இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (201)

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

2016 ஜீன் மாதம் 23ம் திகதி. இங்கிலாந்து மக்களின் மனதில் பொறித்து வைக்கப்பட வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

அப்படி என்ன முக்கியத்துவம் இங்கிலாந்தில் ? எனும் கேள்வி எழுகிறதா ?

இங்கிலாந்தின் எதிர்கால அரசியல், பொருளாதார முன்னேற்றம் , இங்கிலாந்து இனிவரும் காலத்தில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான நாள்.

இதை நிர்ணயிக்கும் உரிமையை மக்களின் கைகளில் இங்கிலாந்தின் அரசாங்கம் கொடுத்திருக்கும் நாள். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! என்பதற்கமைய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான ஒவ்வொரு குடிமகனுக்கும் எமது நாடு இந்தப்பாதையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை அரசாங்கத்துக்கு ஆணையிடும் தீர்மானத்தை எடுக்கும் ஒரு அதிமுக்கியமான நாள்.

இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக தொடர்ந்தும் வீற்றிருப்பதா ? இல்லையா ? என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்று மக்களின் கைகளில் அதிகாரத்தை அரசாங்கம் கையளித்து அதற்கான வழிமுறையான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் அடிப்படையில் இன்றுதான் மக்கள் தமது முடிவை தெரியப்படுத்தும் முக்கியமான நாள்.

இன்றைய வாக்கெடுப்பு இன்று முன்னிரவு நான் இம்மடலை எழுதிக்கொண்டிருக்கும் 23ம் திகதி 10 மணிவரை நடைபெறும். அதன்பின்னால் வாக்கெடுப்பு முடிவுக்கு வந்து வாக்கெண்ணிக்கை நடைபெறும். நாளை காலை தாவது 24ம் திகதி காலை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்விக்கு இங்கிலாந்து மக்கள் அளித்த பதில் தெரியப்படுத்தப்படும்.

இன்று ஜரோப்பிய ஒன்றியத்தில் 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் இங்கிலாந்து அதிமுக்கியமான ஒரு நாடாகக் கணிக்கப்படுகிறது. அங்கு எடுக்கப்படும் முடிவுகளில் இங்கிலாந்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வைரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான அம்சமாக அனைத்து அங்கத்துவ நாடுகளும் எதுவித தடைகளும் இன்றி தமது பொருட்களை வியாபாரம் செய்யக்கூடிய தனிச் சந்தை single market கருதப்படுகிறது.

இங்கிலாந்து மக்களின் அபிலாஷை ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று முடிவானால் இத்தனிப் பொருளாதாரச் சந்தையின் மூலம் இங்கிலாந்து வியாபார நிறுவனங்களுக்கு கிடைக்கும் 500 மில்லியன் பாவனையாளர்களின் தளம் கிடைக்காம்மல் போகும். இது இங்கிலாந்தின் பொருளாதார நிலையை மிகவும் அதிக அளவில் பாதிக்கும் இதுவே இன்றைய பல இங்கிலாந்து, சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள், பல நேசநாடுகளின் தலைவர்களின் அச்சமாக இருக்கிறது.

அதேசமயம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் எனும் கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் இவ்வைரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்தை பின் தள்ளுகிறது எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள். இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்துக்காக கட்டும் பணத்தை மீதப்படுத்துவதனால் அதனை இங்கிலாந்து மக்களின் தேவைகளுக்காக செலவழிக்கலாம் என்பதும் அவர்கள் வாதமாகிறது..

இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரன், மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள எழுபத்தைந்து வீதமான அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட பெரும்பான்மையான எதிர்க்கட்சி அங்கத்தினர்கள். லண்டன் மேயர் சாடிக் கான் , மற்று,ம் பல முன்னாள் அமைச்சர்கள், பிரதமர்கள் அனைவரும் இங்கிலாந்தின் ஜரோப்பிய அங்கத்துவம் தொடர வேண்டும் என்றே கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள்.

அதேபோல சில முன்னைநாள் நிதியமைச்சர்கள் , முன்னாள் இலண்டன் மேயர் , சில எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் இங்கிலாந்து ஜரோப்பிய அங்கத்தினர் அந்தஸ்திலிருந்து விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இப்பிரச்சாரங்களில் வெளிநாட்வரின் இங்கிலாந்து புகலிடம் கொள்கையே முதன்மை பெற்று நின்றது. இவ்வாதம் சில சமயங்களில் பிரிவினை எனும் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்கிறதோ எனும் சந்தேகம் பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது..

இன்றைய இங்கிலாந்து பொருளாதாரப் பட்டியலில் உலகில் ஜந்தாவது இடத்தைப் பெற்று நிற்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இங்கிலாந்தின் செல்வாக்கின் ஆதிக்கம் இடம்பெறுகிறது. இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

கடந்த 41 வருடங்களாக ஜரோப்பிய ஒன்றியச் சூழலில், ஜரோப்பிய ஒன்றியத்தின் தொடர் மாறுதல்களில் தீவிர பங்களிப்புச் செய்து வந்த இங்கிலாந்து இவ்வொன்றியத்திலிருந்து வெளியேறுவது ஒரு எதிர்பார்க்காத எதிர்காலத்தினுள் காலடி எடுத்து வைப்பதைப் போன்றதே. இப்போதுதான் ஒரு உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீன்டு வந்து கொண்டிருக்கிறது இங்கிலாந்தின் பொருளாதாரம். இப்பொருளாதார வீழ்ச்சி கொடுத்த வரவு செலவு கணக்கில் விழுந்த துண்டை சரிப்படுத்துவதற்காக பொதுத்துறையில் செய்யும் செலவுகளைக் கட்டுப்படுத்தியதால் மக்களின் பல சேவைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த ஒரு நிலையில் , இத்தகைய ஒரு திருப்பத்தில் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சியக் கொடுப்பது அவசியமா ? இன்றைய இங்கிலாந்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியே வருவதுதான் தீர்வாகுமா ? வெளியே வந்தும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுமாயின் அதன் பின்னான நிலை என்ன ?

ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்பு அத்தீர்மானம் பிழையானது என்று அறியப்படுமானால் மீண்டும் அவ்வொன்றியத்தின் அங்கத்துவத்தைப் பெறுவது சுலபமான விடயமா?

பல கேள்விகள் பல அரசியல் அவதானிகளால் எழுப்பப்படுகின்றன. ஆளும் அரசியல் கட்சிக்குள் பாரிய பிளவு ஒன்று இச்சர்வஜன வாக்கெடுப்பினால் எழுந்துள்ளதை மறுக்க முடியாது. இங்கிலாந்து மக்களின் முடிவு இங்கிலாந்து அரசுக்கும், பிரதமருக்கும் சார்பாக வருகிறதோ இல்லையோ நிச்சயமாக இங்கிலாந்து அரசியல் ஆழியில் இது சுனாமியைக் கிளப்பி விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

என்ன இவ்வளவு சொல்கிறாயே உனது வாக்கு எந்தப் பக்கம் என்கிறீர்களா? பொறுத்திருங்கள் அடுத்தவாரம் சொல்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *