கலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்

0

முனைவர் மு.பழனியப்பன்,

தமிழ்த்துறைத் தலைவர்,

அரசு கலை , அறிவியல் கல்லூரி,

திருவாடானை.

     வைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆவார். காரைக்குடிக்குக் கம்பன் அடிப்பொடி ச. கணேசன் அவர்களால் வரவழைக்கப் பெற்றவர். காரைக்குடி கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்ட தமிழ்ப்பேராசிரியர் பணியிடத்திற்கு உரியவராக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அமைந்தார். சிலகாலம் இங்குப் பணிபுரிந்த பேராசிரியர் இதன்பின்னர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்த்துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார். இதுமுதல் வைணவ இலக்கியத்தின்பால் பேராசிரியரின் நோக்கு ஆழம் பெற்றது. இவர் வைணவம் தவிர பல்வேறு துறை சார்ந்த நூல்களைப் படைத்தளித்தவர். அடிப்படையில் அறிவியல் மாணாக்கர் என்ற போதும் தமிழின்மீது விருப்பம் ஏற்பட்டுக் கற்றவர். இவர் அறிவியல் தமிழின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறார். இவரின் நூல்களில் காணப்படும் எளிமையான தமிழ் நடை கற்போரைத் தெளிவடையச் செய்கிறது. மேலும் கற்கத் தூண்டுகிறது. இவரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இப்பொழுதில் இவரின் ~கலியன் குரல்| என்ற நூலில் அடங்கியுள்ள வைணவ முப்பொருளில் ஒன்றான இதம் பற்றிய கருத்துகளைத் தொகுத்தும் பகுத்தும் உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

கலியன் குரல்

                அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வைணவ இலக்கியம் தத்துவம் பற்றிப் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் நிகழ்த்திய அறக்கட்டளைப் பொழிவு ~கலியன் குரல|; என்னும் தலைப்பில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நூல்வடிவம் பெற்றது. திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களில் காணப்படும் இலக்கிய இன்பம், தத்துவ ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அமைப்பில் இந்தப் பொழிவுகள் அமைந்தன. திருமங்கை ஆழ்வாரை மையப்படுத்தி இப்பொழிவை அமைத்ததற்குப் பல காரணங்களை மொழிகிறார் பேராசிரியர். குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பலைக்கலைக்கழகம் திருமங்கை ஆழ்வார் ஆண்ட. பிறந்த பகுதிகளுக்கு அருகில் இருப்பது முக்கிய காரணம் என்பது அவர் தரும் முதற்காரணம் ஆகும்.; தேர்ந்து ஒரு செயலைச் செய்யும் வல்;லமையைத் தனக்குள் கொண்டவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் என்பதற்கு இச்சொற்பொழிவு சான்றாகிறது.

வைணவ முப்பொருள்

                திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களுள் காணலாகும் வைணவ தத்துவக் கருத்துகளை எளிமைபட தம் பொழிவில் எடுத்துரைத்துள்ளார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். வைணவ தத்துவங்களில் மூன்று அடிப்படைக் கருத்துகள் அமைந்துள்ளன. அவை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்பனவாகும். இவை துவைதம்,அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவங்களுக்கு முற்பட்ட பழமை உடையவை.

                இவற்றுள் தத்துவம் என்பது மூன்றாக அமைவது. சித்து. அசித்து, ஈசுவரன் ஆகியன கொண்டது. இதனை தத்துவத்திரயம் என்பர். இதம் என்பது வீடுபேற்றிற்காக கடைபிடிக்கப்படும் வழியாகும். இது இருவகைப்படும். பக்தி, பிரபக்தி என்பன அவையிரண்டும் ஆகும். புருஷார்த்தம் என்பது பரமபதநாதனுக்கு அடிமைத் தொழில் புரிவது, அதன் காரணமாக எம்பெருமான் மகிழ்தல் ஆகியன கொண்டதாகும்.

                வைணவ தத்துவங்களில் மூன்றில் நடுநாயகமாக விளங்குவது ~இதம் | என்பதாகும்.  ~~இதம்|| என்பது உயிர்கள் கடைத்தேற வழிகாட்டுவது. இறைவனைப் பக்தி வழியில் அணுகுவது, அல்லது சரணாகதி அடைந்து பெறுவது என்பதாகும். இப்பொருள் பற்றி கலியன் குரலில் காட்டப்பெற்றுள்ள செய்திகளை வகுத்துரைப்பது என்பது இக்கட்டுரையின் அமைப்பாகும்.

பக்தி நெறி

                ~இதம்| என்பதின் இருநிலைகளில் ஒன்றாக அமைவது பக்தி நெறியாகும். இப்பக்தி நெறியின் இயல்பினைப் பின்வருமாறு பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் காட்டுகிறார். ~~பக்தி நெறி- இதில் பல படிகள் உண்டு. இதனை வீடுபேறு அடையும் வரையில் அநுட்டித்துக்கொண்டே இருத்தல் வேண்டும். பலன்பெற நெடுங்காலம் கழிய வேண்டும். இதனை அங்கங்களுடன் அநுட்டிக்கும் முறை மிகக் கடினமானது. இக்கால்தில் பக்தி நெறியை அநுட்டிப்பதற்கு அதிகாரிகள் இலர் என்று கூடக் கூறலாம். நாதமுனிகள் போன்ற யோகமுறை தெரிந்தவர்கள் தாம் இதற்கு அதிகாரிகளாவர்| (கலியன் குரல், ப.174) என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர். இக்கருத்தின் வாயிலாக பக்திநெறி வழி எம்பெருமானை அணுகுவது என்பது காலஅளவில் நீண்டது என்பதை உணரமுடிகின்றது.

பிரபக்தி நெறி

                பிரபக்தி நெறி என்பது உயிர்கள் தாமாக முன்வந்து தம்மைப் பரம்பொருளிடம் அடைக்கலப்படுத்திக்கொள்ளும் நிலை ஆகும். பிரபக்திநெறி பற்றி பின்வருமாறு குறிக்கிறார் பேராசிரியர். ~பிரபக்தி நெறி- இதுவே சரணாகதி நெறியாகும். எல்லோரும் எளிதாக அநுட்டிக்கக் கூடியது. சுக்கிரீவன், வீடணன், காகம் (காகாசுரன்) போன்றோர் இந்நெறியைக் கடைபிடித்தே உயந்தவர்கள். இந்த பிரபக்தி நெறியை உபதேசித்தவர் நம்மாழ்வார். இவரைப் ~பிரபந்த ஜன கூடஸ்தர்| என்று வழங்குவதும் உண்டு. பிரபக்தி நெறியைக் கடைபிடிக்கும் வைணவர்கள் யாவர்க்கும் தலைவர் என்பது இதன் பொருள். திருமங்கை ஆழ்வார் கடைப்பிடித்த நெறியும் இதுவே|| (கலியன் குரல், ப. 114) என்பது பிரபக்தி நெறி பற்றிப் பேராசிரியர் தரும் விளக்கம் ஆகும்.

                இக்கருத்தின்வழி ;வைணவ சம்பிரதாயங்களில் சரணாகதி என்பது முக்கியமானது. அனைவராலும் எளிமைபட கைக்கொள்ளத்தக்கது என்பது தெரியவருகிறது. எனவே உயிர்கள் அனைத்தும் சரணாகதியாக ஆண்டவனைப் பெற்றால் கடைத்தேறுவது எளிது என்பது உறுதியாகின்றது.

                திருமங்கை ஆழ்வார் பிரபக்தி நெறியில் நின்றமைக்கு பெரிய திருமொழியில் உள்ள ஒன்பதாம் திருமொழியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார் ஒன்பது முறை தன்னை இத்திருமொழியில் அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார்.

                தாயேதந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்

                நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்

                வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா

                நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே (பெரியதிருமொழி-1028)

என்ற பாடலின் ஒருபகுதியை எடுத்துரைத்துப் பேராசிரியர் திருமங்கையாழ்வார் அடைக்கலப்படுத்திக்கொண்டமையை அடையாளப்படுத்தியுள்ளார். ~ஆனாய் வந்தமைடந்தேன், அன்றே வந்தடைந்தேன், அலந்தேன் வந்தடைந்தேன், அப்பா, வந்தடைந்தேன், அண்ணா, வந்தடைந்தேன், அரிய வந்தடைந்தேன், ஆற்றேன் வந்தடைந்தேன், அற்றேன் வந்தடைந்தான் என்று ஒன்பது பாடல்களில் தன்னை அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார் திருமங்கை ஆழ்வார். மேற்பாடலில் தாய், தந்தை, தாரம், கிளை, மக்கள் ஆகியோரின் தொடர்பினைக் கொண்டதால் நோயே பற்றியது. அவற்றை விடுத்து, எம்பெருமானே உன்னை அடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இது அடைக்கலப்படுத்துவதில் முதல்நிலையாகும். மேலும் இவரின் அடைக்கலப்படுத்தியத்தன்மைக்கு

                துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம், துறந்தமையால்

                சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே

                அறம்தான் ஆய்த்திரிவாய் உன்னைஎன மனத்தகத்தே

                திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே ( பெரிய திருமொழி. 1469)

என்ற மூன்றாம் பெரிய திருமொழிப்பாடலையும் காட்டுகிறார் பேராசிரியர். இதற்கு காஞ்சி பிரதிவாதி அண்ணங்கராசாரியார் எழுதிய உரை பின்வருமாறு. ~~ப்ராக்கருதர்களான அநுகூலரிடத்தில் அநுராகமும், ப்ரதிகூலரிடத்தில் பகையும் ஆபாஸபந்துக்களிடத்தில் உறவம் உள்ளவரையில் எம்பெருமாள் திருவடிகளில் அன்பு நிலை நிற்கமாட்டாதாதலால் அம்மூன்றும் தமக்கு ஒழிந்தமையை அருளிச் செய்து தேவரீர் திருவடிகட்கே அடியேன் தகுந்தவனாயினேன் என்கிறார். ~ப்ரித்யக்தா மாய லங்கா|| (விட்டொழித்தேன் இலங்கையை) என்ற விபீஷணாழ்வானைப்போல் அருளிச்செய்கிறார் காண்மின்|| என்ற கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

                அடைக்கலமாகின்றபோது, நண்பர்கள், பகைவர்கள், உறவுகள் ஆகியோர்களின் உறவுகளை விட்டொழித்து கடவுளைச் சரணடையவேண்டும் என்பது இத்திருமொழி வாயிலாகப் பெறப்படும் கருத்தாகும். அடைக்கலப்படுத்திக்கொள்வதில் இது இரண்டாம் படிநிலையாகும். அடுத்து,

                வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள்எந்தாய்

                ஆறா வெந்நகரத்து அடியேனை இடக்கருதி

                கூறா ஐவர்வந்து குமைக்க குடிவிட்டவரைத்

                தேறா துன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே|| (1464)

என்ற பாடலில் ஐம்புலன் ஆசைகள் விடுத்து வந்த உன்னை அடைந்தேன் என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். இதன்வழியாக அடைக்கலம் புகுமுன் ஐம்புல வேட்கையினை விட்டொழிக்கவேண்டும் என்று தெரிகிறது. ~~படைப்புக்காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்பலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன. அவற்றை  நம்பாமல் உன்னிடம் சரண் புகுகின்றேன். காத்தருள்க|| என்று இப்பாசுரத்திற்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். இது மூன்றாம் படிநிலையாகும்.

                நைமிசாரண்யத்து எம்பெருமானைப் பாடும்போதும் ~திருவடி அடைந்தேன்| என்று குறிப்பிட்டுப் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

                வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்ப்பொருள்தாரம் என்றிவற்றை

                நம்பினார் இறந்தால் நமன் தமர்ப்பற்ற எற்றி வைத்து எரியெழுகின்ற

                செம்பினாலியன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதர்க்கஞ்சி

                நம்பனே வந்துத் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

என்ற பாடலில் இழிவான செயல்களில் இருந்து மீண்டு பரம்பொருளை வந்தடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். தம் மனைவியைத் துறந்து, பிறன் மனைவி, பொருள் இவற்றை விரும்பும் ஒருவன் இறந்தால் அவனை எமதூதர்கள் வந்து இழுத்துச்சென்று,  செம்பின் குழம்பினால் செய்யப்பெற்ற தீப்பற்றி எரிகின்ற பொம்மையைக் கொடுத்துத் தழுவச் சொல்வார்கள் என்று தண்டனை அளிக்கப்பெறும் என்று ஆழ்வார் குறிக்கிறார்.. அதற்கு அஞ்சி நம்பன் திருவடி அடைந்தேன் என்று குறிக்கிறார் ஆழ்வார். இது நான்காம் படிநிலையாகும். பாவச்செயல்களைச் செய்பவன் பாவி. அவனை அழுத்திக் குறிக்க இப்பாசுரத்தில் பாவீ என்று நீட்டல் விகாரம் அளிக்கப்பெற்றுள்ளது. பாவங்களில் இருந்து நீங்கி நிற்பது என்பது அடைக்கலப்படுத்துவதில் நான்காம் நிலையாகும்.

                ஆழ்வாரின் பாடல்களை, தாய், தந்தை, மக்கள், நண்பர், எதிரிகள்,சுற்றம், ஐம்புலன்கள் ஆகிய தொடர்பினை அறுத்துக் கொண்டால் அடைக்கலம் பற்றுவது எளிது என்ற நிலையில் பேராசிரியர் வரிசைப் படுத்தித் தந்துள்ளார். மேலும் பாவச் செயல்களைப் புரியாது அதிலிருந்து மீண்டு ஆண்டவனை அடைக்கலமாகவேண்டும் என்ற நிலையையும்  ஆழ்வார் காட்டுவதை வெளிப்படுத்தியுள்ளார் பேராசிரியர். மேற்சுட்டப்பெற்ற நான்கு படிநிலைகளைக் கடந்தால் பரம்பொருளை அடைக்கலமாகலாம்.

நம்மாழ்வாரின் அடைக்கலநிலை

                திருமங்கை ஆழ்வாரின் அடைக்கல நிலையை எடுத்துரைக்க வந்த பேராசிரியர், அதனுடன் நம்மாழ்வார் தம்மை அடைக்கலப்படுத்திக் கொண்ட நிலையையும் எடுத்துரைக்கிறார். பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் உள்ளம் நம்மாழ்வார் பாடல்களில் தோய்ந்தது என்பதற்கு இப்பகுதி சான்றாகிறது. ~~சரணாகதித் தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்தர்களின் தலைவராக விளங்கும் நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய்மொழியில் ~நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்;ச்சடகோபன்|, (5.9.11) என்றும், கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்;ச்சடகோபன் (5.8.11) என்றும், தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ~எனக்கு நின் பாதமே சரணாகத் தெந்தொழித்தேன்|| (5.8.11) என்று எம்பெருமான் தமக்குச் சரணாக அமைந்தமையையும் ~உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே| (6.10.10) என்று தாம் எம்பெருமானின் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்துகின்றார்|| (கலியன் குரல், ப. 177)  என்ற குறிப்பு நம்மாழ்வாரின் சரணாகதி நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. வைணவத்தில் மிக முக்கியமான பக்தி நிலை பிரபக்தி நிலை என்பதை இக்கருத்துகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சரணாகதி நிலையின் பெருமை பற்றியும் அதனை அடைய உயிர்கள் தொடர்பற்று இருக்கவேண்டிய நிலையையும் திருமங்கை ஆழ்வாரின் வாக்கின் வழியாக எடுத்துரைக்கிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

பிரபத்தி செய்வோருக்கு வேண்டப்பெறுவன

                பிரபத்தி செய்வோருக்கு இரு நிலைகள் வேண்டப்பெறுகின்றன. அவை. 1. ஆகிஞ்சந்யம், 2. அநன்னியகதித்துவம் என்பனவாகும்.

ஆகிஞ்சநயம்

ஆகிஞ்சநயம்; என்பது, கன்ம ஞான பக்திகளாகின்ற மற்ற உபாயங்களின் தொடர்பற்று இருக்கை. அதாவது முன்னர் சொன்ன தாய்,தந்தை, பிள்ளைகள், உறவுகள். ஐம்புலன்கள் தொடர்பற்று இருத்தல். இவை திருமங்கை ஆழ்வார் வாக்கின் வழியாகவே இக்கட்டுரையில் விவரிக்கப்பெற்றுள்ளன.

அநன்னியகதித்துவம்

                அநன்னியகதித்துவம் என்பது ஆன்மா பதிகாப்பிற்கு எம்பெருமாளைத் தவிர வேறொரு காக்கும் பொருள் அற்றிருக்கை. இதற்கு திருமங்கை ஆழ்வாரின் ஒரு பாடலைச் சான்றாக்குகிறார் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்.

                குலந்தானெத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்

                நலந்தானொன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்

                நிலம்தோய் நீள முகில்சேர் நெறியார் திருவேங்கடவா

                அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (1031)

என்ற பாடலில் எம்பெருமானைத் தவிர வேறுயாரும் என்னை ஆட்கொண்டருள இயலாது என்று தெளிந்து உரைக்கிறார் திருமங்கையாழ்வார்.

                இவ்வகையில் கலிகாலத்தில் கலியன் குரல் கொண்டு எம்பெருமானை அடைய சரணாகதியே சிறந்தவழி என்று காட்டுகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *