மீராவின் காதல்…..
க. பாலசுப்பிரமணியன்
கற்சிலையே நீயென்றார் கண்ணாயென் காதலனே !
கையிரண்டில் உனையணைத்துக் காலமெல்லாம் வாழ்வேனே !
கனவெல்லாம் நீயிருக்க கண்ணிரண்டும் நீர்வடிக்க
காசினியில் உன்னையன்றி வேறொன்றும் அறியேனே !
கருவண்ணம் நீயென்று யார் சொன்னது ?
கருவிழியால் பார்த்ததாலே அது வந்தது !
கருநாகம் வால்பிடித்துக் கண்ணா! நீயாட
கண்களெல்லாம் கைகோர்த்து முன் நின்றது !
முன்னிரவும் பின்னிரவும் மனமெல்லாம் உனைத்தேட
கண்ணருந்தும் விருந்தாக கருவிழியில் நின்றாய் !
விண்மறந்து மண்மறந்து உனை நினைத்ததும்
வண்ணமெல்லாம் உனதென்றே கார்மேகம் சொன்னது !
கருஞ்சடையில் பீலிசூடி குழலூதி நின்றாய் !
கண்ணா ! காலமெல்லாம் உன்பின்னே நின்றது !
கோவினங்கள் கூட்டத்திலே நீ மறைந்தாய்
கோபியர்கள் ஆட்டத்திலே என்னை மறந்தாய் !
கோட்டையினைத் துறந்து கூடிடவே வந்தேன்
பாட்டையிலே உன் குழலில் என்னை மறந்தேன் !
சாட்டையடி வாழ்க்கையிலே சமரசங்கள் இல்லை
சாரதியே ! காதலிலே கலியுகத்தைத் துறந்தேன் !
கொடியவிடத்தைக் குடித்த பின்னும் மரணமில்லை !
கருநாகம் தீண்டிடவும் கடுகளவும் பயமில்லை !
கோகுலனே! துணையிருப்பாய்!கோமகனே! காத்திருப்பாய் !
கோதையுடன் ஆடுகையில் கொஞ்சமெனை நீநினைப்பாய் !
தஞ்சமென்று வந்தோரை வஞ்சமின்றி ஏற்ப்பவனே !
மஞ்சமென்று வந்தேன் நெஞ்சமுனது நாடி !
கொஞ்சிவிட ஆசையில்லை கோதையவள் மாற்றி
எஞ்சிவிட்ட வாழ்வினையே வாழ்ந்திடுவேன் தாள்போற்றி !