வீட்டுக்கு வந்த விருந்து
க.பாலசுப்பிரமணியன்
காட்டிலே இருக்க இடமின்றி
வீட்டுக்கு வந்தது விருந்து !
கருநாகம் கண்ணியமின்றி
கொஞ்சம் கதவினைத் தள்ளி !
பதறின நெஞ்சங்கள் பயத்தில்
அலறினர் வீட்டில் அபயம் தேடி !
அமைதியாய் அமர்ந்தது விருந்து
ஆடவர் பெண்டிர் நிலைகண்டு !
கூடினர் தெருவில் மக்கள்
குரல்கள் எழுந்தன
கோஷங்கள் பிறந்தன
கூடா மக்கள் கூடிய நேரம் !
“ அடித்திடு கொன்றிடு
அழிந்திட நாகம்”
அடங்கா மனிதனின்
குரலில் வேகம்…!!
” கூப்பிடு அரசை, இதுவோ நாடு?”
குமுறியதோர் நெஞ்சம் !
“கொதிக்கும் எண்ணையை
கொட்டுங்கள் தலையில் “
கூற்றுவன் மொழியில்
குறைத்தார் ஒருவர் !
” குடும்பம் இதற்கு
எங்கே இருக்கு?”
முதியவர் வாக்கு
உதிர்ந்தது பயத்தில்.
” முடிந்து வையுங்கள்
மூன்று ரூபாய் முருகனுக்கு “
மூதாட்டி சொல்லில்
முந்திய அனுபவம் !
சோர்ந்த மனிதர்களின்
சோகம் அறியா ..
சுதந்திர நாகம்
சுகமாய் சென்றது
வேறிடம் தேடி…
காட்டினை அழித்து
வீட்டினைக் கட்டிய
வீரர்கள் நடுவில்
வாதங்கள் தவிர்த்து
வாழ்க்கையைத் தொடர்ந்தது
விரைவினில் நாகம்..
“ பல்லில் விடமா
உடலினில் விடமா
உடனே சொல்லு ..”
சொடுக்கினான் விடுகதை
சோம்பேறி மனிதன்…