வாழ்த்துவோம் வாழுவோம்!
எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா
சிரித்து மகிழ்கின்ற நிலையானது மனிதனுக்கு மட்டுமே சிறப்பான ஒன்றாகும். விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரியாது.மனிதனைப்போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ அதனை அனுபவிக்கவோ தெரியாது. அதுபற்றி எதுவுமே புரிந்து கொள்ளும்நிலையிலும் அவைகள் இருப்பதில்லை. ஆனால் மனிதர்களில் பலர் தமக்கு கிடைத்த இந்த அருமையான பண்பினை உணருவதே இல்லை.
ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற வேளையில் முதலில் அவரைப்பார்த்து ஒரு புன்முறுவலையாவது செய்யவேண்டும். நலமாக இருக்கிறீர்களா என்று ஒரு வார்த்தையாவது பேசமுயலுதல் வேண்டும். இப்படிச் செய்கின்றவர்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். அவரைப் பார்த்து நாம் ஏன் சிரிக்க வேண்டும்? அவரிடம் ஏன் நலன்விசாரிக்க வேண்டும்? இதனால் பெரிதாக என்னதான் வந்துவிடப் போகிறது என்று எண்ணுகின்ற மனப்பாங்கே அதிகம் இருப்பதைக் காண்கின்றோம்.
நண்பர் ஒருவரைச் சந்திக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களுக்குப் பின்னர்அவர்எதிர்படுகின்றார். கண்டவுடன் முதலில் சிரித்தால் அவர் மகிழ்ச்சிப் படுவார் அல்லவா? அவரைப் பற்றி அக்கறையுடன் அன்பாக நாலு வார்த்தை விசாரித்தால் மேலும் மனமகிழ்வார் அல்லவா? அவர் சொல்லுவதை அக்கறையுடன் கேட்டு அதற்கு இயைபாக நாமும் பேசினால் குறைந்தா போய்விடுவோம்! நாம் பேசும் வார்த்தைகள் நண்பரின் மனத்துக்கு இதமாக அமையுமானால் அவரின் முகமும் மலரும். அதே வேளை அவரது அகமும் மலரலாம் அல்லவா!
அதைவிடுத்து அவரைக் கண்டும் காணாமல் போவதும், கண்டு அவர் பேச்சுக் கொடுத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிக்கும் நிலையில் இருப்பதும், அவர் புன்முறுவல் காட்டிய போதிலும் வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொள்ளலும், பண்பாகுமா அல்லது மனிதனுக்கு அடுக்குமா ?
அவர் நமக்கு முன்னர் ஏதாவது மனம்நோகச் செய்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் நண்பராக இருந்திருக்கிறார். நீண்ட நாளின் பின்னர் சந்திக்கின்றார். அப்பொழுது பழைய விஷயங்களை மனதில் ஏற்றிக்கொண்டு பாராமுகமாக, பண்பில்லாமல் நடப்பது என்பது சரியானதா என்பதை சற்று நின்று நிதானித்துப் பார்ப்பது அவசியமாகிறது அல்லவா?
ஒருவருடைய வீட்டுக்குப் போகின்றோம். அங்கு சிலவேளை நமக்கு பிடித்தமில்லாத சாப்பாடுகள் தரப்படலாம். நமக்கு பிடிக்காத சூழல்கூடக் காணப்படலாம்.ஆனால் நாம் சிரித்து மகிழ்ந்து அங்கே அவர்களுடன் உறவாடும்பொழுது அவர்களும் மகிழ்வார்கள். அங்கே நல்லதொரு சூழலும் உருவாகியிருக்கும்.
அதை விடுத்து யாவற்றையும் விமர்சனம் செய்து அவர்களை அசெளகரியத்துக்கு ஆளாக்குவோமேயானால் நமக்கு கிடைக்கும் இலாபம் தான் என்ன? நாம் உயர்ந்தவர்கள் ஆகிவிடுவோமா ? மற்றவர்களை வாழ்த்த வேண்டுமே அன்றி அவர்களை வீழ்த்தும் வகையில் நடந்து கொள்ளுதலை விட்டுவிடுதல் தான் சிறந்த பண்பு எனலாம்.
ஒருவரை சந்திக்கின்றோம். சில வேளை அடுத்த விநாடியோ அல்லது அடுத்த ஒரு மணி நேரத்திலோ அல்லது அடுத்த நாளோ கூட அவர் இந்த உலகத்தை விட்டு இல்லாமலும் போகலாம். சந்திக்கும் நமக்கும் அந்தநிலை வந்தாலும் வந்திடலாம்.
இதனால் முதல் சந்திப்பு இருவருக்குமே முடிவான சந்திப்பாகவும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதலால் கிடைக்கும் பொழுதை நல்லதாக்க செய்வதுதான் மிகவும் உயர்ந்த வாழ்க்கை முறை எனலாம்.
எதனை நாம் மற்றவர்களுக்கு வழங்குகின்றோமோ அதுவே நமக்கும் வந்து சேரும். அன்பையும், பாசத்தையும், ஆதரவையும், கருணையையும், மகிழ்ச்சியையும், புன்சிரிப்பையும், ஆறுதலான இனிமையான வார்த்தைகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வழங்கிப் பாருங்கள் கிடைத்தவர்களும் திருப்தி அடைவார்கள். கொடுத்த நாமும் பெருந் திருப்தியைப் பெற்று விடுவோம்.இது பெரிய தத்துவமாக இருக்கிறது அல்லவா?
சமயங்களும், சமயப் பெரியவர்களும் இதனையே நாளும் பொழுதும் நமக்கு சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் விதங்கள் வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளார்ந்த தத்துவங்கள் இவையாகத் தான் இருக்கின்றன.
மனிதர்களிடயே மகிழ்ச்சியைக் காண்பது அரிதாகவே இருக்கிறது. மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டவர்கள் தான் அநேகம் பேராவர். மகிழ்ச்சியத் தேடி அதற்காகப் பல மருத்துவ முறைகளையும் மருந்துகளையும் நாடுவதை நடைமுறையில் நாளும் காணக்கூடியதாக இருக்கிறது.
இதற்கெல்லாம் அடிப்படை ஒவ்வொருவர் மனங்களிலும் நல்ல பண்புகள் உதயமாகாமையும் , அதைப் பற்றி அக்கறை கொள்ளாமையுமேயாகும். சிரிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெருவரமாகும். முகமலர்ச்சியுடன் இருந்தாலே முயற்சியெல்லாம் சிறப்பாகும். மற்றவராலும் மதிக்கப்படுவோம். மற்றவர்களது விருப்பமும் நம் மேல் வந்துகுவியும்.
புறக்கணிப்பு என்பதை எவருமே பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். புறக்கணித்தல் எனும் குணத்தை புறந்தள்ளல் அவசியமே. விமர்சனம் எனும்பெயரால் வீண்வாதம் எழுகிறது. வீண்வாதம் முற்றிவிடின் விபரீதம் விளைந்துநிற்கும். இலக்கியத்தை விமர்சியுங்கள். எழுதுக்களை விமர்சியுங்கள். எழுதிநிற்கும் மனிதர்களை விமர்சிக்க முயலவேண்டாம்.
பலவீனமுடையாரை பலவீனமாக்கல் நல்லதல்ல. பலவீனமாக்க முயன்றால் நம்மையும் பலவீனம் பிடித்துக் கொள்ளலாம். விமர்சனம் செய்வது இலகுவானது. அதனை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல.ஆகவே விமர்சனத்தை எல்லாருக்கும் , எல்லாவற்றுக்கும், எல்லா இடத்தும் செய்வது உகந்த செயலும் அல்ல.
செய்யக்கூடாது என்றவுடன் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் வரும். தொடக்கூடாது. பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, என்றெல்லாம் சொல்லும்பொழுது – சொல்லுவதற்கு எதிராகவே செய்யவேண்டும் என்னும் எண்ணம் உருவாவதையும்
நாளாந்த வாழ்க்கையில் காணுகின்றோம். சொன்னவை சரியானதாக இருந்தாலும் இங்கே சொல்லும் முறைதான் சிக்கலுக்கு வழியாகி நிற்கிறது.
ஆகவே சொல்லும் வழியை கட்டாயம் மாற்றவேண்டும். செய்யக்கூடாது என்னும் வார்த்தையினை எடுத்துவிட்டு – இப்படிச்செய்தால் நன்மையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன் என நயமாக – கட்டளையாக இல்லாமல் சொன்னால் நிச்சயம் நினைத்த கருமம் நிறைவேறுவது இலகுவாகிவிடும். அதைவிடுத்து ‘செய் அல்லது செத்துமடி ‘ என சர்வாதிகார தோரணையில் சொன்னால் இருப்பதுகூட இல்லாமலேயே போனாலும் போய்விடலாம். சொல்லும் விதம்தான் மிகவும் முக்கியம் என்பதை எல்லோரும் மனத்தில் இருத்துவது மிகமிக அவசியமானதாகும்.
இருண்ட மனமும், இருண்ட வார்த்தைகளும், இடருக்கு வழியாக அமைந்தே விடுகின்றன. தெளிந்த மனமும், திறந்த வார்த்தைகளும், செம்மைக்கு வழிசமைத்து விடுகின்றன. விற்பனை நிலையங்களிலே வேலைபார்க்கின்றவர்கள் – தங்களுக்கு எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் வருகின்ற மக்களை இன்முகத்துடன் வாருங்கள் !
உங்களுக்கு என்ன தேவை என்று புன்முறுவலுடன் தான் வரவேற்று நிற்கிறார்கள்! வருகிறவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உறவினராகவோ இருக்க மாட்டார்கள், என்றாலும் முகமலர்ச்சியுடன் வரவேற்பது அங்கு போகும் அனைவருக்கும் அகமகிழ்வை ஏற்படுத்துவதாக அமைகிறதல்லவா ? இது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறதல்லவா?
பலபட்டங்கள் பெற்று உயர்பதவிகளில் இருந்தாலும் முகமலர்ச்சியுடன் இருக்க முடியாவிட்டால் படித்த படிப்பும்,பார்க்கும் பதவிகளும், பயனற்றதாகிவிடாதா?
“அகத்தின் அழகு முகத்திற் தெரியும்” என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் அகத்தை மட்டும் அசையாமல் வைத்தும் இருக்கின்றோம். எனவேதான் நம் அகத்தின் இயலாமையை மற்றவரிடம் பிரதிபலித்து நின்று விடுகின்றோம். படிப்பு, பதவி, பணம், அந்தஸ்தத்து இருந்தாலும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வாங்கிவிட முடியுமா? இவைகள் அனைத்தும் நிறைந்தவர்களிடம் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பற்றிப் பேசினாலே அதற்கும் சேர்த்து விலைபேசும் நிலையிலேதான் அவர்கள் காணப்படுகிறார்கள்.
வாழ்க்கையிலே கிடைக்கவேண்டியது அனைவருக்கும் மகிழ்ச்சியும் நல்ல முகமலர்ச்சியுந்தான். இதனைக் கொடுத்தால் தான் பெற்றுக்கொள்ள முடியும். தேடியெங்கும் ஓடவேண்டாம். பணம் கொடுத்தும் வாங்கவும் வேண்டாம். யாவும் உங்களிடம்தான் இருக்கிறது. வெளியில் கொண்டு வருவதுதான் கஷ்டமாக இருக்கிறது.
எனவே சிரித்து வாழுவோம். சிரிக்க வாழ்ந்திடாமல் சிறக்க வாழுவோம் !
காணும் பொழுதெல்லாம் கைகுலுக்கி , கண்களால் மகிழ்வைக்காட்டி , அன்றலர்ந்த தாமரையாய் அகமும் முகமும் மலர இன்று முதல் செய்து பாருங்கள் எல்லாமே இனிப்பாயும் இன்பமாயும் தெரியும் !