இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (199)

0

 

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். புதுவருடம் பூத்து ஜந்து மாதங்கள் காற்றோடு கலந்து போய் ஆறாவது மாதத்தில் காலூன்றி நிற்கிறோம்.

இந்த ஜந்தாவது மாதம் இங்கிலாந்தை அதாவது ஜக்கிய இராச்சியத்தைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான ஒரு மாதமாகக் கணிக்கப்படுகிறது. அதன் காரணம் ஜக்கிய இராச்சியம் வரும் காலத்தைப் பாதிக்கப் போகும் ஒரு முக்கியமானமுடிவைத் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறது.

ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியம் தொடர்ந்து அங்கம் வகிப்பதா இல்லையா? என்று தீர்மானிக்கும் உரிமை ஜக்கிய இராச்சிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு இம்மாதம் 23ம் திகதி நடைபெறவிருப்பதே இம்மாதத்தின் முக்கியத்துக்குரிய காரணமாகிறது.

இந்தச் சந்தியில் நாம் இப்போது வந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன ? ஜரோப்பிய பொதுச்சந்தையில் அங்கத்துவராவது என்று தீர்மானிக்கும் முடிவை காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஹரால்ட் வில்சன் அவர்களின் தலைமையிலான லேபர் அரசாங்கம் இதேபோன்ற சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் 1075ம் ஆண்டு எடுத்தது. அதன் பின்னால் அப்பொதுச்சந்தை முறையிலான ஐரோப்பிய கூட்டுறவு விரிவாக்கலுக்குள்ளாகி இன்று ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளடங்கிய வடிவிலான ஐரோப்பிய ஒன்றியமாகி நிற்கிறது.

1975ம் ஆண்டிற்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் எவ்விதமான விரிவாக்கலுக்கும் பொதுமக்களின் முடிவு அறியப்படவில்லை. இந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இதன் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவிலான பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. பின்பு அத்தொகையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் முடிவின்படி அங்கத்துவ நாடுகளின் பல்வேறு தேவைகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது.

இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை முற்று முழுதாக எதிர்க்கும் கருத்துகளை உடையவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பல அரசியல் கட்சிகளிலும் பரவலாக இருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஐக்கிய இராச்சியம் செலுத்தும் பணத்தை நாமே எமது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேவையற்ற பல உள்நாட்டு விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுவது எமது நாட்டின் இறைமைக்குச் சவாலாக உள்ளது எனும் கூக்குரல் பல காலமாக எழுந்து கொண்டிருந்தது.

சமீப பொருளாதார வீழ்ச்சியும் அதைத்தொடர்ந்த வெளிநாட்டாளர்கள் ஐக்கிய இராச்சியத்துக்கு குடியேறும் விகிதாசாரம் அளவுக்கதிகமாகியதாலும் இக்கூக்குரல் பெரும்பான்மையான கோஷமாக உருவெடுத்தது. அதன் காரணமாக கடந்த பாராளுமன்றத்தில் பிரதமரான டேவிட் கமரன் தனது அரசியல் விஞ்ஞாபனத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் தொடர வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கக் கூடிய வகையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதாகக் கொள்கைப்பிரகடனம் செய்திருந்தார். அதன் விளைவே இன்றைய இந்த சர்வஜன வாக்கெடுப்பு.

இந்தச் சர்வஜன வாக்கெடுப்பை அறிவிப்பதற்கு முன்னால் பிரதமர் டேவிட் கமரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னால் சில கோரிக்கைகளை வைத்தார். ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து தொடர்ந்து அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்பதைத் தான் தனது மக்களுக்கு பரிந்துரைக்க வேண்டுமானால் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்காக அங்கத்துவம் வகிக்கும் பல நாடுகளின் தலைவர்களை நேரடியாகச் சென்று தனது நிலைப்பாட்டை விளக்கினார். அவரது விளக்கங்களை ஏற்றுக்கொண்ட ஜரோப்பிய ஒன்றியம் அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. அக்கோரிக்கைகளில் முக்கியமானவை,
“ சங்கன் ” எனப்படும் ஜரோப்பிய விசா முறையிலின்றும் ஜக்கிய இராச்சியத்துக்கு விதி விலக்கு.

ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் ஐக்கிய இராச்சியத்துக்கு குடியேறினால் ஆறு மாதத்துக்குள் பணி செய்ய முடியாவிட்டால் திரும்ப அவர்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும். அத்துடன் பணிபுரியத் தொடங்கி நான்கு வருடத்துக்கு வரி செலுத்திய பின்பே அரசாங்க உதவிப் பணம் பெறும் தகுதியை அடைவார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றிணைவை மேற்கொள்வதானால் அதற்கான விதிவிலக்கு ஜக்கிய இராச்சியத்துக்கு அளிக்கப்படும்.

மேற்கூறப்பட்டவை பிரதமரின் கோரிக்கைகளில் சில மட்டுமே. இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையால் பிரதமர் சர்வஜன வாக்கெடுப்பை அறிவித்துத்தானும் தனது அரசாங்கமும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.

பிரதமருக்கு வந்ததொரு சிக்கல் அவரது அமைச்சர்களில் மூவரும், பிரதி அமைச்சர்களில் சிலரும் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்தார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் லண்டன் மேயருமான பொரிஸ் ஜான்சன் ஜக்கிய இராச்சியம் விலக வேண்டும் எனும் அணிக்கு தலைமை தாங்கினார், இதே கருத்தை முன்வைத்து ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரான நைஜல் வ்ராஜ்ன மற்றொரு அணிக்குத் தலைமை தாங்கிப் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு இன்னும் இரண்டே வாரங்கள் தானுள்ளன எனும் நிலையில் இப்பிரச்சாரங்கள் வெகு வேகமாக சகல ஊடகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் எனும் அடிப்படையில் தமது கருத்துக்களை முன்னெடுப்பது சிரமம் எனக்கண்ட “விலகுதல்” அணியினர் “வெளிநாட்டினரின் குடியேற்றம் ” அதாவது immigration என்பதனை முதன்மைப்படுத்தி தமது பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். இதற்குச் சார்பாக இவர்கள் முன்வைக்கும் சிலவாதங்கள் வெளிநாட்டுக்காரருக்கெதிரான இனத்துவேஷத்தை தூண்டுகிறதோ எனும் ஐயம் பலதரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.

இல்லை நாம் வெளிநாட்டினருக்கெதிரானவர்கள் அல்ல நாட்டின் மக்கள் மனங்களில் எழும் அதிருப்தியையே நாம் முன்வைக்கிறோம். உள்நாட்டினரின் வாழ்க்கைத் தராதரம் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் என்கிறார்கள்.

ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதன் மூலம் மிகப் பரந்த அளவிலான வியாபாரத் தளத்தினுள் எமது வியாபாரத்தை முன்னெடுக்கும் வல்லமை எமக்கிருக்கிறது. எமது நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு நாம் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதே சாலச்சிறந்தது என்கிறார்கள் “இணைந்திருப்போம்” அணியினர். ஒவ்வொரு அணியினராலும் முன்வைக்கப்படும் தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை என மற்றைய அணியினரால் குற்றம் சாட்டப்படுகிறது.

பல பொருளாதார நிபுணர்கள் , சர்வதேச நிதியமைப்புகள், பல வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பவில்லை. இது அவர்களது சுயநலத்தின் அடிப்படையில் அமைந்தது என்கின்றனர் “விலகுதல்” அணியினர்.

இவ்வாதப் பிரதிவாதங்களில் பல முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள் மிகவும் முனைப்புடன் குதித்துள்ளனர். பல மக்கள் இன்னும் குழம்பிய நிலையில் இருப்பது போலவே தென்படுகிறது.

எது எப்படி இருப்பினும் இது எம் வாழ்நாளில் நாம் எடுக்கும் ஒரு பெரிய தீர்மானம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கிடையாது, ஆயினும் இவ்வாக்கெடுப்பு முடிந்ததும் பிரதமரின் நிலை, அரசாங்கத்தின் நிலை எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறியே !

ஏன் என்கிறீர்களா ?

அமைச்சரையே பிரிந்து வாதம் செய்கிறது. அவ்வாதங்களில் சில தனிப்பட்ட தாக்குதல்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விடையை சர்வஜன வாக்கெடுப்பின் முடிவினைப் போல ஜீன் 23ம் திகதிக்குப் பின்னரே நாம் அறிய முடியும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *