இராகவேந்திரரின் இறுதி உபதேசங்கள்!
அருள்மிகு இராகவேந்திர சுவாமிகளின் இறுதி உபதேசங்கள்! அத்தனையும் சத்திய வாக்குகள்!
1671 ஆம் ஆண்டு சுவாமிகள் சமாதி நிலை அடையும்பொருட்டு பிருந்தாவனம் செல்ல ஆயத்தம் செய்யும் இறுதி வேளையில் தம் பக்தர்களுக்கு இறுதியாக அளித்த முத்தான உபதேசங்கள்!
வாழ்க்கையில் சரியான நடத்தை இல்லையெனில் சரியான சிந்தனையும் இராது.
நல்லார் மற்றும் தகுதியுடையாருக்குச் செய்யும் உதவியோ, தர்மமோ கடவுளின் உளமார்ந்த பூசைக்கு நிகராகும்.
சாத்திரத்தை முழுமையாகப் பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு அதிசயங்கள் செய்வோரை விட்டுவிலகியிருங்கள்.
நானும், சிரீமத் ஆசாரியாரும் நிகழ்த்தியுள்ள அதிசயங்கள் அனைத்தும் இறையருளினாலும், அவர்தம் மகிமையை உலகோருக்கு உணர்த்தவும், இறை சக்தியால் எப்பேர்ப்பட்ட பெரும் சக்திகளையும் அடைய முடியும் என்பதை பறைசாற்றவும் நிகழ்த்தப்பட்டதேயன்றி அதில் எந்த பொய்யும், பித்தலாட்டமும் இல்லை.
சரியான ஞானத்தை மிஞ்சிய அற்புதங்களோ, அதிசயங்களோ எங்கும் இல்லை. அத்தகைய ஞானம் இல்லாதோரின் செயலும், அதிசயங்களும், சூனிய வித்தைகள் மட்டுமே. அதைச் செய்பவருக்கும், நம்புபவருக்கும் எப்பயனும் விளைவிக்காது.
கடவுள் மேல் வைக்கும் குருட்டு பக்தியால் எப்பயனும் இல்லை. இறைவனின் மேலாண்மையை முழுமையாக உணர்ந்து செலுத்தும் உண்மையான பக்தியே முழுமையான பயனளிக்கக்கூடியது.
கடவுளிடம் உள்ள பற்றைக் கடந்து மற்ற இதர தேவதைகளிடமும் அவரவர்கள் தகுதிக்கேற்ப பக்தி செலுத்துதல் நலம்.
இவ்வாறு உபதேசங்கள் செய்து முடித்தவர், பிரணவ மந்திரத்தை ஓத ஆரம்பித்து ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்துவிட, ஒரு தருணத்தில் கையில் இருந்த அவருடைய சபமாலை ஓய்ந்து நின்றுவிட, அவர்தம் சீடர்கள் அவருடைய முக்தி நிலையை புரிந்துகொண்டு அவரைச் சுற்றி பிருந்தாவனச் சுவர் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்!