செண்பக ஜெகதீசன்

 

விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்         

கற்றாரோ டேனை யவர்.   

               -திருக்குறள் -410(கல்லாமை)

 

புதுக் கவிதையில்…

அறிவுதரும் நூல்பல

கற்றவரேர்டு

கல்லாதவரை ஒப்பிடுகையில்,

கல்லாதவர்

விலங்குகளுக்கும் மாந்தர்களுக்குமுள்ள

வேறுபாட்டை உடையோரே…!

 

குறும்பாவில்…

கல்லாதவரை அறிவுநூல் பலவும்

கற்றவரோடு ஒப்பிடுகையில்,  

விலங்குக்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடுதான்…!

 

மரபுக் கவிதையில்…

அறிவைத் தந்திடும் நூல்பலவும்

ஆர்வ முடனே கற்றவரை,

நெறிமுறை யில்லாக் கல்லாரொடு

நேர்மை யாக ஒப்பிட்டால்,

அறிந்து கொள்வாய் உண்மைதனை

ஐந்தே அறிவுடை விலங்குகட்கும்

அறிவது ஆறுடை மாந்தருக்கும்

அளவி லுள்ள வேறுபாடே…!

 

லிமரைக்கூ…

கல்லாதவரை நூல்கற்றோருடன் ஒப்பிடு

காண்பாய் விங்குகட்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடு,  

உண்மைதான் யிதுவெனச் செப்பிடு…!

 

கிராமிய பாணியில்…

படிக்கணும்படிக்கணும் நல்லாப்படிக்கணும்

பகுத்தறிவு வளர நல்லாப்படிக்கணும்..

 

கல்வி அறிவு இல்லாதவனுக்கும்

பலபல நூலப் படிச்சவனுக்கும்

இதுதான்பாரு வித்தியாசம்..

அஞ்சறிவு மிருகத்துக்கும்

ஆறறிவு மனுசனுக்குமுள்ள வித்தியாசந்நதான்..

 

அதால,

படிக்கணும்படிக்கணும் நல்லாப்படிக்கணும்

பகுத்தறிவு வளர நல்லாப்படிக்கணும்,

பொல்லாதது பொல்லாதது

கல்லாம பொல்லாதது…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *