தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்
பவள சங்கரி
தலையங்கம்
தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான ஒரு செய்தி என்றால் அது எந்த ஒரு புதிய வரிவிதிப்பும் இல்லை என்பதுதான். மற்றபடி இந்த நிதிநிலை அறிக்கை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. தொழில் வளர்ச்சிக்குரிய அறிவிப்புகளோ அல்லது உள் கட்டமைப்பு வளர்ச்சிக்குரிய அறிவிப்புகளோ ஏதுமில்லை. புதிதாக தொழில் முனைவோர்கள் அல்லது தொழிலகங்களின் வளர்ச்சிகளையோ உற்சாகப்படுத்துவதற்கான அறிவிப்புகளும் ஏதும் இல்லை. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில இலவசங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகள் மட்டும் காணப்படுகின்றன. இரண்டரை இலட்சம் கோடி கடன் சுமையைக் குறைப்பதற்கான எந்தவிதமான வழிவகையும் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் சார்பில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதற்கோ அல்லது அரசால் நிர்வகிக்கப்படக்கூடிய தொழிற்சாலைகளின் உற்பத்தியை பெருக்குவதற்குரியதான அறிவிப்புகளும் ஏதும் இல்லை. தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பஞ்சாலைகளில் உற்பத்தித் திறனை மேம்படுத்தி இலாப நோக்கில் செயல்படுத்தும்விதமாகவும், வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதற்கும்கூட எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லை. மற்றபடி இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.