படக்கவிதைப் போட்டி 56-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
மரங்கள் இயற்கை நமக்களித்த வரங்கள். அவற்றின் அருமையறியாது அழித்தோம். விளைவு? பசுமையின்றி, பருவமழையின்றி மாநிலமே வறண்டுவருவதைக் கண்கூடாய்க் காண்கின்றோம்.
மரங்களைக் கணக்கின்றி அழித்தொழித்த பெரியோரின் தவறு, பிள்ளைகளுக்கல்லவா தீராத்துயரைத் தந்துவிடுகின்றது? “தம் தலைமுறையிலேனும் பசுமை மீண்டும் தழைக்கட்டும்; பூமி பிழைக்கட்டும்” எனக்கருதி இளஞ்சிறார் இருவர் மரக்கன்றை நட்டு, நீர்வார்க்கும் நற்செயல் நம் நெஞ்சில் பால்வார்க்கின்றது!
புகைப்படக்கலைஞர் புதுவை திரு. சரவணனின் புகைப்படத்தை இவ்வாரப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றி!
புகைப்படத்தைத் தம் கவிதையால் அணிசெய்துள்ள கவிஞர் பெருமக்களின் கவின்கவிதைகளைப் படித்து இரசிப்போம் இனி!
மரங்களையழித்து, சோலைவனமாயிருந்த மாநிலத்தைப் பாலைவனமாக்கிய தாய்தந்தையரின் பிழைதனைநீக்கி, மரம்நட்டு மண்காக்கும் இளஞ்சிறாரைப் போற்றுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
அப்பன் செய்த செயலதுதான்
அங்கே மரத்தை வெட்டிவிட்டான்,
தப்பென தந்தையர் அறியவில்லை
தாவரம் அழிப்பதைக் குறைக்கவில்லை,
இப்படிப் போனால் சிலகாலம்
இப்பார் முழுதும் பாலையாகும்,
தப்பெனத் தெரிந்த தனையரெல்லாம்
தாமே வந்தார் மரம்நடவே…!
***
”மனிதனைப்போல் நன்றிமறந்து நகர்ந்துவிடும் இழிகுணம் மரங்களுக்கில்லை; இன்று நீ நீரூற்றினால், நாளை உன்னை நிழல்தந்து காக்குமவை நகராது!” என்று மரத்தின் அருங்குணத்தைச் சிறார்களுக்குச் சுட்டுகின்றார் தாரமங்கலம் திரு. வளவன்.
நம்பிக்கையோடு நீர் ஊற்று…
மரம் மனிதனைப் போல் அல்ல…
உன்னிடம் உதவி பெற்ற பிறகு
உன்னை உதறி விட்டு போய் விட…
நீ நட்ட அதே இடத்தில் விருட்சமாய்
வளர்ந்து ஊருக்கே நிழல் தரும்…
உனக்கு தெரியுமா நீ இன்று நடும் இந்த செடி
உன்னை விட உயரமாய் வளரும் என்று..
அதை நீ நிமிர்ந்து பார்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை
***
இணையத்தில் இறக்குமதி செய்துசாப்பிடும் இழிநிலையை வருங்காலத்தில் தவிர்த்திட, மரம்நடுதலின் அவசியத்தை இன்றே இளையோர்க்குச் சொல்லித்தாருங்கள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. க. கமலகண்ணன்.
இனி வரும் சமுதாயம்
இணையத்தில்
இறக்குமதி செய்து சாப்பிடும்
இழிவான நிலைக்கு வரலாம்
இளமைலேயே சந்ததிகளுக்கு
இயற்கை பயிரிடல் பற்றிச் சொல்லத்தர
இல்லை எனில் விவசாயம்
இனிக்காது போகும் நிலை
இயல்பாக விருந்தாளியாக வரும்
இது தொடர்ந்தால் சர்வாதிகாரியாய்
இருமுடியை வைத்தது போல ஆட்சியில்
இதயம் கமற அனைவருக்கும் உணவு
இல்லை என்ற நிலை வரலாம்
இளைய சமுதாயத்திற்குச் சொல்லிக் கொடுப்போம்
இயற்கையின் பரிமாணத்தை மண்ணையும் மரத்தையும்
….பயிரையும் மரம் நடுதலையும்
***
கவிமழைபொழிந்து கருத்துப்பயிர் வளர்த்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம் இனி!
இயற்கையோடு மனிதன் கைகோத்திருந்த காலத்தில் வானம் பொய்க்கவில்லை; வளம் பிழைக்கவில்லை. இன்றோ, தன்னலத்திலேயே திளைத்துவிட்ட மனிதக்கூட்டம், அமுதனைய மழையையும், வெயிற்கேற்ற நிழலையும், வீசும் தென்றற்காற்றையும் இலவசமாய் அள்ளித்தந்த மரங்களின் அருமை மறந்து அவற்றை வெட்டிவீழ்த்திவிட்டு இயற்கைச்சீற்றங்களாலும், செயற்கை மாசுகளாலும் அல்லலுறுகின்றது.
நம் மண்ணின்மைந்தர்கள் வேரிலே வெந்நீரைப் பாய்ச்சிவிட்டு, இலையிலே பசுமைதேடும் மடமையை இனியேனும் ஒழித்து மரங்களை நடுதல் நன்று! என்று புகல்கின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்கின்றது!
செத்த பின்
சிந்து பாடும்
செந்தமிழ் நாட்டின்
வாரிசுகள் நாம்
காடுகளை
அழித்துவிட்டு
மழைக்குத் தவம்
இருக்கும்
மண்ணின் மைந்தர்கள் நாம்
வேரிலே
வெந்நீர் ஊற்றிவிட்டு
இலையிலே
பசுமைதேடும்
பகுத்தறிவுவாதிகள் நாம்
அவசியங்களை
அலட்சியப்படுத்திவிட்டு
அவதிப்படும்
அறிவிலிகள் நாம்
போதும் போதும்
இனியொரு விதி செய்வோம்
இந்த ஜெகத்தினை
வளமாக்குவோம்
வா நண்பா வா
காக்கின்ற இயற்கையைக் காப்போம்
கேடுசெய்யும் மாசுகளைத் தவிர்ப்போம்
மழைதரும் மரம் நிறைய வளர்ப்போம்
முன்னோர் செய்த தவறுதவிர்ப்போம்
அப்துல் கலாம் தோன்றிய நாடு
அவர் வகுத்த பாதையில் மரம் நடு!
”காடுவாழவும், கேடுவீழவும் இன்றே வளர்ப்போம் மரங்களை!” என முழங்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.
***
இயற்கையின் ஆயுள்ரேகையாய்த் திகழ்பவை மரங்கள்; அவையின்றி அமையாது உலகு என்ற உண்மையை உரைக்கின்றது மற்றொரு கவிதை!
நேற்றைய சமுதாய உயிர்ப்பில் நாங்கள்.
நாளைய சமுதாய உயிர்ப்பிற்காய் இவர்கள்.
பூமிக்குப் பசுமை போர்த்தும் செயல்.
பூமியென்ற உடலை மரத்திற்குத் தருதல்.
மரம் நடுகையை சிறு மனதிலே
வரமாய்க் கொடுத்தால் மழை வருமே!
மரமின்றி அமையாது உலகு அறிவோம்.
மரமே இயற்கையின் ஆயுள் ரேகை.
காற்றின் மூலக்கூறுகள், சூரியக்
கதிரினொளிக் கூறுகள் மரத்தின் அணுக்கள்.
ஆற்றலுடை வேர் முனைகள் போர்வீரர்களாகி
ஆற்றும் செயலாம் மரம் வாழ்க்கைவேர்.
பெருமனதான மூதாதையர் விட்டுச் சென்றவை
தெருவோரம், ஏரி, ஆற்றுக்கரை நிழல்கள்.
இயற்கையின் பரிசாம் மரங்களை இவர்கள்
செயற்கையில் நடுவதால் நீர் பெறுவோம்.
”மழைக்கு வழிகோலும் மரங்களை வளர்த்து, மன்பதை காப்போம்” என்று நன்மொழி பகர்ந்திருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதைக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக.
அனைத்து கவிஞர்களிற்கும் தங்களிற்கும்
இனிய வாழ்த்துகள். என் கவிதைக்கு
தங்கள் பாராட்டிற்கு நன்றிகள்.
சிறந்த கவிதையாக என் கவிதையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி -சரஸ்வதி ராசேந்திரன்