கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண்
தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் -பின்னமுறான்
முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே
எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….
கண்ணன் அனுபூதி….
——————————————-

0fc4dd32-4293-4e85-8907-26159ffa6e7a

வாய்ப்பூதான் வாடிடுமோ வாழ்விலாழ் வாராகும்
வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா -நோய்ப்பாயில்
கூற்றன்கைப் பாவையாய் தோற்றுக் கிடப்பேனோ
ஏற்றம் தரவா எனக்கு….(31)

எனக்கே எனெக்கென்(று) எவருளார் என்று
தனக்கே தனக்குள் தவித்தால் -உனக்குள்
உவமை இலாத ஒருத்தனைக் காண்பாய்
அவனே அரியென்(று) அறிந்து….(32)

அறிந்தேன் அறியாமை அந்தஅரி மாயை
அறிந்தேன் அவனேதான் ஆன்மன் -அறிந்தேன்
கருந்தேகக் கண்ணனவன் கண்,காணல், காட்சி
ஒருங்கிணைந்து தோன்றுமரி ஓம்….(33)

ஓமனக் குட்டனே கோமண கோவிந்தா
கோமணம் கட்டிய கோபாலா -நாமணக்கும்
ஆரா அமுதனே அய்யா குருவாயூர்
சீராளா சீனிவா ஸா….(34)

வாஸனாதி கர்மங்கள் பூசிமகிழ் பூர்வநெஞ்சே
தேசம்நூற் றெட்டுடைய தேவனை -யோசனையில்
வைத்து வழிபட்டுக் கைத்தலத்தால் கும்பிடப்
பொய்த்திடுமைம் பூதப் புதிர்….(35)

புதிரவன் போக்கு புலனவன் தாக்கு
மதிரதம் மாயையில் மூழ்கக் -கதிரவன்
போல்தோன்றிக் காரிருள் தோல்சீவிக் காத்திடும்
மால்வண்ணம் யாமறியோ மே….(36)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *