எதற்காய் நீதி நூல்கள்

0

 

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

 

திருக்குறளில்    சொல்கின்ற   கருத்தைப்  போன்று

            திகழ்நீதி   நூல்கள்இவ்   வுலகில்   உண்டோ

அரும்நூல்கள்   பதினென்கீழ்க்   கணக்கில்   கன்னம்

            அறைந்தாற்போல்   சொலும்நீதி   வேறெங்   குண்டோ

பெருமைமிகு   காப்பியங்கள்   உரைக்கும்   நீதி

            பெயர்சொல்லும்   வேற்றுமொழி   நூல்கள்   உண்டோ

செருக்களமோ    இல்லறமோ   சங்க   நூல்கள்

            செப்பியப்போல்   நீதிகள்தாம்   எங்கே   உண்டு !

 

வகைவகையாய்   நீதிகளைச்   சொல்லும்   நூல்கள்

            வரிசையாக     இங்கிருந்தும்   பயன்தான்   என்ன

நகையாகும்   காட்சியாக    நெருப்பைத்   தொட்டால்

            நன்குசுடும்   என்றறிந்தும்    தொடுகின்   றார்கள்

பகையாக்கும்    கடன்அன்பை   முறிக்கும்   என்று

            பார்த்தறிந்தும்    வாங்கிநட்பை   இழக்கின்   றார்கள்

புகைஉயிரைக்    குடிக்குமென்று   தெரிந்தி   ருந்தும்

            புதுசுருட்டைப்   பற்றவைத்தே   இழுக்கின்   றார்கள் !

 

வாழ்வுமதி    அழியுமென்னும்   கள்ளுண்    ணாமை

            வடித்தகுறள்    படித்தபடி    குடிக்கின்   றார்கள்

தாழ்வில்லை   பிறப்பொக்கும்    குறளைக்   கற்றும்

            தமக்குள்ளே    சாதிகூறி    வெட்டு   கின்றார்

ஊழ்வினைதாம்    ஏழ்மைக்கு   வித்தாம்   என்றே

            உழைப்புயர்த்தும்    என்றறிந்தும்   முடங்கு   கின்றார்

வீழ்கின்றார்   அறிவிருந்தும்    அறிவற்   றாராய்

            விட்டிலென    இறப்பதற்கா   நூல்க   ளிங்கே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *