மீ.விசுவநாதன்

 
இந்த வீட்டிற் குள்ளேதான்
என்தாத்தா பாட்டியும் வாழ்ந்தார்கள் !
வந்த இன்ப துன்பத்தை
வரவேற்றுச் சிறப்புடன் வென்றார்கள் !
எந்த வேளை ஆனாலும்
இருக்கின்ற உணவினைப் பகிர்ந்தார்கள் !
கந்த வேளை எப்போதும்
கருத்தினில் வைத்தே கடந்தார்கள் !

சும்மாப் போக வரும்போதும்
சுவைப்பதற்கு தட்டை, முறுக்குகளை
அம்மா செய்து எங்களுக்காய்
அன்பாக அள்ளியே தந்தார்கள் !
எம்மாம் பெரிய மனத்துள்ளே
எப்போதும் கருணை கொண்டார்கள் !
பம்மாத் தெல்லாம் இல்லாமல்
பச்சைவயல் போலி ருந்தார்கள் !

இன்னார் என்று இல்லாமல்
இரக்கத்தில் உதவிடக் கரம்நீட்டும்
பொன்னார் குணத்துப் பெரியோர்கள்
புழக்கத்தில் பொலிகிற இல்லமிது !
முன்னோர் பாதம் பட்டதனால்
முத்தாக ஒளிர்கிற இவ்வீட்டில்
பன்னீர்ப் பூவின் வாசனையை
பரம்பரையாய் நுகர்ந்திட முடிகிறது !

(03.05.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *