உமையாள் திருப்புகழ் – 4
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
தனத்த தந்தன தனதன தனதன
…தனத்த தந்தன தனதன தனதன
……தனத்த தந்தன தனதன தனதன – தனதானா !
செழித்த மஞ்சளொ டழகுடை நுதலினிற்
…சிவக்க குங்கும மணிபெற அணிபவள்
……சிவத்தி னங்கமு முடையவ ளுமையவள – ளடிபேணிச்
சிறக்கு மந்நிலை அடையுக விரையுக
…சிவத்தி னுள்பொரு ளறியுக உயருக
……சிதைக்கு மின்னலு மவளடி சரணெனின் – கடிதேகும் !
கொழித்த கொங்கையு மதரமு முடலினில்
…குதிக்கு மங்கியு குழைகளு மிடையினில்
……குறுக்க ணிந்திடு மணிகளு மதிசயப் – பொருளாகும்
கொடுக்க நல்வர மிழிவொடு துயரினைக்
…கெடுக்க வென்றவ ளழகினைத் தொழுதிடக்
…….கொதிப்ப டங்கிடு மழிவுக ளழிவதை– உணர்வோமே !
வழித்த டந்தனி லுமையவ ளதுபெயர்
…விளிக்க வந்திடு மொருபுது பலமொடு
……விழிக்கு ளிங்ஙண மரிதெனு மறிவென – உணர்ந்தேதான்
வளத்தை நல்கிடு முலகதின் கதியெனும்
…வனக்கொ ழுந்தினை மதியினுள் நிறுவுக
……வருத்த மன்னையி னருளடி தொழுதிட – வுடனோடும்
சுழித்த கங்கையுஞ் சுடர்விடு மதியொடு
…சுழற்றும் வெஞ்சின விழியது முடையரண்
…..சுவைக்கு மெல்லித ழுடையவ ளுமையவ – ளெனநாடி
சுகத்தைத் தந்திடு வெனமொழி பகருக !
…சொடுக்கி யின்னலைக் களையுக வெனுந்தினம்
……சுடர்க்க தம்பவி ழியினருள் பொழியுவ – ளுமையாளே !