-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. போட்டிக்கான படமாக இதனைத் தெரிவுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

monkeys

குரங்குகளின் இயல்பை கவனித்தால், தாய்க்குரங்கு குட்டியைச் சுமந்து செல்லும் வழக்கமில்லை. மாறாகக் குட்டிதான் தானாக முயன்று தாய்க்குரங்கைக் கட்டிக்கொள்ளும். குரங்குகளின் இவ்வியல்பை ஒட்டி எழுந்ததே வைணவத்தின் (வடகலையார் பின்பற்றும்) ’மர்க்கட நியாயம்.’ இதன் பொருளாவது: இறைவனை அடைய (மானுட) ஆன்மாக்கள்தாம் முயலவேண்டும்; இறைவனே நம்மை வலிய ஆட்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

இதோ இந்தப் புகைப்படத்தில் தாய்க்குரங்கும் அதனை அணைத்துக்கொண்டிருக்கும் குட்டிக்குரங்கும் ஆவலோடு எதையோ உற்றுநோக்கிக்கொண்டிருப்பதுபோல் காண்கிறதே! (ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் யாரையேனும் விந்தையோடு நோக்கிக்கொண்டிருக்கின்றனவோ?!)

சரி…போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சற்று கவனித்துவருவோம்!

***

மரங்களை அழித்து இயற்கையை முடமாக்கும் மானுடனைக் குறிப்பாய்ச் சாடுகின்றது திருமிகு. ஹிஷாலியின் கவிதையில் குரல்கொடுக்கும் குரங்குக்குட்டி! 

அனுதினமும் நேசிக்கும்
என் தாயிக்கு
எப்படித் தெரியும்
அடுத்த தலைமுறைக்கு
இந்த மரக்கிளை
சொந்தமில்லை என்று!

***

இனி நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

மரத்தின் உச்சிக்கிளையில் அச்சத்தோடு அமர்ந்தபடி மருண்டுநோக்கும் மந்தியும், அதனை அணைத்தபடி அமர்ந்திருக்கும் கல்லா வன்பறழும் (குரங்குக்குட்டி), மனிதர்களின் தொடர்பே வேண்டாமென்றுதான் அவ்வாறு அமர்ந்திருக்கின்றன என்று இந்த மர்க்கடங்களின் செய்கைக்கு நியாயம் கற்பிக்கின்றது ஒரு கவிதை!

தாய்மை யென்பது தலைமைவரம்,
தலையது அதனைக் குனியவைக்கும்
வாய்மையைக் காட்டிட வந்ததுவோ
வழியி லுள்ள குப்பையுடன்
வாய்மெய் விறைத்த பிள்ளையுடல்,
வேண்டாம் மனிதன் தொடர்பென்றே
தாய்சேய் குரங்குகள் தனியேதான்
தாவி அமர்ந்ததோ மரத்தினிலே…! 

மரத்தினில் அமர்ந்திருக்கும் கவிகளுக்கென (குரங்குகளுக்கு) இந்தக் கவியை வடித்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். படக்கவிதைப் போட்டியில் வாராவாரம்  பேரார்வத்தோடு பங்களிப்பு செய்துவரும் அவருக்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 63-இன் முடிவுகள்!

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் என்னைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டிய திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், ‘வல்லமை’ நிர்வாகத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *