அழகென்னும் தெய்வம்
-ச.சவகர்லால்
பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்
-புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்
காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்
-கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்
சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்
-திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி
ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;
-அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.
காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்
-கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.
சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்
-சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.
காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்
-கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.
மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்
-மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.
மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே
-மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி
மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை
-மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே
மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்
-மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.
மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த
-மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.
தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்
-திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்
தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்
-செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்
தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்
-தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்
தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்
-தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.
ஆற்றோட்டம் போன்றதோர் அழகிய கவிதையைத் தந்த பொற்கிழிக் கவிஞர் சவர்கர்லால் அவர்களுக்கு நன்றி.
மீ.விசுவநாதன்