படக்கவிதைப் போட்டி (61)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அனிதா சத்யம் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.04.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
வறுமை வாக்கரசி போட
சொந்த ஊரை விட்டு
சொப்பனம் தேடி வந்தேன்
அப்பன் ஆத்தாளை மறந்து
அடுக்குமாடி கட்டிடத்தில்
அயராது உழைத்தேன்
இருக்க மனையில்லை
இல்லறம் சுகமில்லை
பறக்கும் காகம் போல்
கண்ட இடத்தில்
உண்டு உறங்கி
உயிர் வாழும் எனக்கு …
சிம்ம சொப்பனமாய்
சீமாட்டி நீ தரிக்க
பெண்மையை உணர்ந்து
பேர்காலம் பெற்றேன்
கள்ளி அறியா
தாய் பாலை
சொல்லிச் சொல்லி
கொடுத்தேன் என்
கட்டிச் செல்வமே
நான் கட்டையில்
போகும் வரை
உன் கடன் தீராதடி
முத்துச் செல்வமே
முழுமதியே
இந்த சொத்தை தவிர
வேறில்லையே
இந்த உலகில்
எழுந்து விளையாடு
எதிர் நீச்சல் நீ போட …!
– ஹிஷாலி,சென்னை .
தாயின் சபதம்…
அப்பன் விட்டுச் சென்றாலும்
அகிலம் பெரிது வாழந்திடலாம்,
தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
குப்பையில் கிடைத்த வைரம்நீ
கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!
-செண்பக ஜெகதீசன்…
குடிகார புருஷனால்
குடிமுழுகிபோனாலும்
மடிநிறைய மலர்த்தோட்டமாய் நீ
அடிவைத்ததும் துன்பங்களெல்லாம்
ஓரடித் தூரத்தான்போயின
உன் பொக்கை வாய் சிரிப்பிலும்
உன் ம்ழலை பேச்சிலும்
என் கவலைகள்தூசாகி போயின
மகனே உன் பலத்தால் உலகை ஆளும்
மனத்திண்மைபெறுவேன்
வெற்றிகள் பெற்று
விரைந்து செயலாற்ற
உற்றதுணை நீயே !
பய பஞ்சம் பத்து நாளில் போகுமென்பார்
நியதி நெறிகள் நிம்மதிப் பெய்தே
உயர நம்மை உயர்த்திவிடும் கண்ணே
அம்மா சொல்படி கேட்டு படித்து
சும்மா சோபேறியாய் இல்லாமல் மற்றவர்
மூக்கில் விரல் வைக்க படித்து
முன்னுக்கு வா என் முத்தாரமே
அச்சாரமாய் தருகிறேன் அன்பு முத்தம்