அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 66

0

சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

முனைவர்.சுபாஷிணி

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு உடல் நோய்களுக்குக் காரணமாக உளவியல் பிரச்சனைகளே அமைகின்றன. வெளிப்படையாக உடலில் தோன்றும் நோய்கள் என்பன சில. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பல நோய்கள் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கின்ற சங்கடங்கள், பீதிகள், அச்சங்கள், வேதனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வலிகள், தோல்விகள் ஆகியவற்றின் தேக்கத்தினால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. இவற்றின் மூலத்தை அறியும் முயற்சியில் சமயஞானிகளும் விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபடுவது என்பது தொன்று தொட்டு நிகழ்வதைக் காண்கிறோம்.

as6

ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் உலகப் புகழ்மிக்க அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கனவற்றுள் ஒன்றாகத் திகழ்வது உளவியல் நிபுணரும் நரம்பியல்துறை வல்லுனரும் சைக்கோ-அனாலிசிச் எனச்சொல்லப்படும் உளவியல் ஆய்வுத்துறைக்கான வழிமுறைகளை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு உலகப்புகழ் பெற்றவருமான சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகம்.

இவரது ஆய்வு முறையானது ஒரு ஆய்வாளர் ஆழ்மனத்தில் படிந்து கிடக்கும் நினைவுகளின் முரண்பாடுகளை தனித்தனியாகப் பிரித்து அலசி ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வில், உளவியல் பாதிப்புக்குள்ளானவரின் மனதில் எழும் கற்பனை உலகங்களும், கனவுகளும் நுணுக்கமான ஆய்வுப் பொருட்களாக கையாளப்படும். இவரது ஆய்வுகளில் மிகக் குறிப்பாக சிறு குழந்தைகளின் தன்னைப்பற்றிய சுய எண்ணம், காமம் தொடர்பான உளப்பிறழ்ச்சிகள், சுயசிந்தனை என்பவை மைய ஆய்வுப் பொருட்களாகக் கையாளப்படுவன என்பது குறிப்பிடத்தக்கது.

as5

​​சிக்மண்ட் பிராய்டு – சில புகைப்படங்களின் தொகுப்பு

வியன்னா நகரின் மையப்பகுதியிலேயே பார்லிமென்ட், அரச அலுவலகங்கள், நூலகம் அனைத்தும் இருக்கும் பகுதியில் சற்று தள்ளி இருந்தாலும் நடக்கும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றது இந்த அருங்காட்சியகம். அவர் வாழ்ந்து ஆய்வு செய்த கட்டிடமே இன்று அவரது நினைவைப் பறைசாற்றும் நினைவு மாளிகையாகவும் அருங்காட்சியகமாகவும் திகழ்கின்றது.

இன்றைக்கு செக் ரிபப்ளிக் நாட்டின் ஒரு நகரமாகத் திகழ்ந்த ஃப்ரைபெர்க் (Freiberg) நகரில் இவர் 1856ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி பிறந்தார். தமக்கு ஐந்து வயதாகும் போது இவரது குடும்பத்தினர் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவிற்கு குடி பெயர்ந்தனர். அது தொடங்கி வியன்னாவிலேயே இவரது வாழ்க்கை அமைந்தது. 1881ம் ஆண்டில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். இவரது ஆறாவது மகள் அன்னா, இவரைப் போலவே உலகப்புகழ்பெற்ற உளவியல் ஆய்வுத்துறை நிபுணராகத் திகழ்ந்தார். இந்த சிக்மண்ட் பிராய்டு அருங்காட்சியகத்தில் இவர்கள் இருவருடையதுமான ஆவணங்களும் ஆய்வுக் குறிப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

as4

​சிக்மண்ட் பிராய்டு அமர்ந்து பயன்படுத்திய நாற்காலி

முதலில் இவரது ஆய்வுகள் ஹிஸ்டீரியா நோயாளிகளைப் பற்றியதாக அமைந்தது. பின்னர் அந்த ஆய்வுகளிலிருந்து விடுபட்டு கனவுகள் பற்றிய ஆய்வுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1900 ஆண்டு, The Interpretation of Dreams என்ற நூலை வெளியிட்டார். தொடர்ச்சியான ஆய்வின் பலனாக 1901ம் ஆண்டில் The Psychopathology of Everyday Life என்ற நூலையும் 1905ம் ஆண்டு Three Essays on the Theory of Sexuality என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். ஆரம்ப நிலையில் இவை பெருமளவிலான வரவேற்பைப் பெறவில்லை. ஆயினும் 1909ம் ஆண்டு அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவு செய்ய அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இவரது Five Lectures on Psycho-Analysis வெளிவந்தது. இவை அவரது புகழை உயர்த்தின.

as3

​​சிக்மண்ட் பிராய்டு பயன்படுத்திய பார்வையாளர்கள் அறை

சிக்மண்ட் பிராய்டு அவர்களின் ஆய்வுகள் உலகளவில் உளவியல் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தன. எந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் புகழப்பட்டனவோ அந்த அளவிற்கு அவரது ஆய்வுகள் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாக்கப்பட்டன. ஆயினும் அவரது ஆய்வுகள் எட்டிய ஆழத்தை இத்துறையில் வேறு ஆய்வு முறைகள் எட்டினவா என்பது கேள்விக்குறியே.

சிக்மண்ட் பிராய்டின் இறுதிக் காலம் சோகம் நிறைந்ததாகவே அமைந்தது. அவருக்குத் தொண்டைப்புண் நோய் ஏற்பட்டு அது புற்று நோயாக மாறி அவரது உடலில் வலிமையைக் குறைத்தது. மருத்துவர்களிடம் வேண்டிக் கேட்டு அதிகப்படியான மயக்க மருந்து கொண்ட மாத்திரைகளை விழுங்கி அவர் 1939ம் ஆண்டில் தான் நாடு கடந்து வசித்து வந்த இங்கிலாந்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு!

as2
​​சிக்மண்ட் பிராய்டு அலுவலகம் – தற்சமயம் காட்சிக் கூடமாக உள்ளது

மலேசியாவில் என் இளம் வயதில், மறைந்த உளவியல் அறிஞரும் தமிழறிஞருமான டாக்டர்.லோகநாதன் அவர்களின் இலவச உளவியல் வகுப்புகளில் பாடம் கேட்ட காலங்களில் சிக்மண்ட் பிராய்டு பற்றி அடிக்கடி நான் அவரது வகுப்புகளில் கேள்விப்பட்டதுண்டு. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து மறைந்த டாக்டர்.லோகநாதன் அவர்கள் சிக்மண்ட் பிராய்டு அவர்களின் ஆய்வு முறை வழியில் உளவியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

as1
​​சிக்மண்ட் ப்ராய்ட் – வீட்டு வாசலில்

சிக்மண்ட் பிராய்டு அவர்களது ஆய்வு முறைகள் மனிதகுல உளவியல் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகாணும் வழிமுறைமைகளை உலகுக்கு வழங்கியுள்ளன . இவர் போற்றப்பட வேண்டிய உலக ஆய்வாளர்களின் வரிசையில் தனியிடத்தைப் பெறுபவர்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *