மறவன்புலவு க. சச்சிதானந்தன்

c1508f89-ee03-4738-9542-f9d36e45eb3e

இன்றுடன் 40 நெடிய ஆண்டுகள். 1976 மே 14இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய நாள். ஈழத் தமிழர் வாழ்வில் வரலாற்றுத் திருப்புமுனை நாள்.

தமிழரசுக் கட்சியின் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் அங்கிருந்தார். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம் அங்கிருந்தார். மலையகத்தின் மாபெரும் தலைவர் சௌ. தொண்டமான் அங்கிருந்தார். மூவர் தலைமையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இலங்கைத் தமிழர் இயற்றினர்.

1976 மே மாதத்தில் அந்தத் தீர்மானத்தின் ஆங்கில வாசகங்களைத் தட்டச்சிட்டேன், தவறற்ற ஆவணமாகத் தயாரித்தேன் என்பதால் வரலாற்றுக்குச் சாட்சியாக இருந்தேன்.

இத்தீர்மானத்தை இயற்றலாமா? வேண்டாமா? என நீண்ட காலம் இத்தலைவர்கள் கலந்துரையாடினர். தீர்மானத்தால் வரும் நன்மை தீமைகளை நோக்கினர். இக்கலந்துரையாடல்களுக்கும் சாட்சியாக இருந்தேன்.

மூதறிஞர் செல்வநாயகத்தின் இல்லம். மு. திருச்செல்வமும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். Sir, this is not a bearer cheque. This is not a crossed cheque. This is an account payee cheque. It is a non-negotiable instrument. மூதறிஞர் செல்வநாயகமும் மற்றவர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். பெரியவருக்குக் கேட்டிருக்குமா என்ற ஐயம் மு. திருச்செல்வத்துக்கு. Sir, did you hear me? என்றார், கொஞ்சம் உரத்த குரலில். உதட்டைத் திறக்காமல் சிரிப்பைத் தவழவிட்டுக் கண்களை விரித்து மழலையானார் செல்வநாயகம், கேட்டதாகத் தலையாட்டினார். நான் சாட்சியாக நின்றேன். மு. திருச்செல்வத்துடன் மகிழுந்தில் நான் திரும்புகையில், Thamby, we are entering the most challenging phase in our recent political history. Periyavar knows what is best for the Tamil people என என்னிடம் கூறினார்.

அவசரமாக எடுத்த முடிவல்ல. ஆலோசிக்காமல் எடுத்த முடிவல்ல. இளைஞர்களின் ஆவேசத்தால் எடுத்த முடிவல்ல. படிநிலைகள் வழி ஏறாமல் எடுத்த முடிவல்ல.

இந்த முடிவைத் தவிர வேறு அரசியல் வழி இல்லையாதலால் இம்மூவர் தலைமையில் ஈழத் தமிழினமே வட்டுக்கோட்டைக்குச் சென்றது. பண்ணாகத்தில் திரண்டது.

எந்தப் படியிலும் ஏறாமல் விட்டேனா? எந்தக் கதவையும் தட்டாமல் விட்டேனா? எந்த வழியையும் நாடாமல் விட்டேனா? கீழே இறங்கமால் விட்டுக்கொடாமல் விடாப்பிடியாக நின்றேனா? நியாயமான உடன்பாடுகளுக்கு மறுத்தேனா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வருவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

சொன்னவர் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம். திருகோணமலையில் தன் வீட்டில் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தவர் இன்றைய தமிழர் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன்.

1949 திசம்பர் 18ஆம் நாள் மூதறிஞர் செல்வநாயகம் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முதலாவது மாநாட்டுத் தலைமை உரையில் கூறிய சில வரிகளைத் தருகிறேன்.

“……… பெரிதும் சிறிதுமாக உள்ள மொழிவழி இனங்களிடையே எழும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசுகளும் இணைந்துள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு வழிகள் உள.

“ஒவ்வொரு மொழி இனத்துக்குமாக, இறைமையுடைய தனித்தனி நாடுகளை அமைக்கப் பரந்த நிலப்பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி.

“ஒவ்வொரு மொழி இனத்துக்குமாகத் தன்னாட்சியுடைய மாநிலங்களை அமைத்து, மாநிலங்கள் சேர்ந்து நடுவண் அரசை அமைக்கின்ற கூட்டாட்சி அரசைக் கொண்ட ஒரே நாட்டை அமைத்தல், மற்றொரு எளிதான வழி.

“இத்தகைய வழிகளுக்கமையச் செயற்படுவதாயின் மொழிவழி இனங்கள் தத்தமக்கெனத் தனியான நிலப்பகுதிளைக் கொண்டிருக்க வேண்டும்.”

“…..நாங்கள் கேட்கின்ற தீர்வு இதுவே. தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம், தன்னாட்சி உடைய சிங்கள் மாநிலம், இரண்டு மாநிலங்கட்கும் பொதுவான நடுவண் அரசு. இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு. சிறியதான தமிழ்ப் பேசும் நாட்டினம் அழிந்து போகமலும், பெரியதான சிங்கள நாட்டினத்தினால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு இதுவே.”

57 ஆண்டுகளின் பின்னரும் அதேயளவு ஆகக் குறைந்த ஏற்பாடுகளையே தமிழ் தலைவர்கள் அனைவரும் இன்றும் பேசுகின்றனர். மூதறிஞர் செல்வநாயகம் தொலைநோக்கினர், அரசியல் தெளிந்தவர். மனித நேயமும், மனித உரிமையும் பேணுபவர்.

1949 தொடக்கம் கடுமையாக உழைத்தார். அவரது ஒவ்வொரு அரசியல் காய் நகர்த்தலும் தமிழருக்கு அரணாயின. 27 ஆண்டுகளின் பின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அவரது தேடலின் தெளிவு. அரசியல் முதிர்ச்சியின் பேறு.

“ஒவ்வொரு மொழி இனத்துக்குமாக, இறைமையுடைய தனித்தனி நாடுகளை அமைக்கப் பரந்த நிலப்பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி  என 1949இல் அவர் கூறிய முதலாவது வழியே, 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாயது.

பிரித்தானியரும் சிங்கள அரசியல் தலைவர்களும் களம் அமைத்ததாலன்றோ ஈழத் தமிழர் வட்டுக்கோட்டையை அடைந்தனர்.

மூதறிஞர் செல்வநாயகம் உறுப்பினராக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு, ஜீ ஜீ பொன்னம்பலம் தலைவர். 1944 நவம்பர் 27இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் ஜி ஜி பொன்னம்பலம் தலைமையுரை ஆற்றினார். கூட்டம் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது. அவர் ஆற்றிய உரையின் சில வரிகள் குறிப்பிடத்தக்கன.

“…… இலங்கைக்கு நாம் அடிமைகளாக வரவில்லை. உரிமைகொண்ட ஆட்சியாளர்களாக இருந்தோம். நமது நிலத்தில் நாம் உரிமை கொண்டாடி வாழ்ந்தோம். இதை நினைவுபடுத்துகிறேன். தமிழரே இந்தத் தீவின் ஆதிக் குடிகள். இதை நமது சிங்கள நண்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஆட்சிசெய்த அரசை நாம் பெற்றிருந்தோம். இதனை இலங்கையின் வரலாற்றில் காணலாம். ஐரோப்பியக் கடலாடிகள் வரும்வரை நம்மை (தமிழரை) அந்நியர் ஆளவில்லை. நம்மை நாமே ஆண்டோம்……”

இலங்கையின் ஆட்சியுரிமையை இலங்கையில் வாழ்கின்ற இருபெரும் மொழி வழிச் சமூகங்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கூறினர். இலங்கை விடுதலை பெற்றால், தமிழர் ஒத்த குடியுரிமை பெற்றவர்களாகவே சிங்களவருடன் வாழ ஒப்புக்கொள்வார் என்ற கருத்தைச் சோல்பரி ஆணைக்குழுவின் முன் ஐயம் திரிபு அற ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்களின் இந்தக்கோரிக்கை, “ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை” எனப் பிற்காலத்தில் புகழ்பெற்றது.

தமக்கென ஆட்சியைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் எனத் தமிழர் சார்பில் தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை. தமிழர் தனியான தேசிய இனம் என்பதால், தமிழர் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிநாட்டுக் கோரிக்கையைச் சோல்பரி ஆணைக் குழுவின் முன் வைக்கவில்லை. தமிழரின் பராம்பரியங்களையும் வாழ்வு முறைகளையும் முன்னெடுக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பையுமே தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை.

ஈழத் தமிழரின் மென்மையான கோரிக்கையைப் பிரித்தானியர் ஏற்கவில்லை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற தளத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்களவர், எண்ணிக்கையில் சிறுபான்மையான தமிழரை மேலாட்சி செய்யும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை இலங்கைக்குக் கொடுத்தனர். அதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முதற் தளம்.

எண்ணிக்கைப் பெரும்பன்மையை மேலும் உயர்த்தச் சிங்களவர் கொணர்ந்த முதலாவது இன ஒழிப்பு அம்பு, தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம். அதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் இரண்டாவது தளம்.

1948 திசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (குடியுரிமைச்) சட்டம், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுள் மூன்றில் ஒரு பங்கினரை நாடற்றவர்களாக்கியது. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒரே “குற்றத்திற்காக” இவர்கள் வாக்குரிமையை இழந்தனர்; நாட்டுரிமை இழந்தனர்; குடியுரிமை இழந்தனர்; ஆட்சியுரிமை, அரசுரிமை அனைத்தையும் இழந்தனர்.

1948ஆம் ஆண்டு தொடக்கம் இந்நாட்டில் தமிழ் மக்களுடைய வாழ்வு கீழடைந்துகொண்டே வருகிறது. 95 உறுப்பினரைக் கொண்டிருந்த அன்றைய நாடாளுமன்றத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் பிரதிநிதிகளாயிருந்த தமிழ் உறுப்பினர்கள் இன்று இங்கு இல்லை. அவர்களுடைய இடத்தை இன்று அவர்களிலும் இரட்டித்த எண்ணிக்கையான சிங்களஉறுப்பினர் எடுத்திருக்கின்றனர்”, என வேதனையுடன் 1972 அக்தோபர் 3ஆம் நாள் அன்றைய தேசிய அரசுப் பேரவையில் உரைத்தார் மூதறிஞர் செல்வநாயகம்.

வட்டுக்கோட்டையில் தீர்மானத்துக்கு வருவதற்குரிய காரணங்களாக, மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம், ஜீ ஜீ பொன்னம்பலம், சௌ தொண்டமான் (சில மனத்தடைகளுடன்) முன்வைத்த அனைத்தும் இன்றும் தீர்க்கப்படாத சிக்கல்களாகவே உள். அக்காரணங்களாவன:

வரலாற்றிற்கு முன்னான காலம் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளூடாக, வளவை நதியிலிருந்து சிலாபம் வரைக்கும் உள்ள தெற்கு மேற்குப் பகுதிகளிலும் நடுப்பகுதிகளிலும் சிங்கள மக்களும், வடக்கு, கிழக்கு, வடமேற்கு நிலப்பகுதிகளில் தமிழ் மக்களும் வாழ்ந்து இந்நாட்டின் ஆளுகையைச் சிங்கள நாட்டினமும், தமிழ் நாட்டினமும் தமக்குள் பகிர்ந்து வந்ததாலும்,

சிங்கள அரசுகளோடு தொடர்பற்ற வகையில் 1619ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் தமிழ் அரசைப் போர்க்களத்தில் தோற்கடித்துக் கைப்பற்றி, அவர்களிடமிருந்து ஒல்லாந்தரும் பின் ஆங்கிலேயரும் அதேவிதமாக வெற்றி கொண்டதாலும்

சிங்கள அரசுகளின் நிலப்பகுதிகளையும், தமிழ் அரசுகளின் நிலப்பகுதிகளையும் வேறு வேறாக ஆட்சி செய்து வந்த ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் 1833ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவின் விதப்புரைகட்கு அமையத் தம் ஆட்சிவசதி கருதி வலுக்கட்டாயமாக இந்நிலப்பகுதிகளை ஒன்றாக இணைத்ததாலும்,

ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான விடுதலைக் கிளர்ச்சியில் தமிழ்த் தலைவர்கள் முன்னோடிகளாக உழைத்து, இறுதியில் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாலும்,

மேற்கூறிய வரலாற்று உண்மைகளைப் முற்றாகப் புறக்கணித்து, எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் முழுத் தீவின் மீதுமான அரசியல் அதிகாரம் சிங்களநாட்டினத்தின் கைக்குமாறி அதனால் தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்ந்ததாலும்,

சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அனைத்தும், சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தைத் தூண்டி வளர்த்துத் தம் அரசியல் அதிகாரத்தைத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக:

  1. தமிழ் மக்களில் அரைப்பங்கினர் குடியுரிமை, வாக்குரிமைகளைப் பறித்து அதனால் நாடாளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கும்,
  2. திட்டமிட் டு அரசாங்க உதவியுடன், நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், இரகசியமாக ஊக்கிய சிங்களக் கள்ளக் குடியேற்றங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்தலாலும், பண்டைய தமிழ் அரசின் நிலப் பகுதிகளில் சிங்கள மக்களை நுழைத்துத் தமிழரைத் தம் சொந்தத் தாயகத்திலேயே சிறுபான்மையினராக்குவதற்கும்,
  3. இலங்கை முழுவதும் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக்கி தமிழர் மீதும்,தமிழ் மொழி மீதும் தாழ்வு முத்திரையைப் பொறிப்பதற்கும்,
  4. குடியரசு அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை அளித்து, இந்நாட்டின் இந்து, கிறித்தவ, இசுலாமிய மக்களை இரண்டாந்தரத்திற்குத் தாழ்த்துவதற்கும்,
  5. கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, நிலப்பங்கீடு, பொருளாதார வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் மக்களுக்குச் சம வாய்ப்பை மறுத்தும், பெருமளவிலான கைத் தொழில்கள், வளர்ச்சித் திட்டங்களில் தமிழ் நிலங்களைப் புறக்கணித்தும், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையே ஊசலாடும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,
  6. இலங்கையில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களை மறுக்கும் அதே நேரத்தில், தமிழ் நாட்டுக் கலாச்சாரத் தாயூற்றோடு உள்ள தொடர்பையும் திட்டமிட்டுத் துண்டித்துக் கலாசார இனக்கொலையை நோக்கி ஈழத்தமிழ் மக்களைத் தள்ளுவதற்கும்,
  7. 1956ஆம் ஆண்டு கொழும்பிலும் அம்பாறை முதலிய இடங்களிலும் நடந்தது போன்றும், 1958ஆம் ஆண்டு நாடு முழுவதும் மிகப் பெருமளவில் நடந்தது போன்றும், 1961ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விட்ட இராணுவக் காட்டாட்சி போன்றும், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதின்மர் உயிர்துறக்கக் காரணமான, காவல் படையின் காரணமற்ற தாக்குதல் போன்றும், 1976ஆம் ஆண்டில் புத்தளத்திலும், இலங்கையின் வேறு பல பாகங்களிலும், காவல் படையினரும், சிங்கள வகுப்பு வெறியரும், தமிழ் பேசும் முசுலீம்கள் மீது நடத்தியதாக்குதல் போன்றும், தமிழ்ப்பேசும் மக்கள் மீது வகுப்புவெறிப் பலாத்கார நடவடிக்கைகளையும், பயமுறுத்தும் நடவடிக்கைகளையும் அனுமதித்தும், கட்டவிழ்த்துவிட்டும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தமிழப் பேசும் மக்கள் எதிர்த்து நிற்கும் ஆளுமையை அழித்துப் பீதியை ஏற்படுத்துவதற்கும்,
  8. தமிழ் இளைஞர்களை எவ்வித நியாயமோ, நீதி விசாரணையோ இன்றித் தாக்கியும், சித்திரவதை செய்தும், பல்லாண்டுகாலக் கணக்கில் சிறைச்சாலைகளில் அடைத்து வதைத்தும்,
  9. எல்லாவற்றிற்கும் மேலாக நெருக்கடி நிலைச் சட்டத்தின் கீழ், சுதந்திரமாக விவாதிக்கும் சந்தர்ப்பமின்றி, குடிஉரிமைச் சட்டங்களினால் பிரதிநிதித்துவ விகிதாசாரமே மாற்றப்பட்டுச் சிங்களப் பெரும்பான்மைக்கும், விகிதாசாரத்துக்கும் கூடிய பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு யாக்க அவையாக அமைத்து முந்தைய அரசியல் அமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு பாதுகாப்புக்களையும் நீக்கி, அடிமைத் தளையை இறுகப் பூட்டிய குடியரசு அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிப்பதற்கும், தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாலும்

பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கங்களோடு ஒத்துழைத்தும், நாடாளுமன்றத்துக்கு உள்ளும், வெளியும் கிளர்ச்சி செய்தும், தமிழ் மக்கள் தன்மானத்தோடு வாழக்கூடிய ஆகக்குறைந்த அரசியல் உரிமைகளையாவது நிலைநாட்டுவதற்கு அடுத்தடுத்து வந்த சிங்களப் பிரதமர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பயனற்றுப் போனதாலும்,

ஒற்றையாட்சியில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங்களை நசுக்காதவாறு நாடாளுமன்றத்தில் சமபல பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு எடுத்த பெரும் முயற்சி தோல்வி கண்டதோடு, எந்தவொரு சமூகத்திற்கும் பாதகமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதைத் தடைசெய்யும் பொருட்டுச் சோல்பரி அரசியல் அமைப்பு ஏற்றுக் கொண்ட29ஆவது விதியின் அற்பப் பாதுகாப்பையும் குடியரசு அரசியல் அமைப்பின் கீழ் நீக்கியதாலும்,

ஐக்கிய இலங்கைக் கூட்டாட்சிக் குடியரசின் ஓர் அங்கமாக ஒரு தன்னாட்சித் தமிழ் அரசை நிறுவவதன் வழியாக தமிழ் மக்களின் தனித்துவத்தைக் காக்கும் அதே வேளையில் நாட்டின் ஒற்றுமையைப் பேணும்பொருட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சி அரசியலமைப்பு யாக்க அவைக்கு முன்வைத்த திட்டங்களை அவற்றின் தகுதி ஆராயப்படாமலே முழுதாக நிராகரித்தபடியாலும்,

வல்வெட்டித்துறையில் 1971 பெப்ருவரி 7ஆம் திகதி கூடிய அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளின் மாநாட்டு எடுத்த ஏகோபித்த ஒன்பது அம்ச முடிவுகளின்படி அரசியலமைப்பு யாக்க அவையின் அடிப்படைத் தீர்மானங்களுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசியல் கட்சிகளாலும் இன்று ஆளுங்கட் சியில் இருப்போர் உட்படத் தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராலும் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் அரசாங்கமும் அரசியலமைப்பு யாக்க அவையும் நிராகரித்தபடியாலும்,

1965ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்மொழிச் சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளையாவது அரசியல் அமைப்பில் இடம் பெறச் செய்யும் பொருட்டும் மொழி உரிமை, மத உரிமை, அடிப்படை உரிமைகள் பற்றியும் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட மூலத்திற்கான திருத்தங்கள் அனைத்தையும் தோற்கடித்த காரணத்தினால் மிகப் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்ததாலும்,

1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி அங்கீகாரம் பெற்ற குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்த தமிழர் கூட்டணி 1972 யூன் 25ஆம் திகதி பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கையைச் சமர்ப்பித்து, அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்தித் தமிழ்த் தேசிய இனத்தின் வேட்கைகளை நிறைவு செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாத அவகாசம் அளித்தும், அரசு அவ்வித நடவடிக்கை எடுக்கத் தவறினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்கத் தமிழர் கூட்டணியானது அரசுக்கு எதிராக அறவழி நேரடி நடவடிக்கையில் இறங்குமென அரசாங்கத்திற்கு அறிவித்ததாலும்,

நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பற்ற முறையில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்கு அரசியல் சட்டரீதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தமிழர் கூட்டணியின் இந்த இறுதி முயற்சியைப் பிரதம மந்திரியும் அரசாங்கமும் உதாசீனம் செய்து உதறித்தள்ளியதாலும்,

தமது அரசியல் அமைப்புக்குத் தமிழ் மக்களின் ஆதரவுண்டு என்ற அரசின் கூற்றை நிலைநாட்டுவதற்குத் தேசிய அரசுப் பேரவையில் தமது உறுப்புரிமையைத் துறந்து ஒர் இடைத் தேர்தலை ஏற்படுத்துவதற்குத் தமிழர் கூட்டணித் தலைவர் அளித்த சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்திவைத்த காங்கேயன்துறைத் தொகுதித் தமிழ் வாக்காளரின் மக்களாட்சி உரிமையைப் புறக்கணித்ததாலும்,

1975 பெப்ரவரி 6ஆம் திகதி நடை பெற்ற இடைத் தேர்தலில் காங்கேயன்துறை வாக்காளர் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் சிங்கள அரசாங்கம், தமிழ் மக்கள் மீது திணித்த குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்ததாலும்,

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை இயற்றவேண்டிய கட்டாயத்துக்குப் பிரித்தானியாவும் சிங்கள அரசியல் தலைவர்களும் (ஈழத் தமிழர் சொன்ன மாற்று வழிகளையும் புறந்தள்ளி) உந்தித் தள்ளினர் என்றே வரலாறு எழுதும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *