அபிராமியே.. எழில்ராணியே !!!
க. பாலசுப்பிரமணியன்
ஒரு நாளும் இரு விழியும் போதுமோ உனைக்காண,
ஒரு குரலும் ஒரு மொழியும் போதுமோ உனைப்பாட,
ஓருயிரும் ஒருலகும் போதுமோ உன்னருள்நாட,
உலகாளும் அபிராமியே ! உளமாளும் எழில்ராணியே !
நிறைஞானி நிலைமறந்து நிறைநிலவாய் நினைந்திடவே
காரிருளில் ஒளிர்நிலவாய் வலம்வந்த ஓங்காரியே !
பிறைதன்னை தலைசூடி பித்தான பரமேசன்
பிணிதீர்க்க சரிபாதி உடல்கொண்ட சாம்பவியே !
குலம்காத்து நலம்காத்து மனம்காத்து உயிர்காத்து
விடையீசன் துணைகாத்து வினைதீர்க்கும் விசாலாட்சியே !
மலையரசன் மகளாகி கலையரசன் துணையாகி
அருளரசின் தாயான மாமேரு மலைவாசியே !
விடியாத பிறவிக்கும் விதிமுடிக்கும் கூற்றுக்கும்
இடையான வாழ்விற்கு வழிகாட்டும் இசைஞானியே!
சிலையாக நீயிருந்தும் கலைக்கரும்பாக இனிக்கின்றாய் !
விளையாட என்னைவைத்து விதியென்று சொல்கின்றாய்!
வித்தாக வினையாக சொத்தாக சுகமாக
விளையாத கனியாக வாசலில் நிற்கின்றாய்!
அறியாத அறிவுக்கும் புரியாத புதிருக்கும்
நினையாத நினைவுக்கும் அப்பாலே அழைக்கின்றாய்!
பூவாகக் கனியாகப் பொழிலாக எழிலாக
பூங்காற்றின் இதமாக அறிகின்றேன் பூங்குயிலே !
பொலிவாக நடைபயின்று பூபாரம் இறக்கிடவே
புதுநிலவாக ஒளிதந்து புலன்காப்பாய் அபிராமியே!