சங்ககாலப் பெண் புலவர்களின் படைப்புத்திறன்

1

பா. மஞ்சுளா

images (1)

சங்க இலக்கியம் உலகின் செம்மொழித் தகுதிபெற்ற உயர்வான இலக்கியம். அதில் காணப்படும் கருத்து வளம், கற்பனைச் சிறப்புத்தன்மை பொருந்திய பாடல்களின் செறிவு படிப்போர் உள்ளத்தைக் கவரும் வண்ணம் எக்காலத்திலும் அழியாப் புகழ்பெற்றது.

” இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே
வடிவெடுத்து “…. என்று .திரு.வி.க. கூறுவார்.

சங்கம் என்ற சொல்லுக்கு அவையம், புணர், கூட்டு, தொகை, கழகம், தமிழ்நிலை, என அகராதி விளக்கம் தரும். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பல்வேறு காலகட்டத்தில் பாடல்களை இயற்றியுள்ளார். அக்காலத்தில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்தனர். அவர்களின் புலைமைச் சிறப்புமிக்கது. வெள்ளிவீதியார், ஔவையார், நப்பசலையார் போன்றவர்கள் குறிப்பிட வேண்டிய பெண்பாற் புலவர்கள்.

வெள்ளிவீதியாரின் பிரிவாற்றாமை பாடல்…

தலைவியின் மனநிலை:

தலைவி தலைவன் தன்னோடு இல்லாத அந்த மாலைப்பொழுதில் அவனுடைய நினைவால் வாடுகிறாள். தன்னுடைய மனத்தை வெளிப்படுத்த முடியாமல் துன்புறுவதை

சோறு சொரி குடவயின் கூம்புமுகை அவிழ

வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு

மையிரும் பனைமிசைப் பைதல உயவும்

அன்றிலும் என்புறம் நரலும்… (நற்றிணை – 335)

என்னும் பாடலில் மூலம் சந்திரன் விண்ணகத்து தோன்றும். அலையினை உடைய கடலும் அடங்காது முழங்கும். கடல்நீர் கரையில் மோதிப் பெயரும் பலவகையான பூக்களை உடைய கடற்கரைச் சோலையில் தாழை முள்ளை உடைய இலையுடன் விளங்குகிறது. அது சோற்றைச் சொரிகின்ற கூம்பிய அரும்பினை மலரச் செய்யும். காற்று அப் பூமடலுள் புகுந்து மணத்தைப் பரப்பும். கரிய பெரிய பனைமரத்தில் இருந்து அன்றில் ஒலிக்கும். இவையன்றி விரலால் தடவி வருத்தமுற விருப்பதைச் செய்யும் நல்ல யாழும் நடுச்சாமத்தில் என் உயிர் உய்யாத நிலையில் இசைத்து நிற்கும். இவற்றில் எனது அன்புநோய் மிகப் பெரியது. அதனை நீக்க எனது காதலர் அருகில் இல்லையே என புலம்புவதாக அருமையான பிரிவாற்றாமைப் பாடல் பாடியுள்ளார் .

வள்ளுவர் இதனை…

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

என்னும் குறளில் பிரிவால் வருகின்ற நோய் காலையிலே அரும்பாக இருந்து பகல் எல்லாம் மொட்டாக முதிர்ந்து பின்பு மாலையில் மலர்கின்றது என்கிறார்.

நாரையைத் தூது விடுதல்…

சிறு வெள்ளாங் குருகே! சிறு வெள்ளாங் குருகே!

துறைபோக அறுவைத் தூமடி அன்ன

நிறங் கிளர்தூவிச் சிறுவெள்ளாங் குருகே (நற்றிணை ….70)

என்னும் வரிகள் வெண்மையான நாரையே! நீ
எங்கள் ஊரில் உள்ள நீர்த்துறைகளுக்குச் சென்று
கெளிற்று மீனைத் தின்னுகிறாய். என்னுடைய
தலைவன் இருக்கும் ஊருக்குச் சென்று வருகிறாய்.
அவர் பிரிவால் நான் வாடுகிறேன் என்று சொல்லலாம்.
ஆனால், எங்கள்மீது அன்பு இருந்தும் மறந்து விடுகிறாய்
என்று தலைவன் பிரிவால் தலைவி நாரையைத் தூது
விடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வெள்ளிவீதியார் கணவனைப் பிரிந்து வாழ்ந்தவர்.
கணவனைப் பல இடங்களில் தேடி அலைந்தவர்.
இதனை…

ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ… (அகநானூறு …..45)

என்னும் பாடலில் தோழியிடம் தலைவர் தன்னை விட்டுப்பிரிந்து, வாகைமரத்தின் முற்றிய காய் நெற்றுகள் கூத்தரின் பறைபோல விட்டுவிட்டு ஒலிக்க, வெப்பம் மிகுதியான பெரிய காட்டுவழியாக மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் யானைகளைக் கொல்லும் புலி திரிகின்ற வழியைக் கடந்துசென்றார். அவர் பிரிவால் என்மீது பசலை பரவியது. காவல் மரமாகிய புன்னையை அன்னி என்பவன் வெட்டி வீழ்த்தியபோது ஆரவாரம் ஏற்பட்டது. அதைக்காட்டிலும் ஊர்மக்கள் எழுப்பிய அலர் எங்கும் பரவியது. ஆட்டனத்தியின் காதலனைக் கடல்கொண்டு சென்றபோது அவள்பெற்ற துன்பம்போல நானும் பெற்றேன் .

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல் (குறள்.1188)

தலைவன் பிரிவால் பசலை நிறம் அடைந்தாள் என்று பழி சொல்வது அல்லாமல், இவளைத் தலைவன் விட்டுப் பிரிந்தான் என்று கூறுபவர் ஊரில் இல்லையே… என்று வருந்துகின்றாள்.

தொல்காப்பியர் பிரிவின் நிலைகளைக் கூறும்போது,

ஓதல் பகையே தூதிவை பிரிவே (தொல்-971:பொருள்) என்கிறார்.

இக்காலத்தில் பெண்பாற் புலவர்கள் தங்களின் எண்ணக் கருத்துகளையும் தலைவன்மீது கொண்ட காதலையும் அழகியமுறையில் பதிவுசெய்து உள்ளார்கள். இதில் வெள்ளிவீதியார் பாடல்களின் மூலம் பழங்கால மக்களின் பழக்கவழக்கம் மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்று நிகழ்வுகளை அறியும் வாய்ப்பாக பாடல்கள் அமைந்துள்ளன. ஒருபெண் என்பவள் தலைவன் தன்னை விட்டுப்பிரியும் நேரத்தில் அவள்படும் துயரத்தைப் பாடல் மூலமாகக் கொண்டுவந்து பசலைநோயின் தன்மையைக் கண்முன்னே கொண்டுவரும் அவரது வாழ்வியல் அனுபவத்தை விளக்கும்விதம் மிகவும் அருமையான ஒன்றாகும்.

ஔவையின் விநாயகர் அகவல்: 

சித்தர் இலக்கியத்தில் குறள் தனியானதோர் பெருமை பெற்று விளங்குவது போலவே, அவ்வை இயற்றிய விநாயகர் அகவலும் பெருமைபெற்று விளங்குகிறது. குறட்பாவை ஆசான் என்றும் அகவலை அன்னை என்றும் அழைப்பது சித்தர் மரபாகும். இரண்டு நூல்களுமே சித்தர்களின் ஞானத்தை உள்ளடக்கிய கவிக்களஞ்சியங்களாக இருப்பினும் முன்னதை உபதேசிக்கிற குரு என்றும் பின்னதைப் பக்திஅமுதம் ஊட்டும் அன்னை என்றும் சித்தர்கள் போற்றி வந்திருக்கிறார்கள்.

பகுப்பு முறைகள்:

அகவல் 72 வரிகள் உடையது. தோத்திர வழிபாடு செய்யும் பக்தர்களில் பலரும் தங்கள் பாராயணத்தில் முக்கிய இடத்தை விநாயகர் அகவலுக்குத் தருகிறார்கள். இது ஒரே பாடலாக யாக்கப்பட்டு, தொடக்கம்முதல் முடிவுவரைத் துதி்ப்பாடலுக்குள்ளே ஞானத்தைக் குழைத்துத் தருகிறது. அகவல் எனினும் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் எனப் பொருள்படும். சொல்லுதல் அல்லது மொழிதல் என்பதைவிட அகவுதல் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு சிறப்பு உண்டு.

சிறப்பு:

விநாயகருடைய பெருமையை எடுத்துச் சொல்வதோடு, யோகிகள் வழிபடுகின்ற ஞானச் சின்னங்களை வரையறைசெய்து வகுத்துக்கூறுவது விநாயகர் அகவலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

திருமுருகாற்றுப்படை என்னும் நக்கீரர் படைப்பிலும் இந்த நுட்பங்கள் நன்கு பயின்றுவருவதையும் புலவர் உலகம் நன்கு அறியும்.

சித்தர்களின் ஞான நுட்பம் அகவலில் இருந்தாலும், வேறு தனிச்சிறப்பான தன்மையும் இதற்கு உண்டு.

முதலாவது சிறப்பு மொழிஎளிமை; இரண்டாவது இசைப்பண்பாகும்; மூன்றாவது அதனுடைய மந்திர ஆற்றலாகும்.

சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட

திருவடியைச் செந்தாமரை என்று அழைப்பது ஓர்
உயர்ந்த தமிழ் மரபாகும். தாமரை சேற்றில் மலர்வது;
சேற்றில் மலர்ந்தாலும் செம்மலராகப் பூப்பது இம்மலரின்
சிறப்பாகும். இதுவே வெண்டாமரையாகும்போது
சின்னமான வெண்மையாக மலர்கிறது. அழுக்கிலிருந்து அழகும், அள்ளலிருந்து தூய்மையும் பிறக்கின்றது என்பது தத்துவம். இதன் உட்பொருள், எல்லா அழகும் அழகின்மையிலிருந்து உதித்து மேலெழுந்து நிற்கிறது என்ற தத்துவம் உள்ளடக்கம் உடையது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த ஒரு வரியே இவ்வளவு சிறப்புடையது என்றால் முழுவதும் எவ்வளவு அழகான உட்பொருள் கொண்டது!

விநாயகர் அகவல் பிறந்த கதை:

ஔவையார் விநாயகருக்குப் பூசை செய்யும்போது இடையில் சேரமான் பெருமாள்நாயனார் வெள்ளை யானையின் மீது திருக்கயிலாயம் போகும்போது ஔவையார் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரையும் அழைக்க, அவர் நான் விநாயகர் வழிபாடு முடிந்துதான் வருவேன் என்று கூற அவர்கள் இவரை விட்டுவிட்டுச் சென்றார்கள். ஆனால் அகவலை முழுவதும் கேட்ட விநாயகர், ஔவையாரைத் தனது துதிக்கை மூலம் தூக்கி ஒரே நிமிடத்தில் கயிலை சேர்த்து விட்டார். நாயனாருக்கு முன்பே ஔவையார் கயிலாயம் சென்றார்.

நிறைவாக…

சங்க காலப் பெண்களின் படைப்புகள் காதல் மட்டுமன்றி ஞானத்தையும் உள்ளடக்கமாய் உடையவை. அறம், பொருள், இன்பம், வீடுபேறு உடையது நமது தமிழர் இலக்கியம். அதில், காதலைப் போற்றும் பெண்புலவர்கள் ஞானத்தையும் வியப்பூட்டும் ஒன்றாகப் படைத்து, அதில் மெய்ஞ்ஞானமாகிய பக்தியைப் படைத்தவிதம் மிகவும் அருமையான ஒன்றாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சங்ககாலப் பெண் புலவர்களின் படைப்புத்திறன்

  1. கட்டுரை மிக நன்றாக உள்ளது. பெண்பாற்புலவர்களின் மன ஓட்டங்களை அழகுற விளக்குகிறது. இன்னும் விரிவாக எழுதியிருக்கக் கூடாதா எனும் ஆவலை எழுப்புகிறது. ஒவ்வொரு பெண்பால் புலவரைப் பற்றியும் விரிவாக எழுதுங்களேன். நன்றி, அன்புடன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *