-பா.மஞ்சுளா

 

திரைவிலகட்டும்!

திருமூலர் (1)

 

ஒன்பது தந்திரப் பகுப்புமுறைகள்

திருக்குறளும் திருமந்திரமும் பல இடங்களில் ஒன்றுபடுகிறது. திருமந்திரத்தின்  தந்திரங்களை அதிகாரங்களாகப் பகுத்து

முதல்தந்திரத்தில் 24அதிகாரங்களாகவும்,
இதுவும் குறளைபோன்று புலால் மறுத்தல், கொல்லாமை, ஆட்சிமுறை, வான்சிறப்பு, அன்புடைமை, கல்வி, கல்லாமை போன்ற நீதிநூல்களில் பேசப்படும் செய்திகள் உள்ளன.

இரண்டாம் தந்திரம் 25 அதிகாரங்கள். இதில்
புராணங்களைப்  புதிய அணுகுமுறையுடன் நாடியிருப்பதும், வேண்டுதல் ,வேண்டாமை இல்லாத இறைவழிபாட்டு முறையே புதிய
பொருள் விளக்கத்துடன் மிளிர செய்கிறது.

மூன்றாம் தந்திரம் 21 அதிகாரம். அட்டாங்க யோகம், யோக சாதனைகளை விளக்கிப் பின் ஆன்மீக பயிற்சியில் ஒருவனை ஈடுபடுத்துகிறது. இதுவே மனிதனின் உடம்பைக் சிதையாமல் பாதுகாக்கும் வழி எனக் கூறுகிறது.

நான்காம் தந்திரம் 13 அதிகாரங்களை கொண்டது. மந்திரங்களை வடிவமைக்கும் சக்கரங்களின் அமைப்பும், அவற்றை வழிபடும் முறையும்  அதனாலே கிடைக்கும் நன்மைகள் பற்றியும் ஆராய்ந்து பேசுகிறது.

ஐந்தாம் தந்திரம் 20 அதிகாரங்களை உடையது.
இதுவே இந்நூலுக்கு உயிர்நாடி. முன்னும் பின்னுமாக அமைந்திருக்கும் முதல் நான்கு தந்திரங்களுக்கும், இறுதி நான்கு தந்திரங்களுக்கும் ஐந்தாம் தந்திரமே வழியும், பயனுமாக அமைந்தது. இதிலே சரியை,
கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை
நெறிகளும் அதற்கான தாசமார்க்கம், சற்புத்திர
மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் ஆகிய
நான்கு மார்க்கத்தின் உண்மைகள்மூலம் சைவத்தின் பெருமை உணர்த்தப்படுகிறது.

ஆறாம்தந்திரம் 14 அதிகாரங்கள். உண்மைகளை அறிந்து சிந்தித்து முற்றுணர்வு பெறுவதற்கு வேண்டிய சாதனங்களைக் கூறும்.

ஏழாம் தந்திரம் 38 அதிகாரங்கள். இது ஐம்பொறிகளையும்
அடக்கும் முறை, சிவநெறியில் நிற்போர்
அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நல்லுரைகளைத் தாங்கி நிற்கிறது.

எட்டாம் தந்திரம் 45 அதிகாரங்கள் கொண்டது.
சிவனது கூடுதல் என்னும் சிவயோக நிலையை
உணர்த்துவது.

ஒன்பதாம் தந்திரம் 27 அதிகாரங்கள். சிவனை
அடைவதால் ஏற்படும் வீடுபேற்று நிலையைக் கூறுகிறது. இதில் இடம் பெறும் ’சூனிய சம்பாதனை’ என்ற பகுதி விடுகதைபோல மறைபொருள்கள் பற்றிய பாடல்கள் அமைப்பை கொண்டது. மொத்தம் 227 அதிகாரங்களில் 3000 பாடல்களைக்  கொண்டது.

பண்டைய தமிழகம் பெளத்தம், சமணம் முதலிய சமயங்களின் பிடியில் இருந்த  இருண்ட காலத்தில் சமயங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்னும் தீப்பொறியை  மூலன் போட, அது பக்தி இயக்கத்தால் ஊதிப் பற்றவைக்கப்பட்டது. சைவத்தால் தமிழை மீட்டெடுக்க முதல் விதையைத் தமிழ்மண்ணில் திருமூலர் விதைத்தார்.

   ” என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

என்று தனது படைப்பின் நோக்கத்தைக் கூறுகிறார்.
சேவல்கள் காலமறிந்து கூவ வேண்டும்; காலமல்லாத காலத்தில் கூவும் கூவல்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. அப்படிக் காலம் அறிந்து கூவிய முதல் தமிழரது கூவலே திருமந்திரம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *