-மேகலா இராமமூர்த்தி

பிஞ்சுக் குழந்தையின் மெய்தீண்டலும், அதன் அமுதனைய சொற்கேட்டலும் அன்னைக்கு அளிக்கும் இன்பம் அளவற்றது.

”மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்ற பொய்யில் புலவரின் பொருளுரை இங்கு நம் நினைவுக்கு வருகின்றது.

mom and baby

திருமிகு. அனிதா சத்யத்தின் கைவண்ணத்தில் மிளிரும் இந்த வண்ணப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாங்காய்த் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் வல்லமையின் நன்றி!

செங்கனி வாய்திறந்து இந்த மழலை உதிர்க்கும் சொல்முத்துக்கள், நம் கவிஞர்களிடம் பல கவிதை வித்துக்களை முளைவிடச் செய்திருக்கும். அவற்றை நாமும் இரசித்துவருவோம்!

”அப்பன் நம்மைக் காக்காவிட்டால் என்ன? அகிலம் பெரிது! வாழ நினைத்தால் வாழலாம்” எனத் தன் குழந்தைக்கு மனவுறுதியூட்டும் மறத்தாயைக் கவிதையில் வடித்துள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

அப்பன் விட்டுச் சென்றாலும்
அகிலம் பெரிது வாழ்ந்திடலாம்,
தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
குப்பையில் கிடைத்த வைரம்நீ
கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!

***

பொக்கைவாய்ச் சிரிப்பிலும், மழலைப் பேச்சிலும் மனம் மயக்கும் இந்தக் குழந்தையின் பலத்தால், குடிகாரப் புருஷனால் முழுகிய தன்குடி தலைநிமிர்ந்துவிடும் என்று நம்புகின்ற தாயைக் காண்கின்றோம் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையில்.

குடிகாரப் புருஷனால்
குடிமுழுகிபோனாலும்
மடிநிறைய மலர்த்தோட்டமாய் நீ
அடிவைத்ததும் துன்பங்களெல்லாம்
ஓரடித் தூரத்தான்போயின
உன் பொக்கை வாய் சிரிப்பிலும்
உன் மழலைப் பேச்சிலும்
என் கவலைகள்தூசாகிப் போயின
மகனே உன் பலத்தால் உலகை ஆளும்
மனத்திண்மைபெறுவேன்
வெற்றிகள் பெற்று
விரைந்து செயலாற்ற
உற்றதுணை நீயே !
பய பஞ்சம் பத்து நாளில் போகுமென்பார்
நியதி நெறிகள் நிம்மதிப் பெய்தே
உயர நம்மை உயர்த்திவிடும் கண்ணே
அம்மா சொல்படி கேட்டுப் படித்து
சும்மா சோம்பேறியாய் இல்லாமல் மற்றவர்
மூக்கில் விரல் வைக்கப் படித்து
முன்னுக்கு வா என் முத்தாரமே
அச்சாரமாய்த் தருகிறேன் அன்பு முத்தம்

 ***

இந்த வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெற்றிருப்பவரை அடுத்துச் சந்திப்போம்!

இன்மையாலும் (வறுமை), கணவன் மற்றும் குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இன்மையாலும், இப்புவியில் எத்தனையோ மங்கையர் உண்ண உணவின்றி, வாழ வழியின்றித் தம் வாழ்க்கையெனும் ஓடத்தை எதிர்நீச்சல் போட்டே செலுத்துகின்றனர். இதற்கிடையில், தம் குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்க அவர்கள் படும்பாடோ வார்த்தைகளால் விவரிக்க இயலாத துயர காவியங்கள்!

மிடிமை தன்னை அடிமைசெய்து வாட்டிவதைக்கின்ற போதினும், கோழையைப்போல் தன் மகளுக்குக் கள்ளிப்பால் ஊட்டாத ஏழைத்தாயை நம் கண்முன் நிறுத்தும் கவிதை நம்நெஞ்சைக் கனக்கச்செய்கிறது.

வறுமை வாக்கரசி போட 
சொந்த ஊரை விட்டு
சொப்பனம் தேடி வந்தேன் 

அப்பன் ஆத்தாளை மறந்து
அடுக்குமாடி கட்டிடத்தில்
அயராது உழைத்தேன் 

இருக்க மனையில்லை
இல்லறம் சுகமில்லை 

பறக்கும் காகம் போல்
கண்ட இடத்தில்
உண்டு உறங்கி
உயிர் வாழும் எனக்கு

சிம்ம சொப்பனமாய்ச்
சீமாட்டி நீ தரிக்க
பெண்மையை உணர்ந்து 

பேறுகாலம் பெற்றேன் 

கள்ளி அறியாத்
தாய்ப் பாலை
சொல்லிச்  சொல்லி
கொடுத்தேன் என்
கட்டிச் செல்வமே 

நான் கட்டையில்
போகும் வரை 

உன் கடன் தீராதடி
முத்துச் செல்வமே
முழுமதியே 

இந்தச் சொத்தைத் தவிர
வேறில்லையே
இந்த உலகில்
எழுந்து விளையாடு
எதிர் நீச்சல் நீ போட…!

பொன்னும் பொருளும் இல்லையென்று கலங்காது, பெற்ற குழந்தையையே பெறற்கரும் சொத்தாக நினைந்துபோற்றும் அன்னையின் உள்ளத்தைத் திறந்துகாட்டியிருக்கும் திருமிகு. ஹிஷாலியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 61-இன் முடிவுகள்

  1. இவ்வார சிறந்த கவிஞராய் என்னைத் தேர்ந்தெடுத்த திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் ‘வல்லமை’ நிர்வாகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *