கோலங்கள் ……
க. பாலசுப்பிரமணியன்
எட்டுப் புள்ளி பத்துப் புள்ளி
எட்டும் புள்ளி எட்டாப் புள்ளி
எல்லாப் புள்ளியும் ஒன்றாய் சேர்த்து
எளிதில் போட்ட கோலமடி !
கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து
ஊட்டிக் கொடுத்த கணிதப் பாடம்
உருவகம் கொண்டு வீட்டுக் கணக்காய்
வாசலில் வெளிச்சம் போட்டதடி !
பொழுதினில் காலையில் பூத்திடும் கோலத்தில்
பூவும் கனியும் புதிதாய் பிறக்குதடி !
பரிதியும் மதியும் பக்கத்தில் நின்றே
பாவையின் விரல்களில் பாடங்கள் படிக்குதடி !
மங்களம் கூட்டிடும் மனங்கள் சேர்ந்திட
மாலைகள் மாற்றிடும் மணக்கோலமடி !
ஓணத்தின் வண்ணத்தில் உலவிடும் ரங்கோலி
உள்ளங்கள் கவர்ந்திடும் கலைகளின் முன்னோடி!
அன்னை தந்தை அண்ணன் தம்பி
உற்றார் உறவினர் மற்றோர் சூழ
ஆடிடும் விரல்களில் ஆனந்தம் படைக்கும்
வீட்டுவாசலில் வளர்ந்திடும் கோலமடி !
கோலங்கள் கண்டதும் குளிர்ந்த மனத்துடன்
வந்த விருந்தும் வாழ்த்திடத் துடிக்குமடி !
வானத்தைப் பார்த்து வியந்திடும் கோலத்தை
மண்ணில் கண்டே விண்ணும் மயங்குமடி !