கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
கேசவ் அவர்களின் Antoni Gaudi Spain Architect….குறிப்பு பற்றி அவரிடம் தொலை பேசியில் கேட்டபோது, காடியான வண்ணங்கள் GAUDI அவர்களைக் குறிப்பதாகக் கூறினார்….எவ்வளவு ‘’காடியாய்’’ வரைந்தாலும் கேசவ் அவர்களின் ‘’GOD”யா கண்ணன்….மேலும் அவர் SPAIN என்று போட்டுள்ளதால், எனக்கு ‘’பொறியியல் கல்லூரி’’ ஞாபகம் வந்தது….அடியேன் படிக்கையில் எழுதிய ஒரு ஸ்மால் ஸ்கிட்டில் வசனம் இப்படி வரும்….
ஒருவர் -வள்ளுவரே SPAIN நாட்டைப் பற்றி திருக்குறள் எழுதியுள்ளார்….!
மற்றொருவர் -நெசமாவா….அது என்ன குறள்….!
ஒருவர் -’’பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்து SPAIN”….(பயங்கர க்ளாப்ஸ் வரும்) அதாவது மயிற்பீலி லேசாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் ஏற்றிய வண்டியின் அச்சு ஒடியும்…. கண்ணனின் கீதை ஹெவியாக இருந்தாலும் தேரின் அச்சு ஒடியவில்லை… மயிலே மயிலே என்றால் கீதை இறகு போடும் பச்சை மாமலையவர்…. இதுவும் ஞாபகம் வந்தது…. படத்துக்குப் பொருத்தமான வெண்பாவுக்கு கருத்து கிடைத்தது…. நன்றி கேசவ்…. நன்றி வள்ளுவர்.
‘’அச்சிறா வண்ணம் அசுவரதம் ஓட்டியன்று,
அச்சுறும் பார்த்தர்க்(கு) அருங்கீதை, -பச்சமயில்
பீலியாகத் தந்தனை பெற்றவளைப் போல்கண்ணா
சால மிகுத்து ஸ்பெயின்(SPAIN)”….கிரேசி மோகன்….
அச்சிறா- அச்சு ஒடியா….
அச்சுறும் -பயந்த அர்ஜுனர்