செண்பக ஜெகதீசன்

 

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்        

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 

     -திருக்குறள் -134(ஒழுக்கமுடைமை)

 

புதுக் கவிதையில்…

கற்ற வேதத்தை அந்தணர்

மறந்திடினும்,

கற்றிடலாம் மீண்டும்,

ஆனால் அவர்தம்

குல ஒழுக்கம் கெட்டால்,

கெட்டிடும் எல்லாமே…!

 

குறும்பாவில்…

மறந்திட்டாலும் வேதத்தை

மீண்டும் கற்றிடும் அந்தணர்,

கெடுவர் குலவொழுக்கம் குறைந்தால் …!

 

மரபுக் கவிதையில்…

வேதம் ஓதிடும் வேதியர்க்கு

     வேதம் மறந்தே போனாலும்

வேதனை யேதும் வாராது

   ஓதிட மீண்டும் கற்றிடலாம்,

பாதக மாகிக் கெட்டழிவார்

  பரிவுடன் அவர்தம் முன்னோர்கள்

பாது காத்த குலவொழுக்கப்

   பண்பு தன்னை மறந்தாலே…!

 

லிமரைக்கூ…

மறந்தாலும் கற்றிடலாம் வேதம்,

அந்தணாளர் மறந்திட்டால் குலவொழுக்கம்

அடைவார் வாழ்வில்பெரும் சேதம்…!

 

கிராமிய பாணியில்…

பாதிப்பில்ல பாதிப்பில்ல

அய்யருக்குப் பாதிப்பில்ல,

மந்திரந்தான் மறந்துபோனாலும்

முழுசா பெரிய பாதிப்பில்ல,

மறுபடி பாத்துப் படிச்சிக்கலாம்..

 

ஆனா

கெட்டுப்போவும் கெட்டுப்போவும்

வாழ்க்கயெல்லாங் கெட்டுப்போவும்

அவுரு

கொலத்து ஒழுக்கம் கொறஞ்சிபோனா,

கெட்டுப்போவும் கெட்டுப்போவும்

எல்ல்லாமே கெட்டுப்போவும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *