பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி
நாகை வை. ராமஸ்வாமி
அரும் பெரும் ஐயாறு தியாகராசனும்
மூவரில் பெருமைமிகு முத்துசாமியும்
சீர்மிகு சிங்காரி நீலாயதாக்ஷி யுனை
பாரும் அடி பணிய பாடினரே பாராட்டி
பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி
சிவராஜதானி கொலுவுறும் சிவமய ராணி
புவனம் காக்குமுன் பூந்தளிர் பதம் போற்றி
தவமுடன் பாடிட எனக் கருள் தந்தனையே
குவலயம் போற்றும் பாலா நீலாயதாக்ஷி
பாலும் தேனும் பஞ்ச அமிர்தமுடன்
கோலாகலமாய் சுகந்த நீரும் கலந்துன்
காலடி சேர்த்தோம் ஏற்றிடுவாய் என்னம்மே
கந்தனும் அண்ணனும் தந்தை தாய் உடனிருக்க
நந்தியவன் மெய்மறந்து சுற்றியே வலம் வர
விந்தைக் கோலமதை புந்தியதில் பதித்தனனே
சிந்தையில் வந்தமரும் சிந்தூர வண்ணவளே
என்றும் பாவமுடன் ஏலாதிருக்கு மெனை
இன்பமுடன் நின் திருவடி நினைத்திட
அன்பும் அருளும் தயையும் தந்திடுவாய்
பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி