வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

0

 

      

                ( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா) 

 

        செம்பவள வாய்திறந்து 

        சிரித்துநிற்கும் உன்முகத்தை

        தினமுமே பார்த்திருந்தால் 

        சிந்தனையே தெளிந்துவிடும்

        வந்தநோவும் ஓடிவிடும்

        வலியனைத்தும் மறைந்துவிடும்

        எந்திருவே உனையணைத்து

        என்னாளும் இன்புறுவேன் !

 

        முழுநிலவு வடிவான

        அழகுநிறை உன்முகத்தை

        முத்தமிட்டு முத்தமிட்டு

        மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே

        கொழுகொழுத்த கையாலே

        குறும்புநீ செய்கையிலே

        ஒழுகிவரும் இன்பமதை

        உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

 

        பொட்டுவைத்து தலைசீவி

        புதுச்சட்டை போட்டுனக்கு

        மெத்தையென என்மடியில்

        விரல்சூப்ப விட்டிருப்பேன்

        சூப்பிவிட்டு துப்புகின்ற

        எச்சிலெனை நனைக்கையிலே

        பார்க்கின்ற அத்தனையும்

        பரவசமாய் தெரியுமப்போ !

 

        மழலை  மொழிபேசி

        மயக்குவாய் எனைநீயும்

        மாமருந்தாய் வந்தமைந்த

        மாமணியே நீயெனக்கு 

        மாதவத்தால் உனப்பெற்றேன்

        வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்

        வையகத்தில் நான்வாழ

        வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *