எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 
 
unnamed
 
                உள்ளமெலாம் உவகை  கொள jeya
                           ஊரெல்லாம் மகிழ்ச்சி பொங்க
                வெள்ளமென மக்கள் எலாம் 
                            வீதியிலே நிறைந்து  நிற்க
                 உள்ளூரின் கோவில் தனில்
                           ஊர்வலமாய் தேர் அமர்ந்து
                  வண்ண மயில் வாகனார்
                              வடிவாக வலம் வருவார் !
 
                   எண்ணம் எலாம் இனிப்பாக
                               எல்லோரும் இணைந்து அங்கே
                   இழுத்து நிற்போம் தேரதனை
                                    எங்கள் ஊரே திரண்டுநிற்கும் 
                    புத்தாடை தனை உடுத்தி
                                   புதுத்தெம்பு மனத் திருத்தி
                   அத்தனை பேர் கைகளுமே
                                   அத்தேரின் வடம் பிடிக்கும் !
 
           எத்தனையே கனவுகளை எல்லோரும் மனத்திருத்தி
           ஏங்கிய முகத்தோடு இறைவனையே பார்த்துநிற்பர்
           எதிர்காலம் இன்பமாய் இருப்பதற்கு அருளிடென
           எம்பெருமான் முருகனது தேரிழுப்பார் எல்லோரும் !
 
           சித்திரையின் தேரோட்டம் சீக்கிரமாய் வரவெண்ணி
           அத்தனைபேர் உள்ளங்களும் ஆவலாய் காத்திருக்கும்
            முத்திக்கு வித்தான முழுமுதலின் தேரிழுத்தால்
            எத்திக்கும் எவர்வாழ்வும் எழிலோங்கி விளங்கிடுமே !
 
           ஊரெல்லாம் கூடிநின்று தேரிழுக்கும் சித்திரையை
           உவப்புடனே வரவேற்று உளம்மகிழ்ந்து நின்றிடுவோம்
           யாரோடும் பகைகொள்ளா நல்லமனம் தருகவென
           மால்மருகன்  முருகனிடம் மனமார வேண்டிநிற்போம் !
 
           வெளிநாட்டில் உள்ளவரும் விரும்பித்தேர் இழுக்கின்றார் 
           வேலவனே வினைதீர்த்து விரும்பியதைக் கொடுத்திடென
           சீலமுடன் நாம்வாழ சித்திரையை வரவேற்போம் 
           ஞாலமதில் நாம்சிறக்க நற்குமரா அருள்தருவாய் !
 
           எத்திக்கு இருந்தாலும் சித்திரையை வரவேற்போம்
           அத்தனைபேர் வாழ்வினிலும் ஆனந்தம் பெருகிடவே
           சொத்தாக இருக்குமெங்கள் சொந்தங்கள் சேர்ந்திடவே
           சித்திரையில் சிரித்தென்றும் சிறப்புடனே இருந்திடுவோம் !
 
           மூத்தோரை அரவணைத்து முத்தங்கள் கொடுத்திடுவோம்
           சாத்திரங்கள் பார்த்தாலும் சரியாகச் செயற்படுவோம் 
           ஏற்றிவைத்த பாரமெல்லாம் இறக்கிவைக்க முயன்றிடுவோம்
           எங்கள்வாழ்வில் சித்திரையால் இனிமைவர வேண்டிநிற்போம் !
 
          புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புதுமைபல பார்த்தாலும்
          நலம்விளைக்கும் சித்திரையை நாம்மறத்தல் நன்றல்ல 
          நமதுகலை பண்பாடு நம்மனத்தில் இருந்துவிடின்
          நல்லதொரு சித்திரையை நாளெல்லாம் பார்த்திடலாம் ! 
 
           சித்திரையில் சிரித்திடுவோம் சிந்தனையை வளர்த்திடுவோம்
           அத்தனைபேர் மனங்களிலும் அன்புவரச் செய்திடுவோம் 
           சத்தியத்தைக் கடைப்பிடிப்போம் சன்மார்க்க வழிசெல்வோம்
           சித்திரையைச் சிறப்பாக்க சேர்ந்துநிற்போம் வாருங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *