தி.க.சி இயற்றமிழ் விருது
மூத்த இலக்கிய கர்த்தா தி.க.சி.யின் நினைவை போற்றும் விதமாக, ‘நந்தா விளக்கு’ வழங்கும் 2016ஆம் ஆண்டிற்கான ‘தி.க.சி இயற்றமிழ் விருது’, இந்த ஆண்டு நாடக கலைஞரும், திரைப்பட நடிகரும், முதுபெரும் எழுத்தாளருமான பாரதி மணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ‘நந்தா விளக்கு’ இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்ட பின், முதலாம் ஆண்டு விருதுக்கு பாரதி மணியின் ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ நூலை தேர்வு செய்துள்ளது. திருவண்ணாமலை வம்சி பதிப்பகத்தார் இந்நூலினை பதிப்பித்துள்ளார்கள்.
கவிஞர் தேவேந்திர பூபதி தலைமையில் வருகிற 02-04-2016 அன்று திருநெல்வேலி ஜானகிராம் ஹோட்டல் அயோத்திய ஹாலில் மாலை 5 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது . நந்தா விளக்கு அமைப்பாளர் எழுத்தாளர் சுபாஷிணி வரவேற்புரையாற்றுகிறார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பொன்னீலன், தோப்பில் முகம்மது மீரான், பிரபஞ்சன் மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன், மக்கள் மருத்துவர் ராமகுரு, மனநல மருத்துவர் ராமானுஜம், பவா செல்லத்துரை, செ.திவான், கழனியூரன், ஜனநேசன், இரா. நாறும்பூநாதன், இளம்பரிதி, சீனி குலசேகரன், பொன் வள்ளிநாயகம், கிருஷி, வே.முத்துக்குமார், சரவணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக ஜானகிராம் ஹோட்டல்ஸ் ராம்குமார், சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி முதல்வர் திருமதி.உஷா ராமன், தச்சை என்.கணேஷ் ராஜ ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விருது விழா தொடக்கமாக மாலை 5 மணிக்கு பாரதி மணி நடித்த ‘ ஓரிரு வார்த்தைகள், விசுவாசம், மற்றும் காட்டேரி கும்பல்’ ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன.