படக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள்
காயத்ரி பூபதி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். இங்கு படக்கவிதைப் போட்டிக்கான படத்தில் இருப்பவர் குரங்காட்டி. கோல் கொண்டு குரங்கை ஆட்டுவிக்கும் இவருக்கு, எழுதுகோலால் கவிஞர்கள் ஆக்கிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,
வயிற்றுப் பசிக்காக குரங்கை வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி தன் பசியை மறந்து மக்களின் கவலையை மறக்கச் செய்வதாகப் பாடியுள்ளார நாமக்கல் முருகேசன். கவிஞருக்கு பாராட்டுகள்.
குரங்காய் குனிந்தே வாழாமல் வாய்ப்புக் கிடைத்ததும் மனிதன் தோள்மீதமர்ந்து தன் வித்தையைக் காட்டும் குரங்கின் திறம் கூட மனிதனுக்கு இல்லையே என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.
குரங்கின் உழைப்பே
குரங்காட்டியின் பிழைப்பு
குரங்கை விட்டால்
அவனுக்குபிழைப்பில்லை
அவனை விட்டால்
குரங்கிற்கிற்கும் கதியில்லை
அடிக்குப்பயந்தும்
ஆகாரத்திற்காகவும்
அவன்
ஆணைப்படி ஆடும்
அந்தரத்திலும் தொங்கும்
வித்தைகாட்டியின் விரலசைவுக்கு
இன்றைய பெற்றோர்களுமே
வித்தை காட்டிகள்தான்
பிள்ளைகளை
அதைப்படி இதைப்படி
டான்ஸ் ஆடு பாட்டுப்பாடுன்னு
கோலில்லாமல்
ஆட்டி வைக்கின்றனர்
குரங்கு எப்படி குரங்காட்டியின்
சொல்லுக்கு உடன் படுகிறதோ
அதேபோல் பிள்ளைகளும்
பெற்றோரின் செயலாக
வெளிப்படுமேயன்றி
தானாக எதுவும் செய்வதில்லை
என்பதே தெளிவு
சூழ் நிலையும் சந்தர்ப்பங்களும்
மக்களையும் குரங்காட்டியாகத்தான்
காட்டுகின்றன இன்றைய
அரசியலுக்கும் இது பொருந்தும்
எல்லாமே வயத்து பாட்டுக்குத்தான்
எல்லாருமே குரங்காட்டித்தான் – சரஸ்வதி இராசேந்திரன்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதால் என்னவோ குரங்கின் செயலுடன் மனிதன் செயலை ஒப்பிட்டுக் கூறும் மரபு உள்ளது. மரம் விட்டு மரம் தாவும் குரங்கின் செயல், எதிலிலும் நிலையில்லாத மனமுடைய மனிதனுக்கு உவமையாக வந்துள்ளது. மனம் ஒரு குரங்கு என்று கூறும் வழக்கமும் உண்டு. இங்கு குச்சியை எடுத்து குரங்கை ஆட்டுவிக்கும் குரங்காட்டியை, பிள்ளையைத் தன் விருப்பத்திற்கேற்ப கோலில்லாமல் ஆட்டிவைக்கும் பெற்றோர்களுக்கு உவமையாக சுட்டிக் காட்டியுள்ளார் கவிஞர். `கோலில்லாமல்’ என்று கூறுவதன் மூலம் பெற்றோர் குறிக்கோளில்லாமல் செயல்படுவதையும் எளிய வரிகளில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ள சரஸ்வதி இராசேந்திரனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டுகள்.
இந்த வார புகைப்படபோட்டியில் என் கவிதையை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தமுனைவர் காயத்ரி பூபதிக்கும் வல்லமை குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்–சரஸ்வதிராசேந்திரன்