ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர்
மீ.விசுவநாதன்
மலரினால் பூசை செய்யும்
வகைநா(ன்) அறிந்தே(ன்) இல்லேன் !
சிலரது அறிவைப் போல
சிறிதும் கொண்டேன் அல்லேன் !
பலவகை திரியும் எண்ணம்
படிந்த பாவி நானும்
குலகுரு உந்தன் பாத
குணத்தில் கரைந்து போனேன் !
மனதிலே மாசு நீங்க
மௌன மொழியால் நித்தம்
முனகிடு குருவின் பேரை ,
மூச்சுப் பயிற்சி யாலே
சினமிலா பண்பு ஓங்கும் ,
சிந்தைத் தெளிவு காணும்
எனவொரு வழியைச் சொல்லி
எனக்குள் வந்த ஞானி !
உலகிலே வந்து விட்டேன்
உற்ற துணையைத் தேடிப்
பலமுறை அழுது விட்டேன்
பலம்நீ என்று நம்பி
நிலவொளி ஒத்த உந்தன்
நினைவில் பற்று வைத்தேன்
இலையெனத் தள்ளி டாமல்
என்னுள் வரவு மானாய் !
உருகியே உள்ளன் போடு
உதவி எனவே கேட்டால்
இருவினை தீரும் வண்ணம்
இவரே அள்ளிக் கொடுப்பார் !
“அபிநவ வித்யா தீர்த்தர்”
அருளை வேண்டும் பக்தன்
கவிதனை ஏற்றுக் கொண்டு
கருணை பொழிவார் சத்யம் !