நிர்மலா ராகவன்

படிக்க மட்டும்தானா கல்லூரி?

நலம் (1)

(நான் கோலாலம்பூரிலுள்ள ஒரு கல்லூரியில் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றி முடிந்ததும் என்னிடம் ஒரு மாணவி பகிர்ந்துகொண்டது).

மாணவியின் வருத்தம்: என் தாய் அதிகப் படிப்பறிவு இல்லாதவர். கல்லூரியில் பாடங்கள் முடிந்ததும், எந்த நிகழ்ச்சியிலும், விளையாட்டிலும் கலந்துகொள்ளாது, உடனே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார். இதனால் பிற மாணவிகளின் கேலிக்கு ஆளாகிறேன்.
அலசல்: திரைப்படங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து பயந்திருக்கவேண்டும் உங்கள் தாய். ஆண்களுடன் இளம்பெண்கள் பேசிப் பழகினாலே காதல் பிறந்துவிடும், இல்லையேல் தகாத உறவு ஏற்பட்டுவிடும் என்று நினைத்திருக்கிறார்கள்.
ஆண்-பெண் கவர்ச்சி இளமையில் மட்டுமல்ல, வேறு எந்த வயதிலும் ஏற்படலாம். இது இயற்கை. இது புரிந்து, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டுவது அவசியம்.

`அம்மாவுக்கு கல்லூரியைப்பற்றிச் சொன்னால் என்ன புரியும்!’ என்ற அலட்சியப்போக்கு இல்லாது, ஒவ்வொரு நாளும் தன்னை மகிழ்வித்த, அல்லது பாதித்த சமாசாரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். (உதாரணம்: ஒரு பதின்ம வயதுப்பெண்ணுடன் படிக்கும் பையன்கள், `வாவ்! உன் காலெல்லாம் எவ்வளவு முடி!’ என்று வியந்து பாராட்ட, அவளுக்கோ ஒரே அவமானம். பையன்களுக்குப் பெருமையாகத் தோன்றுவது பெண்களுக்குக் கேவலமாகப்படும். தாயுடன் இதைப் பகிர்ந்துகொண்டால், உடலில் தேவையற்ற ரோமத்தை நீக்கும் வழியைச் சொல்லித்தருவாரே!)
நான் அந்த மாணவியிடம் கூறியது: `நீ உண்மையாக நடந்துகொள்கிறாய் என்ற நம்பிக்கையை ஏற்படுத்து. `தமிழ்ப்பெண்கள் உத்தியோகத்தில் படும் பாடு’ என்பதுபோல் நான் பேசியது உனக்கு உபயோகமாக இருந்ததா? அதைப் போய்ச்சொல்லு!’

`நான் இன்னிக்கே கடைக்குப் போய் நாலு புடவை வாங்கிக்கப்போறேன்!’ என்றாள் அப்பெண். (நான் எப்போதும் புடவையே உடுத்துவதை உத்தியோகம் பார்த்த இடத்தில் சில அறிவிலிகள் கேலி செய்வதாகக் கூறியிருந்தேன்).

மேலும் கேட்டேன்: `கல்லூரியில் நடப்பதை அம்மாகிட்டே சொல்வியா?’

அவள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். மறுத்துத் தலையாட்டினாள்.

`சொல்லணும்,’ என்றேன். `இன்னிக்கு நான் வந்து பேசினது, அதிலே ஒனக்குப் பிடிச்சது, பிடிக்காதது — இப்படி’.

அன்று சனிக்கிழமை. பாடங்கள் கிடையாது. இருந்தாலும், தோழி ஒருத்தி வற்புறுத்தி அவளை அழைத்து வந்திருந்தாள். `தமிழ்ச்சங்கமும், விளையாட்டுப்போட்டிகளும் உன்னைப் போன்றவர்களுக்குத்தானே! நீயே கலந்து கொள்ளாவிட்டால் எப்படி?’

அவள் முகம் மலர்ந்தது. `இன்னிக்கு அம்மாகிட்டே எல்லாத்தையும் சொல்லப்போறேன்!’ என்று விடைபெற்றுக்கொண்டாள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நலம் …… நலமறிய ஆவல்! (2)

  1. நாங்கள் கல்லூரியில் படிப்பைத் தவிர மற்றதை எல்லாம் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டோம். பரிக்ஷையில் மார்க் வாஙக்வும் கற்றுக்கொண்டோம். 
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *