அகத்தில் வைத்துப் பூசிப்போம்

0

எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

230c7ee8-a9f0-4f48-b2c7-42cd28a6da39

பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார் !

தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
ஊணுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா வண்ணம்
குட்டியாப் பொட்டுவைப்பாள் குளிவிழும் அக்கன்னமதில்
கட்டியணைத் தணைத்து கற்கண்டே எனவிழித்து
தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !

ஏங்கித் தவிக்கும்தாய் இதையெல்லாம் எண்ணுகின்றாள்
எதையுமே மனங்கொள்ளா இருக்கின்றான் அவர்பிள்ளை
தூங்காமல் கண்விழித்த தூயவளைப் பாராமல்
துரையாக வாழ்ந்துகொண்டு தூரவைத்தான் தாயவளை !

தாயவளோ காப்பகத்தில் தனையனையே நினைக்கின்றாள்
தாய்மைநிறை அவளுள்ளம் தவியாகத் தவிக்கிறது
தவிப்பறியா மனத்துடனே தனயனுமே இருக்கின்றான்
தாய்மனதை நோகடித்து தாம்வாழ்தல் முறையன்றோ !

காப்பகத்தில் தாயைவிட்டுக் களியாட்டம் நடத்துகின்ற
கருணையில்லா உள்ளங்களே கடவுளுமை மன்னிக்கார்
கர்ப்பத்தில் சுமந்தவளை கண்போலக் காத்தவளை
கவலையிலே மூழ்கவிட்டு வாழ்வதுதான் முறையாமோ !

நோய்வந்து படுக்கையிலே நூறுமுறை கண்விழித்து
பாய்மீதும் படுக்காமல் பஞ்சணையில் உறங்காமல்
கண்விழிக்கும் காலம்வரை கண்ணுறங்கா இருந்தவளை
காப்பகத்தில் விட்டுவிட்டு கண்ணுறங்க மனம்வருமா !

பரிசுபெற வேண்டுமென்று பலகனவு கண்டவளை
உரிமையுடன் பாராமல் ஒதுக்கிடுதல் முறையாமோ
கருவுற்ற நாள்முதலாய் பெற்றெடுக்கும் காலம்வரை
எமைநினைத்து நின்றவளை ஏங்கவிடல் முறையன்றோ !

அன்னைதனை அரவணையார் அகமகிழ வாழார்கள்
அன்னையவள் அடிதொழுவார் அனைத்துமே பெற்றிடுவார்
அன்னையது கண்ணீரால் அனைத்துமே அற்றுவிடும்
அன்னையவள் தினமதனில் அவளாசி பெற்றுநிற்போம் !

ஆர்மனதும் நோகாமல் வாழ்ந்துவந்த அன்னையவள்
ஆருமற்ற வெறுமையிலே அழவிடுதல் முறயன்றோ
அன்னைதினம் கொண்டாடும் அனைவருமே கேளுங்கள்
அன்னையது மனம்மகிழ அகத்தில்வைத்துப் பூசிப்போம் !

நோய்க்கு மருந்தாவாள்
நொடியிலவள் விருந்தளிப்பாள்
சேய்க்கு முகஞ்சுழியாள்
சிந்தனையின் வித்தாவாள்
ஆர்க்குமவள் உதவிடுவாள்
அன்புநிறை மனமுடையாள்
அகிலத்தில் அன்னையவள்
அனைவருக்கும் தெய்வமாவாள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *