ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை
— அண்டனூர் சுரா.
‘என்ன வேலை பார்க்கிறாய் நீ…’
‘பாடகனாக இருக்கேன்….’
‘உன் தொழிலைக்கேட்கிறேன்….?’
‘தொழிலைத்தான் சொல்கிறேன்….’
‘பாடுறது ஒரு தொழில் கிடையாதே….’
‘இருக்கலாம். நான் அதை முறைப்படுத்திச் செய்துகிட்ருக்கேன்…’
‘எதையெல்லாம் பாடுவ…?’
‘என்னெல்லாம் எழுதுறேனோ அதையெல்லாம் பாடுவேன்’
‘நீ எழுதியது எதாவது இதழ்களில் வந்திருக்கிறதா….?’
‘வந்ததில்லை….’
‘பிறகு ஏன் எழுதுறே……?’
‘பாடுவதற்காக எழுதுகிறவன்……’
‘என்னெல்லாம் எழுதியிருக்கே…..?’
‘பாட்டாளியைப்பற்றி எழுதிருக்கேன்… அவன் வாங்கிற கூலி வீடு போய் சேராததைப்பற்றி எழுதிருக்கேன்….’
‘பாட்டாளியை மட்டும்தான் எழுதுவே….ம்….?’
‘அரசியல்வாதிகளையும் எழுதிருக்கேன்….’
‘அவர்களைப்பற்றி எப்படி எழுதியிருக்கே..?’
‘அவர்கள் செய்கிற ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவர்கள் நடத்துகிற சாதி அரசியல், மத அரசியல்,….இதெல்லாம் பற்றி எழுதியிருக்கேன்…..’
‘எங்களப்பத்தி எழுதியிருக்கீயா….?‘
‘ம்……’
‘எப்ப…..?’
‘சீர்காழியில ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு போலீஸ் அதிகாரியை நாலுபேர் நடு ரோட்டில் வெட்டிக்கொன்றாங்க. அப்ப போலீஸ்க்கென பாதுகாப்பு வேணும் அவங்களுக்கொரு சங்கம் வேணுமென எழுதியிருக்கேன்…..’
‘எங்கே அதைப் பாடு…?’
‘சும்மா பாட முடியாது….’
‘என்ன வேணும்….?
‘அடிச்சுப்பாட பறை வேணும்….’
‘பறையெல்லாம் ஸ்டேசனுக்குள்ளே எடுத்துவர அனுமதியில்லை….’
‘அப்ப என்னால் பாட முடியாது….’
‘தாறேன்…. எங்க அதிகாரியப் புகழ்ந்து பாடுவீயா….?’
‘அதிகாரி வர்க்கத்தப்பாடுகிறவன் இல்ல நான்….’
‘பின்னே….?’
‘பாட்டாளி வர்க்கத்தப் பாடுகிறவன்…’
‘ அப்ப நீயொரு கம்யூனிஸ்ட்….?’
‘நீங்க என்ன கேப்டலிஸ்ட்டா…..?’
‘என்ன கிண்டலா…? கேள்விக்கேட்கிறவன் நான், நீ இல்ல…..’
‘உங்க கேள்வியில நான் கம்யூனிசவாதியா முதலாளித்துவவாதியாயென இருக்க வேண்டியதில்ல…..’
‘இன்னைக்கு சனிக்கிழமை. திங்கள், செவ்வாய் லீவு. புதன் கிழமைதான் உன்ன கோர்ட்ல ஒப்படைக்க முடியும்….தெரியும்ல….?’
‘புதன் கிழமை வரைக்கும் நான் பாதுகாப்போட இருந்தாதான் அதுவும் முடியும். அது உங்களுக்குத் தெரியும்ல….?’
‘கேட்கிறக்கேள்விக்கு முறையாகப் பதில் சொல்வது உனக்கு நல்லது….’
‘நமக்கு நல்லது…..’
‘யாரெல்லாம் உன் தொடர்புல இருக்காங்க…..?’
‘மக்கள்….’
‘மக்களைக்கேட்கல…. கட்சிகளைக் கேட்கிறேன்…..?’
‘மக்களுக்காக குரல் கொடுக்கிற கட்சிகளெல்லாம்….’
‘அதுதான் எது எதுன்னு கேட்கிறேன்…..?’
‘தெரிஞ்சுக்கிட்டு ஏன் கேட்கணுங்கிறேன்…’
‘இதுக்கு முன்னாடி யாரையும் நான் இப்படி பொறுமையா விசாரிச்சதில்ல….’
‘விசாரணை எனக்கு ஒன்னும் புதிதில்ல…..’
‘நான் போலீஸ்காரன்’
‘நான் கலைஞன்…..’
‘பணத்துக்காக பாடுறவன் நீ இப்படித்தான் பேசுவே….?’
‘பணத்துக்காக உங்களைப்போல நடிக்கத்தான் முடியும். பாட முடியாது….’
‘உன்னை இயக்குறது யாருனு சொல்லு. இப்பவே விட்டுறுறேன்…..’
‘அதான் சொன்னேனே…. மக்கள்னு….’
‘அரசியல்வாதி மாதிரி பேசுறே…’
‘அவ்ளோ அசிங்கமாவாப் பேசுறேன்…..?’
‘அதிகமாகப் பேசுறேங்கிறேன்…..’
‘இதுவே அதிகமானால் இனி நான் பேசப்போறதில்லை…..’
‘பேசமாட்டேனு சொல்றமாதிரி எழுதமாட்டேனும் சொல்லு’
‘அது என்னால முடியாது…’
‘இனி நீ எழுதக்கூடாது.’
‘ஒரு வாரம் சாப்பிடாம இருக்கச்சொல்லுங்க இருக்கேன். ஆனா ஒரு நிமிசம் என்னால எழுதாம இருக்க முடியாது….’
‘சரி… பாட மாட்டேனு சொல்லு…..’
‘பாட்டு என் சுவாசம்’
‘உன்னால பாடாம , எழுதாம இருக்க முடியாது….ம்…..?’
‘பாடவும், எழுத்தவுமில்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது’
‘எவ்வளவு காலமாக நீ பாடிக்கிட்டிருக்கே….?’
‘ரொம்பக்காலமாக….’
‘சரியாகக் கேட்கிறேன்….’
‘விபரம் தெரிந்ததிலிருந்து…..’
‘எப்ப உனக்கு விபரம் தெரிந்தது….?’
‘நான் படிச்ச படிப்பு எனக்கு சோறு போடப்போறதில்ல என தெரிந்ததிலிருந்து…’
‘என்ன படிச்சிருக்கே….’
‘தமிழ் பி. ஹச். டி.’
‘புரியல….’
‘முனைவர் அதாவது டாக்டரேட்….’
‘படிச்சப்படிப்புக்கு வேலைத் தேடியிருக்கலாமே…..?’
‘தேடினேன்… படிக்காதவன் நடத்துற காலேஜ்ல என்னோட படிப்ப நான் அடமானம் வைக்க விரும்பல…..’
‘நீ பாட்டு எழுத, பாட யார் காரணம்…..?’
‘உங்களைப் போன்றவங்க…’
‘அப்படின்னா….?’
‘அதிகாரம் படைச்சவங்க…..’
‘டாக்டரேட் படிச்ச நீ இப்படி போலீஸ்க்கிட்ட பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு….?’
‘ஒரு பாடலைப் பாடினேன் என்பதற்காக ஒரு கொலைக் கைதியைப் போல, ஊழல்வாதியைப் போல, அரசுப் பணத்த கையாடல் செய்தவனைப் போல விசாரிக்கிறது நல்லாத்தான் இல்லை…’
‘நீ இவ்ளோ படிச்சிட்டு கூத்தாடி போல நடந்துக்கிட்டேனா, உன் குடும்பத்தில இருக்கிறவங்க எப்படி சாப்பிடுவாங்க….?’
‘உழைச்சி ’
‘அப்ப நாங்க உழைக்காம சாப்பிடுறோம்னு சொல்றியா…..?’
‘நான் சொல்கிற பதில்ல அப்படியொரு அர்த்தம் பொதிந்திருக்குனா அதற்கு நான் பொறுப்பல்ல…’
‘அரசாங்கத்த விமர்ச்சிக்கிற உரிமை உனக்கு யார் கொடுத்தது….?’
‘அரசாங்கத்தை விமர்ச்சிக்கக்கூடாதுங்கிற கடிவாளத்த எனக்கு யார் போட்டது….?’
‘போலீஸ்க்காரன் நான்… நீ இல்ல….’
‘என் தரப்பு நியாயத்த சொல்ல வேண்டியவன் நான். நீங்க இல்ல….’
‘என்ன நீ சொல்ல வாறே….?’
‘சுவர்தாண்டி அர்த்தராத்திரியிலே என்னை ஏன் கைது செய்திருக்கீங்க….’
‘அரசாங்கத்தைக் கேலி செய்திருக்கே ….’
‘எந்த வகையில செய்திருக்கேன்….?’
‘சொல்லட்டுமா….?’
‘அதைத்தான் கேட்கிறேன்….’
‘அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்னு பாடியிருக்கே….’
‘பண்ணியவங்களைப் பாடியிருக்கேன்….’
‘மதுபான ஆட்சி எனக் கேலி செய்திருக்கே….?’
‘கேலி மட்டும்தான் செய்திருக்கேன்….’
‘மதுவைச் சீண்டிருக்கே….’
‘சீண்டதான் செய்திருக்கேன். குடிக்கவில்லையே…..’
‘கொச்சை மொழியில் பாடியது பெருந்தவறு….’
‘அது கொச்சை மொழியில்ல. அது வட்டார மொழி என தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் தவறு….’
‘வட்டார மொழியில் நீ பாடியிருக்கக்கூடாது….’
‘பீப் மொழியிலதான் நான் பாடியிருக்கக் கூடாது….’
‘இது எல்லாத்தையும் விட இன்னொன்று நீ செய்திருக்கே…..’
‘என்ன செய்திருக்கேன்….?’
‘பொது மக்களோட அமைதியக் கெடுத்திருக்கே….’
‘ஹக்……’
‘இப்ப நீ என்ன செய்தே….?’
‘சிரிச்சேன்…’
‘போலீஸ்க்காரன் கோபம் என்னனு தெரியும்ல….?’
‘தெரியும்…’
‘என்ன தெரியும்…..?’
‘அது பாட்டாளிகள் படும் கோபத்தில பாதி கூட கிடையாதெனத் தெரியும்..’
‘உண்மையைச் சொல்லிவிடு. உன்னை இயக்குறது யாரு….?’
‘மக்கள்’
‘இப்படி நீ பேசினா…கோர்ட்ல ஜாமீன்கூட கிடைக்காது…’
‘அப்படி கிடைக்காமப் போறது நல்லதுன்னு நினைக்கிறவன் நான்….’
‘சிறை வாழ்க்கை எப்படி பட்டதுன்னு உனக்குத் தெரியாது…’
‘பாட்டு எழுத, பாட இதுதான் தகுந்த இடமென உங்களுக்குத் தெரியாது….’
‘உன்னை நான் வேற வழியில் விசாரிக்கிறேன்…..’
‘சட்டத்திற்கு உட்பட்டே விசாரிங்க….’
‘உன்ன கோர்ட்ல ஒப்படைக்கிற வரைக்கும் நீ லாக்கப்லதான் இருக்கப்போறே…..’
‘இருக்கேன் ’
‘நேரத்துக்கு சாப்பாடு தரமாட்டேன்…..’
‘வேண்டியதில்லை…..’
‘டார்ச்சர் படுத்துவேன்….?’
‘பரவாயில்லை’
‘உன் குடும்பத்தார்களை சந்திக்க விடமாட்டேன்’
‘தேவையில்லை…’
‘எதுவுமே வேண்டாமெனச் சொல்றீயா……?’
‘வேணுமெனச் சொல்றேன்…..’
‘என்ன வேணும்…..?’
‘என்னோட பறை வேணும் ’
******************
[நன்றி: வண்ணக்கதிர்: மார்ச் 27 தீக்கதிர் இணைப்பு]