படைப்பாளியின் படைப்பு பொதுவுடமையா?
பவள சங்கரி
படைப்புகள் வெளியிட்ட பின்பு அது படைப்பாளிக்கு மட்டும் தனியுடைமை அல்ல .. பொதுவுடைமையாகிவிடுகிறது என்பார்கள். படைத்தவர்களே அதைத் தள்ளி நின்று ஒரு வாசகராகத்தான் காண முடியும்! இந்த யதார்த்த நிலைக்கு உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிகாசோ மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆம், ஒரு முறை பிகாசோ வீட்டில் தம் நண்பர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்துக்கொண்டிருந்தாராம். எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தவாறு அமர்ந்து அளவளாவிக்கொண்டிருந்தார்களாம்.. அப்போது அவர்களில் ஒரு நண்பர் வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தவர், சுவர்களையெல்லாம் கவனித்துவிட்டு, பிகாசாவின் ஒரு ஓவியம்கூட அவருடைய வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் , ‘ஏனப்பா உன் ஓவியம் உனக்கே பிடிக்காதா, ஒன்றுகூட இங்கு இல்லையே’ என்று கேட்டாராம்.
அதற்கு ஓவியர் பிகாசா மிக யதார்த்தமாக, ‘சுவரில் ஓவியங்களை மாட்டி அழகு பார்க்க எனக்கும் ஆசைதான். ஆனால் அதன் விலை எனக்குக் கட்டுப்படி ஆகாதே.. நான் என்ன செய்ய..?’ என்றாராம்!
அருமையான சம்பவம். மிக ஆழமான கருத்து. தற்போது எல்லோருடைய நிலையும் அப்படித்தான். கொல்லன் வீட்டில் தாள்பாழ் சரியிருக்காது. ஆசாரி வீட்டில் கதவு சரியிருக்காது. என்ற நம் முன்னோர்களின் பழமொழி மிகச் சரிதான்.