும் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது . அது கெட்டப் பழக்கம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் தான் நான் அந்த வினாவிற்கு பதில் அளிக்கவில்லை.”
கற்றலில் ‘பொருளறிதல்’ (Meaning Making ) ஒரு முக்கியமான நிலை. கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வார்த்தையும் கருத்தும் எவ்வாறு எப்படிப்பட்ட பொருளை தெரிவிக்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சி உலக அளவிலே நடைபெற்று இருக்கிறது. சமுதாயப் பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் ஒரு தனிப்பட்டவரின் பொருளறியும் திறனையும் பொருளின் குணத்தையும் பாதிக்கின்றன.
உலகம் போற்றும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னார்ட் ஷா கூறுகின்றார் “வார்த்தைகள் வெறும் தபால் தலைகள் போன்றவை. அவைகள் வார்த்தைகளை மட்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எடுத்துச் செல்லும். கருத்துக்கள் அந்தக் கடிதத்தில் உள்ளே எழுதப்பட்டவை போன்றன.”
ஆகவே கற்றலில் வார்த்தைகளின் மேன்மை, சொல்லப்படும் விதம் மட்டுமின்றி அந்த வார்த்தைகள் ஒருவருடைய எண்ணங்களின் சிந்தனைகளின் பேராண்மையின் மீது எந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ளுதல் மிக அவசியம்.
ஒருமுறை ஒரு சிறிய கூட்டத்தில் இருந்த சிலரிடம் நான் சொல்லப்போகும் வார்த்தை உங்கள் மனதில் என்ன கருத்தை உருவாக்குகின்றது என்று வினவி “லட்டு ” என்ற வார்த்தையைச் சொன்னேன். ஒருவர் சிரித்துக்கொண்டே “திருப்பதி” என்றார். இன்னொருவர் “இனிப்பு” என்றார். மற்றவர் “விழாக்களில் பகிரப்படுவது ” என்றார் ஒரு கணித ஆசிரியரோ ‘ஒரு வட்டவடிவமான இனிப்பு உருண்டை ” என்றார். பல பொருள்கள். கதைகளும் கருத்துக்களும் ஒவ்வொருவராலும் அவர்தம் உணர்வுகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கேற்ப உள்வாங்கப்படுகின்றன. கற்றல் ஒரு உணர்வுப்பூர்வமான செயல் என அறிதல் புரிதலில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முன்னாட்களில் பள்ளிகளில் நீதிக்கல்விக்கு (Moral Education) முக்கியத்துவம் இருந்தது. காலப்போக்கில் பல காரணங்களால் மாற்றப்பட்டு இன்று “வாழ்க்கைக் கல்வி ” என்ற தலைப்பின் கீழ் சீரமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது. கற்றலில் கருத்துகள் எந்த விதமான நீதிகளையோ வாழ்க்கைத் தத்துவங்களையோ வெளிப்படுத்துகின்றன. அவற்றால் மாணவர்களின் உணர்வுகளின், அறிதலின், நினைவுகளின் மீது தாக்கம் என்ன என்பதையோ அறிந்து செயல் படுதல் அவசியம்.
இங்கு முன்னே சொல்லப்பட்ட நிகழ்வை ஆராயும்பொழுது ஒரு தந்தையின் நீதிபோதனை அவருடைய மகனின் மனதில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
வார்த்தைகளால் ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவை உண்டாக்கக்கூடிய சக்தியை .உருவாக்க முடியும். ஆகவே கதைகள் மற்றும் புத்தகங்களில் பதிக்கப்படும் மற்றும் பாடத்திட்டத்தில் இடம்பெறும் பதிப்புகளை மிகவும் கவனத்துடன் அமைத்தல் ஒரு அரசாங்கத்தின், சமுதாயத்தின் மற்றும் கல்வியாளர்களின் கடமை.
தொடருவோம்