சங்ககால ஔவையாரும் கம்பனும்
–புலவர் இரா. இராமமூர்த்தி
தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகிற்கு உணர்த்தும் ஆதாரங்களுள் சங்க இலக்கியங்கள் முதலிடத்தைப்பிடிக்கின்றன! இந்தச் சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற இருவகைகளிலும், சங்கம் மருவிய நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு என்ற வகையிலும் பகுக்கப் பெற்றன. எட்டுத்தொகை நூல்களில், ஔவையார் இயற்றிய 59 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிற்காலப் புலவர்கள் பலரும் சங்க இலக்கியங்களில் தாம்பெற்ற பயிற்சியைத் தாமியற்றிய நூல்களில் நாமறியும் வகையில் புலப்படுத்தி விடுகின்றனர். வள்ளுவரின் திருக்குறளையும், அதன் கருத்துக்களையும் எடுத்தாளுவதை ஒரு தனித்தகுதியாகக் கருதிய புலவர் பலர் அவ்வாறே தம் நூல்களை எழுதியுள்ளனர். அவ்வகையில் கம்பர் தம் இராமாயணத்தில் முன்னோர் மொழிந்த சொல், பொருள் ஆகியவற்றைப் போற்றித் தம் பாடல்களில் அமைத்து விடுவார். சங்க இலக்கியங்களில் சிறந்த புலமைபெற்ற கம்பர் தம் ‘இராமகாதை’யில் பல பாடல்களைச் சங்க இலக்கியங்களின் சாயலில் படைத்து அவற்றைக் கம்பராமாயணத்தில் ஒளிவீசித் திகழ வைத்தார்!
அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு, நெடுங்காலம் தம் அரசவையிலேயே ஔவையாரை அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். அவர் சற்றுச் சினத்துடன் முதலில் பாடிய பாடலில் ”எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!” என்று பாடியதைக் கேட்டு அவர் சினத்தை ஆற்றும் வகையில் பேரன்பு காட்டி, அவரது நைந்துபோன பாசிச்செடியின் வேர் போன்று நூல்நூலாகத் தொங்கும் மண்தின்ற ஆடையை நீக்கி, நுண்மையான நூலால் நெய்யப்பெற்ற கெட்டிக் கரையை உடைய பட்டாடையை அணிவித்தான். உடனே தேள் கொட்டியது போன்று சுவைக்கும் பழைய கள்ளினைப் பொற் கிண்ணத்தில் நிரப்பிப் பருகத் தந்தான். பின்னர் முறைப்படி உணவு வகைகளைப் படைத்தான்.
இந்தப்பாடலில் ஔவையார், “மரம் தேடிக் காட்டுக்குச் செல்லுகின்ற தச்சன், நல்ல கருவிகளுடன் உடன்வரும் திறமைபெற்ற பணியாளர்களுடன் சென்றால் அவனுக்கு எல்லாவகை மரங்களும் கிட்டும். அதுபோல நாங்கள் உலகின் எத்திசை நோக்கிச் சென்றாலும்சோறு கிட்டும்! ” என்று பாடியதன் பொருளைக் கற்றறிந்து கொண்ட கம்பன், தம் மைந்தன் காரணமாகத் தன்னை இகழ்ந்த சோழ மன்னன் மேல் சினங்கொண்டு அவன் நாட்டை விட்டு நீங்கும் போது,
மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதோ?
உன்னையறிந் தோதமிழை ஓதினேன்? – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ; உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு!
என்று பாடினார். இது கம்பனுக்கு ஔவையார் தந்த தன்னம்பிக்கை ஆகும். இவ்வாறு கம்பனுக்கு நல்லுணர்ச்சி நல்கிய ஔவையாரின் பாடல்கள் மேலு சில உள்ளன.
ஔவையார் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில், ”தன்னை விட்டு நீங்கி, பொருள் தேடிச்சென்ற காதலர் வரவேண்டிய காலம் கடந்த பின்னும் வாராமையால், காதலியின் மேனியில் சிறு முளை போன்ற பசலை நோய் தோன்றியது. பிரிவுத் துன்பத்தால் மிக வாடிய நெஞ்சத்தில் படர்ந்தது. அதனைக் கண்ட ஊரார் மெல்ல மெல்லத் தமக்குள் இக்காதலைப் பற்றிப் பேசினர். அம்பல் என்ற வதந்திக் கிளைகள் பரவின. பின்னர், குறையாத காதலால் தளிர்கள் நிறைந்தன. நிலமெங்கும் நிழல் பரப்பிய மரமாய் வளர்ந்தது! ” என்ற பொருளில்,
”தலை வரம்பறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத்திறன் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பி,
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
நிலவரை எல்லாம் நிழற்றி
அலர்அரும்பு ஊழ்ப்பவும் வாரா தோரே!”
என்று பாடுகிறார். இப்பாடலில் விதை, முளை, சிறுகிளை, தளிர்கள், பெருமரம் என்ற முழுவளர்ச்சியும் முற்றுருவகமாக அமைந்துள்ளது.
இவ்வாறு ஒரு முழுமரம் உயர்ந்து கனியும் பழுத்த வகையைக் கம்பர் ஔவையாரின் வழியில் பாடுகிறார். அது,
”ஏகம் முதல் கல்வி முளைத்தெழுந்து, எண்ணில் கேள்வி
ஆகும் முதல் திண்பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகம் கனி ஓன்று பழுத்தது போலும் அன்றே!”
என்ற பாடலாகும். கல்வியாகிய விதை, கேள்வியாகிய அடிமரம், தவமாகிய இலைகள், அன்பு அரும்பு, தருமமாகிய மலர், போகமாகிய கனி பழுத்தது போன்ற நகர் என்ற முற்றுருவகம் ஔவையார் இட்ட அடித்தளத்திலிருந்து உருவானது தான் என்பதை நாம் எளிதில் புரிந்து கொண்டு மகிழ்கிறோம்.
அடுத்து ஔவையார் தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள். அடக்கம்மிக்க ஒரு பெண்ணுக்கே இவ்வாறு ஆத்திரம் பொங்கும் என்பது இயற்கை. தன் நிலையை அறியாத மதுரை மக்களைக் கண்டு ஆத்திரம் அடையும் கண்ணகியை நாம் சிலப்பதிகாரத்தில் கண்டு வியக்கின்றோம். நம் ஔவையார் காணும் பெண்மணி காதல் வேட்கை மிகுதியினால் ஊர்மக்களிடமே கோபம் கொள்கிறாள். தமிழ் நூல் களில் அகத்திணைத் துறையில் ஒரு பெண் சினங்கொண்டு ஊரையே எதிர்த்துக் குரல் கொடுப்பது இங்கு மட்டுமே. குறுந்தொகை இதனை,
”முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும்; ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ! ஒல்‘ எனக் கூவுவேன் கொல்!
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே!”
என்று அப்பெண் பாடுவதாகக் குறுந்தொகை 28-ஆம் பாடல் கூறுகிறது. இந்தப் புதுமையைக் கண்ட கம்பர் தம்முடைய இராமாயணத்தில், சீதையைப் பிரிந்து வருந்தும் போது, இராமன் உணர்ச்சிவசப்பட்டு, ”இந்த உலகங்கள் அனைத்தையும் அழிப்பேன்!” என்று சடாயுவிடம் சூளுரைக்கின்றான். இது பிரிவின் வேதனையால் இராமன் உலகின்மீதே சினம் கொள்ளும் காட்சி. இதனைக் கம்பர்,
”பெண்தனி ஒருத்தி தன்னைப் பேதைவாள் அரக்கன் பற்றிக்
கொண்டனன் ஏக , நீ இக் கோளுற , குலுங்கல் செல்லா
எண் திசை இறுதியான உலகங்கள் இவற்றை, இன்னே
கண்டவா னவர்க ளோடும் களையுமாறு, இன்று காண்டி!”
என்று இராமன் உலகங்களையும் , கண்டும் வாளாவிருந்த தேவர்களையும் கொன்றழிப்பேன்! ” என்று கோபத்துடன் கூறியதை நன்றாக உற்று நோக்கினால் , பிரிவுத் துன்பம் , நற்பண்பு மிக்க ,பொறுமைமிக்க இராமனையும் பாதித்த சூழ்நிலை நமக்குப் புரியும்! இந்தச்சினம் இராமனுக்கு வந்தது குறுந்தொகைப் பாடல் உண்டாகிய தாக்கத்தால்தான், என்பது நமக்குப் புரியும்!
தாரகை உதிரு மாறும் தனிக்கதிர் பிதிரு மாறும்
பேரகல் வானம் எங்கும் பிறங்கெரி பிறக்கு மாறும்,
நீரொடு நிலனும் காலும், நின்றவும் , திரிந்த யாவும்
வேரொடு மடியு மாறும், விண்ணவர் விளியு மாறும்,
இக்கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயு மாறும்,
திக்கொடும் அண்ட கோளப் புறத்தவும் தீந்து, நீரின்
மொக்குளின் உடையு மாறும், காண்”
என இராமன் முனிந்தான். திருமணம் நடக்கும் வரை பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்குக் காதல் கைம்மிக்க போது எல்லாருமே உணர்ச்சிவசப்படுவது இயல்பு. ஆனால் பொறுமையின் எல்லைவரை அமைதியாகவே இருக்கக் கற்பிக்கப் பெற்ற தலைவி, எல்லையைக் கடக்கும் சூழ்நிலையில் மிகவும் சினம் கொண்டு ”முட்டுவேன். தாக்குவேன்! ” என்று கூறுவது சற்று மிகையான செயல்தான். இதனை ஔவையார் கற்பனையாகப் பாடி நம் கவனத்தை ஈர்ப்பதைக் கற்றறிந்த கம்பர், இராமபிரான் தம் மனைவியின் பிரிவினைப் பொறுத்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு ” உலகையே அழிப்பேன்” என்று சினத்துடன் பேசும் செயலைக் காப்பிய மரபின் புதுவகை உத்தியாகக் கம்பன் கூறுவதை நாம் புரிந்து கொள்கிறோம்.
இரண்டு செயல்களையும் ஒரேவகைப் பிரிவுணர்ச்சியே கொண்டுசெல்வதைச் சங்க இலக்கியமும் , கம்பகாவியமும் ஒரே விதமாகக் காட்டும்போது ஔவையாரின் வழியில் கம்பன் பாடுவதை உணர்ந்து மகிழ்கிறோம்.
குறுந்தொகையில் மற்றொரு பாடல். தலைமகன் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லக் கருதுகிறான். அதே நேரத்தில், ‘அவளால் பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க இயலாதே’, என எண்ணித் தயங்குகிறான். அப்போது தோழி, தலைவனிடம் ”தலைவி உன்னுடன் செல்லும்போது கடுமையான காட்டின் வெம்மையையும் பொறுத்துக் கொள்வாள்” என்கிறாள். இதே சூழ்நிலையைக் கம்பரும் தம் காவியத்தில் உருவாக்குகிறார்.
”வல் அரக்கரின் மால்வரை போய்விழுந்து
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்ல, நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது!”
என்கிறான் இராமபிரான். அப்போது சீதை, ” நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?” என்று கூறி உடன்போகத் துணிகிறாள். குறுந்தொகைத் தோழி தலைவனிடம், ”குளம் நிறைந்த நீரில் முளைத்து மேலே தலைநீட்டி மலரும் குவளை மலர் , கோடைக் காலத்தில் நீர் வற்றிய போதும் காய்ந்து கிடந்தது, அடுத்து நீர் வரும் காலத்தில் மீண்டும் முளைத்து மலரும். அதுபோல் உன்னுடனே இருக்கும் மகிழ்ச்சியில் வாட்டத்தை உணராமல் உள்ளே உயிர்ப்புடன் தலைவி இருப்பாள்! ” என்கிறாள். இதனைக் குறுந்தொகையின்
”நீர்கால் யாத்த நிரைஇதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடா தாகும்!”
என்ற பாடற்பகுதி குறிக்கிறது.
கம்பராமாயணத்தில், ”காட்டின் கடுமையை இராமனுடன் செல்லும் பிரிவில்லாத சூழ்நிலையில் சீதை தாங்கிக் கொள்வாள்!” என்று இலக்குவன் கூறுகிறான். நீர் நிரம்பிய குளத்தில் மீனும், குவளை மலரும் உயிர்ப்புடன் இருப்பதுபோல் நானும் சீதையும் உயிர்ப்புடன் விளங்குவோம். அதுவும் சீதை உன்னைச் சற்றுப் பிரிந்தாலும் குவளை மலர்கள் நீரின்றி வாடி மீண்டும் நீர் வரும்போது உயிர்த்து எழுவதுபோல், மேலே வாடினாலும் உள்ளே உயிர்ப்புடன் இருப்பாள்!” என்று இலக்குவன் கூறுகிறான். இதில் மிகவும் நுட்பமாக இராவணன் செயலால் சீதை பிரிந்தாலும், அங்கே தன்னைக் காத்துக்கொண்டு அங்கிருந்து, மீண்டும் இராமனிடம் சேரும்போது ,உயிர்ப்படைவாள்! (ஆனால் குளத்து மீன், நீரில்லையேல் உடனே உயிர் விடுவது போல் நான் மாள்வேன்!) என்று இலக்குவன் கூறும் பாடல், ஔவையாரின் குறுந்தொகைப் பாடலின் வழியில் அமைந்து, கம்பரின் சங்க நூற்பயிற்சியைக் காட்டுகிறது. இதனை,
”நீருள எனின் உள மீனும் நீலமும்
பாருள எனின் உள யாவும், பார்ப்புறின்
நாருள தனுவுளாய் நானும் சீதையும்
ஆருளர் எனினுளேம் அருளுவாய் என்றான்!”
என்று கம்பர் பாடுகிறார். இப்பாடலில்,ஔவையாரின் நீர்க்குளம் , குவளை மலர் ஆகியவை கம்பனுக்கு வழிகாட்டியாக அமைந்த அழகை நாம் சுவைத்து மகிழ்கிறோம். இவ்வாறே சங்கத்தமிழில் கம்பன் தன்னையே பறிகொடுத்த சிறப்பை அடுத்து எழுதுவேன்.