பவள சங்கரி

‘மரணம் என்பது காலதேவனின் தண்டனை அல்ல. அது காலதேவனின் பரிசு’ என்பது கீதையில் கண்ணன் வாக்கு . இப்பூவுலகில் மனிதராய்ப் பிறந்த எவரும் ஓர்நாள் தம் உயிரை நீத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அது எப்படி, எந்தச் சூழலில் நிகழ்கிறது என்பதைப்பொறுத்தே அதன் தன்மை உள்ளது. தவிர்க்க வேண்டிய சூழலை தவிர்க்க மன ஆற்றலும், புத்திக் கூர்மையும், உள்ளத் தெளிவும், விழிப்புணர்வும் தேவை. இது தேவையான அந்த குறிப்பிட்ட சூழலில் புதிதாக முளைத்தெழுவது அல்ல. இளமை முதலே இரத்தம் ஊறும்போதே நம்முள் ஊறத்தொடங்கும் எண்ணவோட்டம் இது. அதனை மேலும் வலிமையூட்டுவது மட்டுமே நம் பணி. தம்மைத் தாமே வலிமையூட்டிக்கொள்ளும் பக்குவமும், வல்லமையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் இது கிடைத்தற்கரிய வரம். ஆனால் அந்த வரம் பெற்றவர் மட்டுமே வாழ்த்தகுதியானவரா என்றால் நிச்சயம் இல்லை. இந்த இடத்தில்தான் குருமார்கள், ஆசிரியர்கள், ஆன்றோர், சான்றோர், மூத்தோர் போன்றோரின் கடமைகள் இந்த சமுதாயத்தின் முக்கியத் தேவைகளாகிப்போகின்றன. ஆம் நம் சக மனிதர்கள் படும் துயரைக் கண்டு உள்ளம் பொங்கும் மனிதம் நிறைந்த எவரும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவர தம்மால் இயன்றதைச் செய்யத் துடிப்பதும் நிதர்சனம். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அப்படி ஆடும்போது தம் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்த மனம் துடிக்கும்.

தெருவில் நம்மைக் கடக்கும்போதோ, உணவு விடுதியில் சுவையான உணவை சுவைத்துக் கொண்டிருக்கும்போதோ, அன்புக் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது இன்பமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தாலும், எப்படிப்பட்ட சூழலாக இருப்பினும் திடீரென ஆம்புலன்சு ஊர்தியின் அலறல் ஏதேனும் காதில் விழுந்தால் மனிதம் உள்ள எவருக்கும் அந்தச் சில நொடிகள் தம்மையறியாமல் உடல் செயலிழந்து உள்ளம் மட்டும் விழித்தெழுந்து உணர்வு பொங்க ஏதோவொரு வேதனையில் அவசரமாக உயிருக்குப் போராடியபடி மருத்துவமனை ஓடும் முகந்தெரியாத அந்த உயிருக்காக பிரார்த்தனை செய்வதோ அல்லது மனமார வாழ்த்தவோ செய்யாமல் இருக்கமுடியாது. இதுதான் உண்மையான மனிதம். சக மனிதர்களின் வேதனை தம்மையும் பாதிக்கத்தான் செய்யும். சம்பந்தமில்லாத யாரோ ஒருவருக்கே இந்த எண்ணம் தோன்றும்போது மேற்சொன்ன முக்கியமான சமுதாய அங்கங்களான, குருமார்கள், ஆசிரியர்கள், ஆன்றோர், சான்றோர், மூத்தோர் போன்றோரின் பங்கு எவ்வளவு இன்றியமையாதது என்று சிந்திக்க வேண்டும். அப்படி ஏதும் பொறுப்புணர்வு இவர்களிடம் முழுமையாக இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் வெளிப்படையாகச் சொல்ல முடிகிறது.

தொழில்நுட்பமும், பொருளாதாரமும், பெண் கல்வியும், பொதுவான வாழ்க்கை முறைமைகள் என அனைத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கும் இந்தக் காலகட்டங்களில்தான் அறியாமையைக் கட்டியங்கூறும் இதுபோன்ற அசம்பாவிதங்களும் நம் நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

சென்ற வெள்ளியன்று (25/03/16) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தவத்தாரேந்தல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம்தான் நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது. இந்த நவீன காலங்களில் இது போன்ற சம்பவம் நடப்பது நம் கிராமங்கள் இன்னும் இருட்டிலேயே வாழ்ந்துகொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றது. விவசாயி புயல் என்ற வெள்ளைகண்டான் (58) என்பவரது மகன் அழகுராஜா. மகள் மீனா 17 வயது நிரம்பிய பிளஸ் 2 படிக்கும் மாணவி. அழகுராஜாவின் மனைவி லட்சுமி என்பவர் நேற்று மாலை வீட்டில் மின்சார மாவு அரைக்கும் இயந்திரத்தில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த வெள்ளைகண்டான் உள்ளே சென்று, மருமகளைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, மீனா, அழகுராஜாவின் மகள் பிரியதர்சினி என்கிற 9 மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடியவர், தந்தையையும், அண்ணியையும் காப்பாற்ற முயன்றபோது மீனா, குழந்தை பிரியதர்சினி ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்து, 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
26-1458965599-dead--600

பொதுவாக மின்கசிவு ஏற்படுவது பார்வைக்குத் தெரியாது என்றாலும், மிகப் பழைய மின்சார சாதனங்களை எப்பொழுதாவது ஒரு முறையேனும் மின்கசிவு சோதனை செய்து பார்ப்பது நல்லது என்றாலும் கிராமங்களிலும், சாதாரண குடும்பங்களிலும் இது சாத்தியமாவதில்லை. அதற்கான விழிப்புணர்வு பெரும்பாலும் இல்லவே இல்லை என்றே சொல்ல முடிகிறது. முதலில் மருமகள் கருகிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் பெரியவருக்கு பதட்டத்தில் என்ன, ஏது என்று புரியாமல் அவரும் அதே இயந்திரத்தைத் தொட்டோ அல்லது மின்சாரம் தாக்கிய மருமகளைத் தொட்டோ தானும் அதற்குப் பலியாகிவிட்டார். அதாவது மின்சாரம் தாக்கியவரைத் தொட்டால் தன்னையும் அது இழுத்துவிடும் என்ற அடிப்படை உணர்வே இல்லாமல் இருந்திருக்கிறார் அந்தப் பெரியவர். இதைவிடக் கொடுமை பள்ளியிறுதி வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கும் துளியும் விழிப்புணர்வு இல்லாமல் ஒரு சிறு குழந்தையையும் துக்கிக்கொண்டுபோய் மின்கசிவிற்கு பலியானதுதான்.

பள்ளிகளில் என்னதான் கற்றுக்கொடுக்கிறார்கள். தற்போதைய கல்வி முறையில் வாழ்க்கைக் கல்வி என்பதே இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம். அறிவியலும், கணக்கும், வரலாறும் கற்பிக்கும்போது இடையிடையே வாழ்க்கைக் கல்விக்கும் அதாவது இது போன்ற அடிப்படை அறிவையாவது ஊட்ட வேண்டியது பள்ளி ஆசிரியர்களின் கடமை. குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பிருக்கிறது. நாங்கள் பள்ளியில் படித்த காலங்களில் வாரம் ஒரு முறை நீதி போதனை வகுப்பு என்று ஒன்று இருக்கும். அதில் பெரும்பாலும் வாழ்க்கைக் கல்விதான் போதிக்கப்படும். இது முற்றிலும் அந்த ஆசிரியரின் ஆர்வத்திலேயே நடக்கும். ஒவ்வொரு கதைகளை உதாரணமாகக் கூறி அதன் மூலம் பல போதனைகள் அளிப்பார்கள். பெண்கள் நலம், பாதுகாப்பு, அடிப்படை ஆரோக்கியம், சுத்தம், சுகாதாரம் என பல விசயங்கள் போதிக்கப்படும். இன்று அப்படி ஒரு வகுப்பு நடப்பதாகவேத் தெரியவில்லை. இது மட்டுமல்லாமல் சாரணர் வகுப்பு, முதலுதவி பயிற்சி, செஞ்சிலுவைச் சங்க பயிற்சி வகுப்பு என்று இப்படி அவ்வப்போது நடக்கும். அதில் இது போன்ற அடிப்படை விசயங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.

தெருக்கூத்து, மேடை நாடகம், சர்க்கசு, நகைச்சுவை நிகழ்ச்சிகள் என எது நடந்தாலும் இடையிடையே வேடிக்கையுடன் இது போன்ற சமுதாய விழிப்புணர்வு செய்திகளின் பரிமாற்றமும் நடைபெறும். ஆனால் இன்று மொத்தமாக இதெல்லாம் மறைந்துவிட்டது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமே முக்கிய இடம் பெறுகின்றன. விளம்பரங்களும், கேளிக்கைகளுமே பெரும் பகுதியை கைப்பற்றுகின்றன.

இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பங்களில் பெண்களின் கல்லாமையும், அறியாமையும் அதிகமாகி, கற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. கல்வியறிவற்ற நிலையில் ஒரு பெண் தம் பத்து அல்லது பனிரெண்டு அகவையில் மணமுடிக்கும்போது இயல்பாகவே அவளுக்கு கணவனைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு கூட இல்லாமல் இருந்தாள். ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில் அனைத்துமே முன்னேறியிருக்கிறது என்று ஆய்வுகளும், கணக்கெடுப்புகளும் கூறிக்கொண்டிருந்தாலும் இன்னும் நம் கிராமங்கள் இருட்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறதா என்ற ஐயத்தையே உறுதிப்படுத்துகிறது….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *