”கண்டேன் அனுமனை’’….
கிரேசி மோகன்
தத்துவமாய் சைவன், தரணியில் ராமனின்
வித்தாய் விளைந்ததால் வைணவன், -மத்வ
மதமூலன் வாயு மகனனுமான் ராசி
பதமூலம் ஆசி பலன்….(31)
இராமவென்று கூறல் இராமவுரு காணல்
இராமகதை கேட்டல், இருப்பு -இராமன்கால்
என்றிருக்க மாருதிபோல், என்றும் குணசீலக்
குன்றுச்சியில் வைக்கும் குரங்கு….(32)
சீதை துயர்தீர்க்க வாத மகனாக
பூதலம் வந்தவுமை பாகனை -ஆதவன்
கூடவே சென்றன்று பாடம் பயின்றோனை
நாடவே நாடுமுனை நாடு….(33)
சேராது துஷ்ட சகவாசம், சேர்ந்தாலும்
மாறாது மனம்வாயு மைந்தனின் -பேரோத
தீராத வல்வினைகள் தூராதி தூரத்தில்
ஓரோரம் ஓடும் ஒளிந்து….(34)
வாலால் சகோதரன் வாயுமகன் பீமனின்
தோளா ணவகர்வம் தீர்த்தோனே -காளான்
எனவகந்தை என்னுள் எழுந்திடும் போது
மனமுவந்து ஆளென் மனது….(35)
பாரத யுத்தத்தில் பார்த்தனின் சாரதி
தேரதன் உச்சி திகழ்ந்தோனே -நூறதை
பாண்டவர் வெல்ல பலமாக வீசினாய்
காண்டீப வேள்வியில் காற்று….(36)….கிரேசி மோகன்….