நினைக்கத் தெரிந்த மனமே
ரா.பார்த்தசாரதி
ஆயிரம் எண்ணங்கள் உதயம் நம் மனதினிலே
எண்ணங்களும், ஆசைகளும், தோன்றும் நம் நெஞ்சத்தினிலே,
அலை பாயும், எண்ணங்களை வடிகாலாய் வடித்து
பழைய திண்ணை பேச்சையும் சற்றே மறந்தோமே !
உழைத்து களைத்த வேளையில் உறவுகள் சூழ
உணர்வுகளை பகிர்ந்து மனம் தெளிந்தபோது
தொலை காட்சிக்கு முன், கணிணிக்கு பின்
நேரத்தை பிறர்க்கென நல்ல நேரத்தை வீணடித்தோமே!
நல்ல நேரத்தை வீணடித்து, குறிக்கோள் இல்லா நிலைமை,
நேரம் நம்மை விழுங்கச் செய்வதே இக்கால கொடுமை,
கைபேசியும், வலைதளமும், நம்மை கடத்தும்மே
எதையும், நினைத்துப் பார்க்கும் தகைமை இழந்தோமே !
இன்றைய நாகரிகத்தின் பொருள் ஆடம்பரம்
இது எழுதா சட்டமாகி நம் உடைமையாகியதே ,
நேர்மையையும், உழைப்பின் மேன்மையையும் மதிப்பதில்லை,
கசங்காமல் காசு பணம் சேர்க்கத் தவறுவதில்லை !
இருப்பதைக் கொண்டு ஆனந்தம் காண மறுக்கின்றோமே
பேராசையால் நற்குணத்தை தீயிலிட்டு பொசுக்கின்றோமே
நேசத்தையும், பாசத்தையும் வெளிப்படுத்த நேரமில்லையே
சுகம் என்பது நமக்கு வரமாய் என்றும் கிடைப்பதிலையே !
மனித நேயத்தை இழந்தே வாழ்க்கையினை தொலைகின்றோம்,
பகிர்தல், பாசம்,அரவணைப்பு, பண்பின் அடித்தளம் என்கிறோம்
உள்ளங்களால் உயர்ந்த சமூகமே வரலாற்றில் ஏற்படட்டுமே
நமது வாழ்க்கை முழுதும் இன்பமும்,உறவும் மிளிரட்டுமே !