பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

13444181_1029839340403598_905366858_n

95494202@N04_rபுதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (68)

  1. பெற்றோரே…

    வெயிலும் மழையும் இலையெனிலும்
    வேடிக்கைக் காகக் குடைபிடிப்பான்,
    பயிலும் பள்ளி விடுமுறையில்
    பறக்கச் சிறகுகள் வந்துவிடும்,
    துயிலும் பொழுதைத் தவிரதினம்
    துடிப்பா யிருக்கும் பருவமிது,
    இயல்பிதை வளர்த்தே நல்வழியில்
    இவனைச் செதுக்குவீர் பெற்றோரே…!

    -செண்பக ஜெகதீசன்…

  2. வெயிலில்
    வேகாமல்
    மழையில்
    நனையாமல்
    வண்ணக்குடையுடன்
    எண்ணம்போல்
    சின்னப்பையன் நடக்க
    பலமான காற்றுவீச
    பலமிழக்கிறது கைகள்
    காற்றின் திசையில்
    குடை இழுபட
    இருகரங்களால்
    இறுக்கிப்பிடிக்க
    கால்களைஅகற்றி நின்று
    போராடும் சிறுவனே !
    வாழ்க்கையும் வண்ணக்குடைதான்
    உனக்கு வருகிற தடைகளைதகர்த்து
    முன்னேறு எதிரில் வரும் எதிரிகளை
    எதிர்த்துப்போராடு
    போராட்டத்தை எப்போதும்
    கைவிடாதே நல்லதே ந்டக்கும்
    வாழ்க்கை வண்ணக்குடைபோல் அழகானது

    சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *