எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

dd415941-26f4-46ab-8148-ba248c25be79

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க

அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க

சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க

தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய்

தோழிலே சுமந்து சென்றாய்
சுகமுடன் பணியைச் செய்தாய்
ஆதாலால் அந்த மல்லி
அனைவரின் வசமாய் ஆச்சு

சிறு கதை மன்னனாக
சிறந்து நீ விளங்கினாலும்
பெரு மனங் கொண்டதாலே
பிரபலம் ஆகி விட்டாய்

சரிவெலாம் வந்த போதும்
சலிப்பிலா உள்ளங் கொண்டு
நிலைபெற உறுதி பூண்ட
நீயென்றும் நிலைத்து வாழ்க

கண்ணீரைக் கொண்டு நீயும்
கதைபல எழுதி நின்றாய்
தண்ணீரைக் காட்டித் தானே
தகைவுடை பரிசைப் பெற்றாய்

உண்மையாய் உழைத்து நின்றாய்
ஊருக்கு வேரும் ஆனாய்
உன்னலம் துறந்து நின்றாய்
உயர்ந்து நீ இருக்கின்றாயே

விண்ணிலே நிலவாய் நின்று
வெளிச்சத்தை காட்டி நாளும்
மண்ணிலே எழுத்தை ஆண்டு
மதிப்பினைப் பெற்று விட்டாய்

மல்லிகையை வளர்த் தெடுத்த
வல்லவனே நீ வாழ்க
நல்லதமிழ் எழுதி நிற்கும்
நாயகனே நீ வாழ்க
எல்லையிலாப் புகழ் பெற்று
என்றுமே நீ வாழ்க
எழுத்துலகில் ஜீவா நீ
என்றுமே வாழ்க வாழ்க

நடந்தலைந்து நீ தந்த
நல்ல தமிழ் ஏடெமக்கு
நல்விருந்தாய் இருந் தமையை
நாம் மறக்க மாட்டோமே
தெரிந் தெடுத்து வைத்தபெயர்
சிறந் தோங்கி நிற்கிறது
வரம் பெற்ற ஏடாக
மல்லிகையும் மணக்கிறது

மல்லிகைப் பந்தல் போட்டு
வளர்த்தனை பலரை நாளும்
கள்ள மில் செயலினாலே
கற்றவர் புகழ நின்றாய்
நல்லதோர் ஏடாய் நாளும்
மல்லிகை வளரச் செய்தாய்
நாட்டிலே உள்ளார் நெஞ்சில்
நாயகன் ஆகி விட்டாய்

மல்லிகை மணக்கிறது
மனமெல்லாம் மகிழ்கிறது
செல்லுகின்ற இடமெல்லாம்
ஜீவாவை பார்க்கின்றோம்
நல்லதொரு ஏடுதந்த
நற்றமிழன் ஜீவாவே
எல்லையிலா இன்பமுடன்
என்றுமே நீவாழ்க

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *